சாத்தூர் அருகே சாலை விபத்தில் கணவன் – மகள் கண் முன்னே மனைவி பலியான சோகம் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் – கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த துயரமான சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுறிச்சியைச் சேர்ந்த தாஸ் (35). அவரது மனைவி வனிதா (26). 2 வயது மகள் சஞ்சனா ஆகியோர், சாத்தூரில் உள்ள உறவினரை சந்திக்க டூவீலரில் வந்திருந்தனர். அங்கு இருந்து மீண்டும் கோவில்பட்டி நோக்கி சென்றபோது, சாத்தூர் அருகே பெத்து ரெட்டியபட்டி விளக்கு பகுதியில் எதிரே வந்த கார் டூவீலரை மோதியது.

இந்த மோசமான மோதலில், டூவீலரில் பின்னால் அமர்ந்திருந்த வனிதா சாலையில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் தாஸ் மற்றும் சிறுமி சஞ்சனா உயிர் தப்பிய நிலையில் லேசான காயங்களுடன் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திடீர் விபத்தில் கணவன் – மகள் கண் முன்னே மனைவி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் அனைவரும் கலங்கினர். சாலையோரத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீஸார், உயிரிழந்த வனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குக் காரணமான காரை ஓட்டிய நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பொன் போத்தி மீது வழக்கு பதிவு செய்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.