துறையூர் அருகே தொடர்ச்சியாக கிளை மான்கள் பலி !
துறையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிளை மான் பலி. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பிரிவு சாலையிலிருந்து ஒட்டம்பட்டி கிராமத்திற்கு இருந்து செல்லும் வழியில் சாலையோரம் சுமார் 2 வயது மதிக்கத்தக்க கிளைமான் அடையாளம் தெரியான வாகனத்தில் மோதி இறந்து கிடப்பதாக துறையூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
தற்போது கோடைக்காலம் என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வற்றிய நிலையில் ,குடிநீர் தேவைக்காக வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடிக்கடி வருகின்றன .இதனால் வனத்துறையினர் வனப்பகுதியில் ஆங்காங்கே குடிநீர் குட்டைகள் அமைத்து வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் இது பற்றி பலமுறை எடுத்துக் கூறியும் வனத்துறையினர் மெத்தனமாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர் குறை கூறி வருகின்றனர்.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு துறையூர் பகுதியில் புள்ளிமான் ஒன்று நாய்கள் கடித்து இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. வனவிலங்குகள் சாலையின் ஓரம் வரும்பொழுது அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருவதால் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.