பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ! சம்பவ இடத்திலேயே 3 மாணவர்கள் உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் 10 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஓட்டுனரின் கவன குறைவு தான் விபத்துக்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ரயில்வே கேட் மூடுவதற்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டும் அதனை மீறி பள்ளிக்கு விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருவது ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வர, மற்றொருபுறம் விபத்துக்குள்ளான வாகனங்களுக்கு வாகன காப்பீடு இல்லை என்பதும், இதனால் விபத்தில் இறந்தவர்கள் குடும்பம் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள் என்பது பேரதிர்ச்சியாக இருந்து வருகிறது.
பெரும் கல்வி நிறுவனங்கள் பல மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை முறையாக பராமரிப்பதில்லை என்றும் இதனை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து பலனடைந்து விட்டு கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.