10 நாள்களாக பனி மலையில்! உயிருடன் மீட்கப்பட்ட சுவாரசியம்!
டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ஒருவர் அடர்ந்த காட்டில் அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத பனிப்பிரதேசங்களில் மாட்டிக்கொண்டால் அதிலிருந்து எப்படி தப்பித்து வருவது என்று பல தகவல்களை தெரிவித்து இருப்பார்கள். ஆனால் நான் தற்போது சொல்லப் போகும் ஒருவர் உண்மையாகவே பனிமலையில் பத்து நாள்களாக சிக்கிக்கொண்டடு ஆற்று நீர், உருகிய பனி, டூத்பேஸ்ட் ஆகியவற்றை சாப்பிட்டு தன்னை உயிருடன் வைத்திருக்கிறார். மேலும் அவர் எப்படி அந்த மலையில் மாட்டிக்கொண்டார், எப்படி மீட்கப்பட்டார் என்பது குறித்து சுவாரசியத்தை பார்ப்போம்.

சன் லியாங் என்பவர் தனது விடுமுறையை கழிக்க தனியாக ஒரு சோலோ பயணத்தை தொடங்கி இருக்கிறார். அப்போது அவர் ஷான்சி மாகாணத்தின் 2500 மீட்டர் உயரத்திற்கு பெயர் பெற்ற குயின்லிங் மலைகளுக்கு நடைபயணம் மேற்கொண்டார். இந்த நிலையில் மலையேற்றம் தொடங்கிய இரண்டு நாட்களில் அவர் எடுத்துச் சென்ற மின்னணு சாதனங்களில் பேட்டரி தீர்ந்து போனதால் அவர் தனது குடும்பத்தினருடன் ஆன தொடர்பை முற்றிலும் இழந்தார். அந்நேரம் அவர் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு வெளி உலகத்தை தொடர்பு கொள்வதற்கான வழியையும் இழந்தார்.

இதையடுத்து அவருடனான தொடர்புகளை இழந்த குடும்பத்தினர் ஒருவேளை அவர் காணாமல் போயிருக்கலாம் என்று மீட்புக் குழுவை அணுகி நடந்தவற்றை தெரிவித்து இருக்கின்றனர். எனவே தேடுதல் பணியை முழு வீச்சில் தொடங்கிய மீட்பு குழுவினர் பல சவால்களை எதிர்கொண்டு பத்து நாட்களுக்குப் பிறகு மலை உச்சியில் சன் லியாங் நெருப்பு மூட்டும்போது, ஏற்பட்ட புகையை வைத்து தேடுதல் குழுவின் கவனத்தைப் பெற்று அவர் மீட்கப்பட்டார்.

பின்னர் இது குறித்து பேசி இருந்த சன் லியாங், இந்த மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது நான் பலமுறை கீழே விழுந்து வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும் பலத்த காற்று மற்றும் குளிரில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, ஒரு பெரிய பாறையின் பின்னால், காய்ந்த புல் மற்றும் இலைகளின் உதவியுடன் தனக்கென ஒரு படுக்கையைத் தயார் செய்திருந்தேன். பின்னர் சாப்பிட உணவு ஏதும் கிடைக்காததால், தன்னிடம் இருந்த டூத்பேஸ்டை சாப்பிட்டு, ஆற்றில் உள்ள தண்ணீரையும் உருகிய பனியையும் குடித்து உயிரை காப்பாற்றிக் கொண்டதாகவும் கூறினார். மேலும் மீட்பு குழுவில் இருந்து பேசிய அதிகாரி ஒருவர், இந்தப் பாதையில் நடைபயணம் மேற்கொண்டால் கரடிகள், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகளை மலையேற்றம் செய்பவர்கள் எதிர்கொள்ள நேரிடும். இதனால் மீட்பு பணியின் போதும் எங்கள் குழுவில் இருந்த சிலரும் காயமடைந்தனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்த ஆபத்தான பாதையில் 50க்கும் மேற்பட்ட மலையேறுபவர்கள் காணாமல் போயுள்ளனர் மற்றும் சிலர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்த மலையில் சன் லியாங் சர்வே செய்தது தங்களை ஆச்சரியப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.