சென்னையில் ரோட்டரி மாநாடு – அசத்தும் ரோட்டரி தமிழன் !
போலியோ ஒழிப்பு – 12,500 கோடி பங்களிப்பு – சென்னையில் ரோட்டரி மாநாடு அசத்தும் ரோட்டரி தமிழன் ! ரோட்டரி என்றாலே, எலைட் மனிதர்களுக்கானது; அந்த அமைப்பின் கூட்டங்கள் எல்லாமே, ஏதோவொரு நட்சத்திர விடுதிகளில்தான் நடைபெறும்; அங்கு என்ன பேசுகிறார்கள்? அவர்கள் என்னதான் செய்கிறார்கள்? என்பது குறித்தான செய்திகளெல்லாம் பத்திரிகைகளில் வெளியாவதுமில்லை; அதன் காரணமாகவே, அதுகுறித்து நாம் அக்கறை கொண்டதுமில்லை.
இந்த பொதுக்கருத்தை தகர்க்கும் வகையில், யாரும் எதிர்பார்த்திராத வகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் 2025 – 27 ஆம் ஆண்டிற்கான இயக்குனர்களுள் ஒருவரும், தமிழகத்தைச் சேர்ந்த அதுவும் நம்ம திருச்சியைச் சேர்ந்தவரும் எக்சல் குழும நிறுவனங்களின் தலைவருமான MMM முருகானந்தம்.
கடந்த ஏப்ரல் 23 அன்று திருச்சி ஸ்பாஸ்டிக் சோசைட்டியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ரோட்டரி குறித்து பிரமிப்பூட்டும் பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார், MMM முருகானந்தம்.
அமெரிக்காவின் ஷிகாகோவில் உள்ள ரோட்டரி இன்டர்நேஷனல் தலைமையகத்தில் நடைபெற்ற Council on Legislation (COL) பாராளுமன்ற கூட்டத்தில் (13-17 ஏப்ரல் 2025) பங்கேற்று திரும்பி வந்ததை முன்னிட்டு, அவரை வரவேற்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது.
“உலகில் உள்ள 46,000 ரோட்டரி சங்கங்களில், ரோட்டரி இந்தியாவில் மட்டும் 4600 மேற்பட்ட சங்கங்கள் இருக்கிறது. ரோட்டரி லீடர்ஸ் மாநாடு இதுவரை நடந்ததில்லை. முதல்முறையாக, ஆகஸ்டு 22- 24 மூன்றுநாள் நிகழ்வாக ரோட்டரி இந்தியா லீடர்ஷிப் கான்கிளைவ் (Rotary India Leadership Conclave 2025) என்ற நிகழ்வை தமிழகத்தில், சென்னை டிரேட் சென்டரில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இந்நிகழ்வில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், நம்ம மாவட்டத்தின் அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் பங்கேற்க இசைவு தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய ஜனாதிபதி அவர்களையும் அணுகியிருக்கிறோம். இதுதவிர, உலக ரோட்டரியின் தலைவரும் வருகை தரவிருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல நேபாள், மாலத்தீவு, இலங்கை, பூடான் உள்ளிட்டு தெற்காசிய நாடுகளிலிருந்து பலரும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். தலைமைத்துவம் எவ்வளவு முக்கியம் என்பதற்காக மட்டுமல்ல சமூகம் சார்ந்த தலைவர்கள் சேர்ந்திழுக்கும்போது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில்தான் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பதாக” தெரிவித்தார்.
220 நாடுகளில் இயங்கிவரும் ரோட்டரி இன்டர்நேஷனலின் 17 இயக்குநர்களில் ஒருவனாக இருந்து, முதன்முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் சென்னையில் இப்படி ஒரு நிகழ்வை நிகழ்த்த வேண்டுமென்ற அவரது முயற்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
வீடியோ லிங்
“பொதுவில், ரோட்டரியில் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்துதான் மண்டலங்களை பிரிப்பார்கள். உலகம் முழுவதிலும் 34 மண்டலங்கள் இருக்கின்றன. இந்தியாவில் 4 மண்டலங்கள் இருக்கின்றன. இந்தியாவில் 4600 சங்கங்கள் உள்ள நிலையில், அதில் கிட்டத்தட்ட 1200 சங்கங்கள் தமிழகத்தில்தான் அடர்த்தியாக இருக்கின்றன. ஆகவே, தமிழகத்தை தனி மண்டலமாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். விரைவில் அதை நிறைவேற்றுவோம்.” என்றபோது, தமிழகத்தின் பெருமையை உலகறிய செய்யும் அவரது பேரார்வம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியது.
