பெண்கள், தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு எதிராக தமிழ்நாடு உயர்கல்வித் துறை…? – அதிகாரிகள் கையில் அரசின் கொள்கை முடிவுகள்…!?
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வு ( TNSET) தேர்வு, கடந்த 2018 – லிருந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2025- மார்ச் 6,7,8 & 9 தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள SET தேர்வுக்கான வழிகாட்டுதல் – 2023 ன் படி ( UGC Updated Regulations 2023 for SET Exams) “ ‘அந்தந்த மாநில அரசுகள் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம் ‘ எனும் விதிமுறையைப் பின்பற்றி தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள “தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீட்டை இத்தேர்வில் வழங்க வேண்டும்” என தமிழ்வழியில் கல்வி பயின்ற தேர்வர்கள் தொடர்ந்த வழக்கானது, 29-04-2025 அன்றைய விசாரணையில் அரசின் கொள்கை முடிவுக்காக கால அவகாசம் வழங்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக UGC தரப்பு வழக்கறிஞருக்கு “Memo for Appearance” 09-06-2025 அன்று வழங்கப்பட்டுள்ளது.
29-04-2025 அன்றைய விசாரணையில் “ தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு என்பது Horizontal Reservation ( கிடைமட்ட இட ஒதுக்கீடு) ; ஆகவே இங்கு வழங்க வேண்டிய தேவையில்லை” என தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதம் என்பது இட ஒதுக்கீடு கொள்கையினை நீர்த்துப் போகச் செய்வதற்கான முதல் படி.
ஏனெனில் பெண்களுக்கான 30 % இட ஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு என இவை மூன்றும் Horizontal Reservation. BC, MBC, SC, ST பிரிவினர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த 69% இன சுழற்சி ஒதுக்கீடு என்பது Vertical Reservation. அரசின் கொள்கை முடிவுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக அரசின் முடிவு என்ன என்பது ஒரு மாதத்திற்கு மேல் கடந்தும் இப்போதும் தேர்வர்கள் மத்தியில் தெளிவில்லாத நிலையே நீடிக்கிறது.
சமூக நீதி முன்னேற்றப் பாதையில் மற்ற மாநில அரசுகள்… ! பின்னோக்கிப் போகும் திமுக அரசு… ?
‘ செட்’ தேர்வுகளில் Horizontal Reservation கொடுக்க திமுக அரசு தயங்கும் நிலையில், மற்ற மாநிலங்கள் இத்தேர்வுகளில் இட ஒதுக்கீடு பின்பற்றுவதில் பல படிகள் முன்னேறி உள்ளன . தெலுங்கானா மாநிலம் பெண்களுக்கும், மகாராஷ்டிரா மாநிலம் ஆதரவற்றோர்களுக்கும் ( Orphans-அனாதை) , மேற்கு வங்காள மாநிலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும்( Transgender) என மாநில அளவில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையினை “UGC வகுத்துள்ள SET தேர்வு விதிமுறைகளை” பின்பற்றி மாநில அளவில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கைப்படி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பறிபோகிறது தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களின் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் – சத்தமின்றி அரங்கேறும் சமூக அநீதி – சபாஷ் கோவி. செழியன்… !

கடந்த 2013 – ஆம் ஆண்டிற்கு பிறகு, அதாவது 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு(2025) தமிழ்நாடு முழுவதும் உள்ள 180 -அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 -உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வினை , SET -தேர்வு முடிவுகளை வெளியிட்ட பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது. இந்நிலையில் தமிழ்வழியில் கல்வி பயின்றோருக்கான 20 % இட ஒதுக்கீடு சட்டம், 2010- அடிப்படையில் மொத்தமுள்ள 4000 -உதவி பேராசிரியர் பணியிடங்களில் பல்வேறு பாடப் பிரிவுகளில் சுமார் 800 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் தமிழ்வழிக் கல்வி பயின்ற தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட ‘ செட்’ தகுதித் தேர்வில் தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீடு வழங்காமல் போனால், அதன் விளைவாக உதவிப் பேராசிரியர் பணிவாய்ப்புக்கான போட்டித் தேர்வில் தமிழ்வழிக் கல்வி பயின்ற பணிநாடுநர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை இயல்பாகவே குறையும்.
