அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் பந்துவார்பட்டி கிராமம் மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்கள், நாரணாபுரம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை (TASMAC – 12079) மூடக் கோரி இன்று சாத்தூர்–ஏழாயிரம்பண்ணை சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் மக்களிடையே மது பழக்கம் அதிகரித்து குடும்ப அமைதி குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும், சமூகத்தில் பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும் கூறிய அவர்கள், கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டத்தின் போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்தை பெண்கள் தடுத்து நிறுத்தியதால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சாத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கமல் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சமரசம் செய்து, சாலை மறியலை கைவிடுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.