Retro Review – அங்குசம் பார்வையில் ‘ரெட்ரோ’
அங்குசம் பார்வையில் ‘ரெட்ரோ’ 47/100
தயாரிப்பு : ‘2டி எண்டெர்டெய்ன்மெண்ட், & ’ஸ்டோன் பெஞ்ச் புரொடக்சன்ஸ்’ சூர்யா—ஜோதிகா. இணைத் தயாரிப்பு : ராஜ்சேகர் கற்பூரசுந்தர பாண்டியன், கார்த்திகேயன் சந்தானம். எழுத்து—இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ். நடிகர்-நடிகைகள் : சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ்ராஜ், நாசர், விது, சுவாசிகா விஜய், கஜராஜ், இயக்குனர் தமிழ், கருணாகரன், சிங்கம்புலி மற்றும் ஆயிரக்கணக்கான துணை நடிகர்-நடிகைகள். ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை : சந்தோஷ் நாராயணன், எடிட்டிங் ; ஷஃபிக் முகமத் அலி, ஸ்டண்ட் டைரக்டர் : கெச்சா ஹெம்பாக்டே, ஆர்ட் டைரக்டர் : ஜாக்கி, மாயப்பாண்டி, காஸ்ட்யூம் டிசைனர் : பிரவீன் ராஜா, தமிழ்நாடு ரிலீஸ் : சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, சக்திவேலன், பி.ஆர்.ஓ. : யுவராஜ் & சதீஷ் [ எஸ்-2]
1960 தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தியன்று அனாதையாக நிற்கும் சிறுவனை எடுத்து வளர்க்கிறார் ஷிப்பிங் & ஸ்மக்லிங் பார்ட்டியான ஜோஜு ஜார்ஜின் மனவியான சுவாசிகா விஜய். வளர்ப்பு மகனுக்கு பாரிவேல் கண்ணன் என்ற பெயரும் சூட்டி பாசத்தையும் ஊட்டி வளர்க்கிறார். ஆனால் ஜோஜுவுக்கோ அந்த அனாதை மீது அளவுகடந்த வெறுப்பு. “நீ சிரிச்சா அழகா இருப்படா செல்லம்” எனச் சொல்லியபடி உயிர் துறக்கிறார் சுவாசிகா.
தாயின் அஸ்தியை வளர்ப்புத் தந்தையுடன் கங்கையில் கரைக்கும் போது, “நீ சிரிச்சா அழகா இருப்படா பாரி” என்கிறாள் ஒரு சிறுமி. ”எனக்கு சிரிப்பு வராது” என்கிறான் பாரி. காசியிலிருந்து திரும்பும் போது ரவுடிக் கும்பலிடமிருந்து அப்பாவைக் காப்பாற்றியதும் பாரி மீது பாசம் வைக்கிறார் ஜோஜு. 30 ஆண்டுகள் ஓடிமுடிந்து 1993-க்கு கதை நகர்கிறது. பாரி தான் சூர்யா, அந்தச் சிறுமி ருக்குமணி தான் பூஜா ஹெக்டே. ஆப்பிரிக்கா நாட்டுக்கு கடத்திய தங்க மீன்கள் இருக்கும் இடம் பாரிக்கு மட்டும் தெரியும் என்பதால் அவனைப் போட்டுத் தள்ள முடியாமல் தவிக்கிறார் ஜோஜு.
பாரி-ருக்குமணி திருமண ரிசப்ஷன் அன்று தந்தைக்கும் மகனுக்குமிடையே தங்க மீன்கள் தகறாரு முற்றி, ஒருகட்டத்தில் ருக்குமணியையே போட்டுத்தள்ள ஜோஜு ஆவேசமாக கத்தியைத் தூக்க, அப்பாவின் வலது கையை துண்டாக வெட்டிவீசிவிட்டு மதுரை செண்ட்ரல் ஜெயிலுக்குப் போகிறான் பாரி. நிற்கதியாக நிற்கும் ருக்குமணியும் காணாமல் போகிறாள்.
அந்த தங்க மீன்கள் ரகசியம் என்ன? ருக்குமணியை பாரி கண்டுபிடித்தாரா? பாரி ஏன் சிரிக்கவே மாட்டேங்குறான்? இதான் கார்த்திக் சுப்புராஜின் படமான ‘ரெட்ரோ’.