அதன் அபாயகரமான விளைவு என்பது 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்வழிக்கல்வி பயின்றோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 800 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் போதிய பணிநாடுநர்கள் இல்லை என காரணம் காட்டி , அதில் பல பணியிடங்கள் ஆங்கில வழியில் பயின்ற பணிநாடுநர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும் அவல நிலைக்கு கொண்டு செல்லும். பள்ளிக் கல்வியில் ஒன்றாம் வகுப்பு முதல் உயர்கல்வியில் முதுகலை வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் பணிவாய்ப்பும், தற்போது தமிழ்வழியில் படிப்பவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும்.
அதிகாரிகள் கையில் கொள்கை முடிவுகள்- கலைஞர் கருணாநிதிக்கு இழைக்கப்படும் துரோகம்… ?
தமிழ்நாடு அரசுக் கொள்கைப்படி நடைமுறையில் உள்ள Vertical Reservation – ஆன 69% இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் Horizontal Reservation -க்கு உட்பட்ட பெண்களுக்கான 20%இட ஒதுக்கீடு , தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீடு ஆகிய சமூக நீதி அடிப்படையில் திராவிட அடித்தளத்தில் அமைந்த இட ஒதுக்கீடு கொள்கையினை பின்பற்றுவதில் தயக்கம் காட்டாமல் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் உறுதியுடன் செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களுக்கு பதிலாக கொள்கை முடிவுகள் அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்படுமானால் மாநில சுயாட்சி பேசும் திமுகவுக்கு அது உவப்பானதல்ல.

அதிகாரிகள் சொல்லும் சாரமில்லாத நிர்வாகக் காரணங்களால் இட ஒதுக்கீடு கொள்கை சாரமிழப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அதிகாரம் பெற்ற அமைச்சருக்கும் அழகானதல்ல.” வெளியே விவாதங்களில் திராவிட மாடல் அரசு, எல்லோருக்கும் எல்லாம், சமூகநீதி கொள்கை, பெரியார் மண் என கோஷங்கள் காதைத் கிழிக்கின்றன. ஆனால் பின்னணியில் பல்வேறு குளறுபடிகள், சமூக நீதிக்கு எதிரான ஊடறுப்பு வேலைகள் , அதிகாரிகள் லாபி, அமைச்சரின் தயக்கம் என அதன் தொடர்ச்சியாக “ கலைஞர் கருணாநிதி கொடுத்த இட ஒதுக்கீட்டை கூட பின்பற்றத் தயங்கும் திமுக அரசின் உயர்கல்வித் துறை என்பது நகைமுரண் மட்டுமல்ல; ஒருகாலத்தில் இனமான பேராசிரியர் க. அன்பழகன் நிர்வகித்த துறையின் இன்றைய அவலநிலை.
“தமிழ் வழியில் படித்தவர்களுக்கு கல்வியறிவு தரமானதல்ல” என்ற பொதுப்புத்தி, Horizontal Reservation இங்கு பொருந்தாது” என சொல்லும் இல்லாத விதிமுறைகளின் விளையாட்டு காரணங்கள்” என இவையெல்லாம் ஒதுக்கப்பட்டு “ Vertical Reservation – Horizontal Reservation “ என எந்தவித பாகுபாடுகளுமின்றி எந்த ஒன்றும் விடுபடாமல், தமிழ்நாடு அரசானது நடைமுறையில் பின்பற்றும் இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் முழுமையாக பின்பற்றி “செட் தகுதித் தேர்வு “ முடிவுகள் வெளியிடப்படுவதை சம்பந்தப்பட்ட உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனும் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் உறுதிசெய்வது கொண்ட கொள்கையின் கடமை. அதற்கு மாறாக மக்கள் பிரதிநிதிகளின் துணிச்சலான கொள்கை முடிவுகள் இன்றி , அதிகாரிகள் லாபியில் தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடானது கேள்விக் குறியாக ஆகுமானால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு காரணமான தமிழ்நாட்டிற்கும் அதை சாத்தியமாக்கிய தந்தை பெரியார், அவரது சமூகநீதி வழியில் வந்த அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கு திமுக ஆட்சிக் காலத்திலேயே இழைக்கப்பட்ட துரோகமின்றி வேறென்ன… . . .?