போலீசாருக்கு டாடா – ஏஸ் வண்டியில் – தூய்மைப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் சோறு ! வெட்கக்கேடு !

0

போலீசாருக்கு டாடா – ஏஸ் வண்டியில் – தூய்மைப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் சோறு ! வெட்கக்கேடு !

குப்பை வண்டியில் சோறு !
குப்பை வண்டியில் சோறு !

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் தொடக்கவிழா மற்றும் ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் கோயில் தரிசனம் என பல்வேறு நிகழ்ச்சி நிரல்களோடு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழகத்திற்கு வந்து திரும்பியிருக்கிறார் பிரதமர் மோடி.
சென்னை, திருச்சி, இராமேஸ்வரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மோடிக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு. சென்னையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார், திருச்சி – இராமேஸ்வரத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பயணம் முடித்து பிரதமர் மோடி மகிழ்ச்சியாக திரும்பிவிட்டார். ஆனால், இதற்காக கடந்த மூன்று நாட்களாக முன்னேற்பாடுகள் பணிகளை மேற்கொண்ட தூய்மைப்பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் வேதனையில் நொந்து போயிருக்கிறார்கள்.

- Advertisement -

- Advertisement -

குறிப்பாக, திருச்சியில் சுகாதாரப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கான உணவை குப்பை வண்டியில், அதுவும் குப்பைகளை ஓர் ஓரமாக ஒதுக்கிவிட்டு எடுத்துச் சென்று விநியோகித்திருக்கின்றனர், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தினர்.
பொதுவாகவே, இதுபோன்ற தூய்மைப்பணியாளர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கான பயண வாகனமாகவும் பெரும்பாலும் குப்பை வண்டிகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது வேதனையானது.
மிக சமீபத்தில், சென்னை பெருவெள்ள பாதிப்பையொட்டிய சீரமைப்பு பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குப்பை வண்டிகளில்தான் தூய்மைப்பணியாளர்களும் பயணமானார்கள்.

குப்பை வண்டியில் சோறு !
குப்பை வண்டியில் சோறு !

திருச்சியில், தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவுக்கு, அதுவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் கைகளால் வழங்கப்பட்ட அந்த விழாவிற்கே தூய்மைப்பணியாளர்கள் குப்பை வண்டியில்தான் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இதுபோன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களின் வாயிலாக சுட்டிக்காட்டினாலும், மாறாமல், இதே வகையிலான போக்கு தொடர்வதை எவ்வாறு புரிந்துகொள்வது?

4 bismi svs

மாநகராட்சி ஆணையர், மேயர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கவனத்தை மீறி இதுபோன்ற செயல்கள் நடைபெற்றுவிட முடியுமா? ஏதேனும் உணவகம் ஒன்றில் சாப்பிட அமரும்போது, சப்ளையரின் கை விரல்கள் அவர் கொண்டுவரும் தண்ணீர் டம்ளரில் படுகிறதா? என்பதையெல்லாம் நுணுக்கமாக பார்த்து, டம்ளரை மாற்றுமாறு கோரும் தன்னளவில் சுகாதாரத்தை பேணும் அதிகாரிகளுக்கு இது உரைக்காமலா போயிருக்கும்?

நாற்றம்பிடித்த நாள்பட்ட குப்பைகளையும் கையுறைகள் ஏதுமில்லாதபோதும் முகம் சுளிக்காமல் துப்புறவு செய்யும் அந்த தூய்மைப்பணியாளர்களுக்கு ஒருவேளை சோற்றைக்கூட கௌரவமான முறையில் வழங்க முடியாமல் போனதற்காக நம் அனைவரையும் வெட்கப்பட வைத்துவிட்டது, இந்த அவல சம்பவம்.

போலீசாருக்கு... உணவு
போலீசாருக்கு… உணவு

இதுவொருபுறமிருக்க, திருச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீசாருக்கு டாடா-ஏஸ் வாகனத்தில் வைத்து உணவைப் பரிமாறியிருக்கிறார்கள். அதுவும் கெட்டுப்போன உணவை.

பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருக்கு, தங்குவதற்கான வசதி, உணவுத் தேவைகளை, குறிப்பாக பெண் போலீசாரின் இயற்கை உபாதைகளுக்கான வாய்ப்புகளை பற்றியெல்லாம் எந்தவித அக்கறையுமற்று நடத்தப்பட்டிருப்பதாகவே வேதனை தெரிவிக்கிறார்கள் போலீசார்கள்.

“புதிதாக வெளியாட்கள் உள்ளே நுழைய தடை. தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடைகளையும் மூடிவிட்டார்கள். கடைகள் இருந்தாலாவது கைக்காசைப் போட்டாவது ஏதாவது வாங்கி சாப்பிட்டிருப்போம்.” என புலம்புகிறார்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.

இந்த விவகாரம் தொடர்பான உரிய விசாரணையை மேற்கொள்வதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாதிருப்பதையும் மாவட்ட நிர்வாகம்தான் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் !

– ஆதிரன்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.