சூர்யாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சூர்யாவின் அறம் சார்ந்த சேவைகளுக்காக அவரை நேசிப்பவர்களுக்கும் இந்த ‘ரெட்ரோ’ கலர்ஃபுல் மேஜிக் தான். மூன்றுவிதமான தோற்றங்களில், விதவிதமான காஸ்ட்யூம்களில், தூத்துக்குடி பாஷையில் ஜோஜு ஜார்ஜ்ஜை நக்கல் பண்ணுவதில், அந்தமானில் ருக்குவைப் பார்த்த பின்பு, கண்ணாடி முன்பு நின்று சிரிக்க முயற்சிப்பதில் என வெரைட்டியாக வெளுத்துக்கட்டியிருக்கார் சூர்யா. அதிலும் குறிப்பாக ‘ஜானி’ பட ரஜினி கெட்டப்பில் இசைஞானியின் “சுனோ ரீட்டா” சாங் பேக்ரவுண்டில் வருவது ரகளை ரகம்.
கொஞ்சம் டல் மேக்கப்பில் பூஜா ஹெக்டேவின் நடிப்பு சில காட்சிகளில் ரொம்பவே அற்புதம். அந்தமானில் சூர்யாவைப் பார்த்த பின்பும் ஒதுங்கிப் போவது, அங்கிருக்கும் அடிமைத் தமிழர்களின் பரிதாபக் கதையை, அவர்கள் சிரிக்க மறந்த காரணத்தை சூர்யாவிடம் சொல்லும் போது முகபாவம் என சபாஷ் போட வைக்கிறார் பூஜா. இவரின் அப்பாவாக ஒரேயொரு சீனில் சிங்கம்புலி வருகிறார்.
கதையின் மெயின் வில்லனாக வரும் ஜோஜு ஜார்ஜ் செம மிரட்டல் என்றால், அந்தமானில் அடிமைகளை மோதவிட்டு சாகடித்து ரசிக்கும் வில்லன்களான விதுவும் அவரது அப்பா நாசரும் கொஞ்சம் பித்துக்குளித்தனமாகத் தான் இருக்கிறார்கள்.
கொடுத்த கேரக்டருக்கு ஓரளவு நியாயம் செஞ்சிருக்கார் சிரிப்பு டாக்டர் சாப்ளினாக வரும் ஜெயராம்.
அந்தமான் காட்சிகளுக்காக அசாத்தியமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. குறிப்பாக தூத்துக்குடியில் சூர்யா-பூஜா ஹெக்டே கல்யாண ரிசப்ஷனன்று 15 நிமிட சிங்கிள் ஷாட்க்கு ஸ்ரேயாஸுக்கு தாராளமாக சபாஷ் போடலாம்.
அடுத்து மிக முக்கியமானவர்னா அது ஸ்டண்ட் டைரக்டர் கெச்சா ஹெம்பாக்டே தான். ஆக்ஷன் சீக்வென்ஸில் சூர்யாவுக்காவே புதுப்புது டிசைன்களை இறக்கியுள்ளார். அந்தமானில் ஜடாமுனி கோவில், தமிழர்கள் வாழும் குடியிருப்பு, அடிமைகள் சண்டை மைதானம் இவற்றிற்காக ரொம்பவே கவனம் செலுத்தியிருக்கிறார்கள் ஆர்ட் டைரக்டர்கள் ஜாக்கியும் மாயப்பாண்டியும்.
1890, 1960, 1993, ‘காதல்’, ’நகைச்சுவை’, ’யுத்தம்’ ‘தம்மம்’ ‘அந்த ஒருவன்’ என பார்ட் பார்ட்டாக கதை சொல்லியவிதத்திலும் சில கதாபாத்திரங்களின் வடிவமைபிலும் சர்வாதிகாரம், புரட்சி பேசிய விதத்திலும் தனது வித்தையைக் காட்டியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். “இந்த அரசாங்கத்தின் கோரிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டோம்” இயக்குனர் தமிழ் பேசும் வசனம் தான் சுப்புராஜின் சூப்பர் ‘டச்’. அதே க்ளைமாக்ஸில் சூர்யா உட்பட அடிமைத்தமிழர்கள் அனவரும் சிரிப்பது செம சிறப்பான க்ளைமாக்ஸ் சீன்.
தன்னை போட்டுத் தள்ள வரும் மாமனாரின் கையை வெட்டிவிட்டு ஜெயிலுக்குப் போன கணவனை [காதலனை] அம்போவென விட்டுவிட்டு ஒரு மனைவி[ காதலி] போவாளா? இரண்டு மணி நேரம் நாற்பெத்தெட்டு நிமிடம் படம் ஓடுவது ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. இது போல பல ஓட்டை, உடைசல்கள், லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ‘ரெட்ரோ’வில் தரமான, சிறப்பான சம்பவங்கள் பல இருக்கின்றன. ரசிக்க வைக்கின்றன.
–மதுரை மாறன்