இந்தியாவில் போலியோவை முற்றிலுமாக ஒழித்து பத்தாண்டுகளை கடந்த நிலையிலும்கூட, பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்னும் போலியோ தாக்குதலை எதிர்கொண்டு வருகிறார்கள் என்கிற உண்மை போலியோ ஒழிப்பில் ரோட்டரியின் பங்கை அந்த அமைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது.
இவற்றையெல்லாம்விட, கடந்த 30, 40 ஆண்டுகளில் சுமார் 12,500 கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கீடுகளை கொண்ட பல்வேறு திட்டப்பணிகளை இந்தியாவில் செய்து முடித்திருக்கிறார்கள். எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் செயல்பாடுகளை போலவே, சத்தமில்லாமல் விளம்பரம் இல்லாமல் ரோட்டரியும் பல விசயங்களை சாதித்திருக்கிறது என்ற தகவல் வியப்பில் ஆழ்த்தியது.
எதிர்வரும் 25-27 ஆம் ஆண்டுக்கான இலக்காக, விளையாட்டுத்துறையில் கவனம் செலுத்துவது மற்றும் கருப்பப்பை புற்றுநோயை ஒழிப்பதில் கவனம் செலுத்துவது என்பதாக தங்களது செயல்திட்டம் இந்தியாவில் அமையும் என்றார். இது தொடர்பாக, பிரதமர் அலுவலகத்துடன் சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் பேசிவருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தனிப்பட்ட தொழில் தலைவர்களை பயன்படுத்திக் கொள்வது மட்டுமின்றி; கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவதாகவும் ; தற்போது, சுமார் 400 கம்பெனியுடன் சி.எஸ்.ஆர். புராஜெக்ட்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ரோட்டரி இந்தியா லீடர்ஸ் கான்களைவ், சிகாகோ மாநாடு, போலியோ ஒழிப்பில் ரோட்டரியின் பங்களிப்பு, விஷன் 2030 என ரோட்டரியின் செயல்பாடுகள் குறித்த சித்திரத்தை தீட்டியவர், ரோட்டரிகள் அதிகளவில் உள்ள யு.எஸ்.-க்கு அடுத்து இந்தியாவை இரண்டாம் இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட விருப்பம் இலக்கு என்றார். இனி இதுபோல பத்திரிகையாளர்கள் சந்திப்புகளை ஆறுமாதங்களுக்கு ஒருமுறை நிகழ்த்தப்போவதாகம் தெரிவித்தார்.
இன்றைய பள்ளிச் சிறுவர்கள், இளைஞர்கள் கையில் மொபைல் போனுடன் நேரம் செலவிடுவதை சுட்டிக்காட்டியவர், 10 – 18 வயதில் இருக்கும் சிறுவர்கள் இன்டராக்டிலும் 18-30 வயதில் இருக்கும் இளைஞர்கள் ரோட்டராக்டிலும் உறுப்பினர்களாக முடியும். அதன்வழியே, சமூக சேவையாற்றுவதன் வாயிலாக சமூகத்தை அவர்கள் புரிந்துகொள்ளவும் முடியும். அது அவர்களின் தனிப்பட்ட சுயமேம்பாட்டுக்கான அம்சமாகவும் அமையும் என்றார்.
120 வருட ரோட்டரி வரலாற்றில் இந்தியாவில் எந்த ஒரு நிகழ்வும் நடந்ததில்லை. அதனை மாற்றியமைக்கும் விதமாக, வேர்ல்டு இந்தியா 2029-31 என்ற பெயரில், உலக ரோட்டரி கன்வென்சன் டெல்லியில் நடத்துவதாக உத்தேசித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வீடியோ லிங்
உலக ரோட்டரியின் வரலாற்றில் தமிழகத்தின் தனித்தன்மையை, தனிமுத்திரை பதிக்க விழையும் தமிழனாய், அரவணைக்கக் காத்திருக்கும் கரங்களோடு களத்தில் நிற்கிறார், MMM முருகானந்தம்.
– கலிங்கா இளவழகன்.