“டேனியல் பாலாஜியின் கடைசி நாட்கள்! –‘ஆர்பிஎம்’ பட விழாவில் நெகிழ்ச்சிப் பதிவுகள்!
நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆர்பிஎம்’ ( RPM )படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்பி எம் ‘ ( RPM) படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு :அனியன் சித்திரசாலா , இசை: ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ , படத்தொகுப்பு: ஆண்டனி , ஸ்டண்ட் டைரக்டர்: ஸ்டன்னர் சாம். க்ரைம் & சஸ்பென்ஸ் த்ரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார்.
டைரக்டர் பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். ‘ஆர்பிஎம்’ஐ உலகம் முழுவதும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ரிலீஸ் பண்ணுகிறது.இந்த கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 29- ஆம் தேதி மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் டேனியல் பாலாஜியின் தாயார் திருமதி. ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவர்களுடன் கிரியா டெக் நிறுவனர்- தொழிலதிபர் பாஸ்கரன், ‘எம் ஆர் டி மியூசிக்’ முருகன், ‘சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்’ சிவா, நடிகர் சாருகேஷ், நடிகர் ஈஸ்வர் கார்த்திக், பாடலாசிரியர் கிரிதர் வெங்கட், இயக்குநர் பிரசாத் பிரபாகர், தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முதலில் பேசிய….
தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர்
“டேனியல் பாலாஜி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நாளில் ஆர்பிஎம் படத்தின் டிரெய்லரை வெளியிவதை பொருத்தமானதாக நினைக்கிறோம்.அவருடைய தாயார் ராஜலட்சுமி அம்மா அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கிறார். இவரை விட வேறு யாரையும் சிறப்பு விருந்தினராக அழைக்க தோன்றவில்லை. அவர் இங்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டேனியல் பாலாஜி மிகுந்த திறமைசாலி.
மக்களுடைய மனதில் இடம் பிடித்த டேனியல் பாலாஜி போன்ற கலைஞர்களின் மறைவு என்பது பேரிழப்பாகும். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்தப் படத்தில் நடிக்கும் போது அவருடன் நடித்த சக நடிகர்களான ஈஸ்வர் கார்த்திக், சாருகேஷ், பாபு , முத்து ஆகியோருடன் நிறைய நேரம் பேசி இருக்கிறார். அவர்களிடத்தில் இதுதான் என்னுடைய கடைசி படமாக இருக்கும். இதன் பிறகு நான் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்தப் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை. முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த உடன் டேனியல் பாலாஜியை சந்தித்து உங்களிடம் ஒரு கோரிக்கை. நீங்கள் நடிப்பதை பார்ப்பதற்கு அனுமதி தர வேண்டும் என கேட்டேன். சரி என்று ஒப்புக் கொண்டார். இயக்குநர் ‘ஆக்சன்’ என்று சொன்னவுடன், அவர் கேரக்டராக மாறி பெர்ஃபார்மன்ஸ் செய்வதை பார்த்த போது வியந்து போனேன்.
இந்தப்படத்தில் நடித்த நடிகர் ஈஸ்வர் கார்த்திக் – நடிகை தயா பிரசாத் பிரபாகர் ஆகிய இருவருக்கும் இதுதான் முதல் படம். இருவரும் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது டேனியல் பாலாஜியை பார்த்தவுடன் பதட்டமடைந்தார்கள். அப்போது அவர்களிடம் நடிக்கும் போது பயப்படக்கூடாது. இங்கு நடிக்கும் போது நான் டேனியல் பாலாஜி கிடையாது. அந்த கதாபாத்திரம் மட்டும்தான் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டி நடிக்க வைத்தார். புதுமுக கலைஞர்களுக்கு அவர் கொடுத்த உற்சாகம் எனக்கும் நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது.
இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இயக்குநர் பிரசாத் பிரபாகர் மற்றும் ஒட்டுமொத்த பட குழுவினரும் பரிபூரணமாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம். இந்தப்படத்திற்கு அனைவருடைய ஆதரவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.
டேனியல் பாலாஜியின் தாயார் ராஜலட்சுமி
” சின்னக் குழந்தையாக இருக்கும்போதே அவனுக்கு ரொம்ப பக்தி. ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரும்போது தேங்காய் பழம் பூ என வாங்கிட்டு நடந்து வருவான். பஸ்ஸில் வரமாட்டான்.

காலேஜ் சென்ற பிறகும் அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அவன் சம்பாதித்த பணத்தைக் கூட கோயிலுக்காகச் செலவு செய்தான். அவன் நடிச்ச இந்த படத்தை எல்லாரும் பார்த்து அவனை ஆசீர்வதிக்க வேண்டும்.
அவன் இறப்பதற்கு அஞ்சு நாளைக்கு முன்னாடி அவனுடைய பிராப்பர்ட்டி எல்லாம் தம்பிக்குத் தான்னு சொல்லிட்டேன். கடைசி கட்டத்தில் அவன் பேசிய பேச்சுகளை கவனித்தேன். அவனிடம் பேச்சு கொடுத்த போது, ‘நான் இருக்க மாட்டேனே!!’ என்று சொன்னான். நான் இன்னும் இருக்கும்போது… அவன் இல்லையே? என்ற குறை இப்போது என் மனதில் இருக்கிறது ”.
கல்வியாளர் – ஆராய்ச்சியாளர் – தொழிலதிபர் பாஸ்கரன் ,
” கல்லூரியில் படிக்கும் போது வாரம் இரண்டு படங்கள் பார்ப்பேன். அதன் பிறகு வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது கிடைத்த ஓய்வு நேரத்தில் பார்ப்பேன். தொழில் தொடங்கிய பிறகு சினிமா பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழர்களிடம் பேசும் போது தான் சினிமாவின் வீரியம் எனக்கு புரிந்தது.
தமிழர்கள் உலகம் முழுவதும் 70, 80 நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் தயாராகும் படங்களை பார்த்து தான் நம்ம மொழியை பேசுகிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் “.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இயக்குநர் பிரசாத் பிரபாகர்,
“அமரன் போன்ற பெரிய படத்தை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆர்பி எம் படத்தை பான் இந்திய ப்படமாக வெளியிடுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி.
டேனியல் பாலாஜியை இந்தப் படத்தில் மிகவும் ஷட்டிலாக நடிக்க வைத்திருக்கிறேன். அவருக்குள் ஒரு டைரக்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு ரைட்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு புரொடக்ஷன் கண்ட்ரோலர் இருக்கிறார். அவருக்குள் ஒரு சினிமாவுக்கான எல்லாம் இருக்கிறது. அவரை ஏமாற்றவே முடியாது. அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நிமிடங்களும் மறக்க முடியாதவை.
சில பேருடைய அன் பிரசன்ஸ் ( Unpresense) தான் நமக்கு பிரசன்ஸ் ஆக இருக்கும். அவர் இல்லாமல் இருக்கும்போது தான் அவரை பற்றி நிறைய பேசுவோம். அந்த மாதிரி ஒரு மனிதர்தான் டேனியல் பாலாஜி.
அவர் நடித்த இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. அவருடைய ஆசி இந்த படத்திற்கு இருக்கும். ரசிகர்களும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ”.
— மதுரை மாறன்.