மழைக்கு ஒதுங்கிய பெண்ணுக்கு அடித்த ரூ.1.22 கோடி மெகா லாட்டரி!
தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தின், ஹோங்டா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வழக்கம்போல் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கனமழை பெய்தது, அந்த கன மழையில் இருந்து தப்பிக்க எதேர்ச்சியாக அருகே இருந்த லாட்டரி கடையின் உள்ளே ஒதுங்கியுள்ளார்.
அப்போது அந்த பெண் மழை நிற்கும் வரை இந்த லாட்டரி கடையில் ஏதாவது விளையாடலாம் என்று எண்ணி, அந்த கடைக்காரரிடம், நான் மழைக்கு இங்கு ஒதுங்கியுள்ளேன். இங்கே ஸ்கிராட்ச் கார்டுகள் உள்ளதா, நான் விளையாட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இங்கு வாராந்திர அல்லது தினசரி லாட்டரிகளை போல் இல்லாமல், உடனடியாக பணம் செலுத்தி, உடனடியாக பரிசு வெல்லும் ஸ்கிராட்ச் கார்டுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். உடனடியாக 30 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.364) மதிப்பிலான 30 லாட்டரி டிக்கெட்கள் உள்ள 900 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,942) மதிப்பிலான ஒரு முழு சிறு புத்தகத்தையும் அந்த பெண் வாங்கியுள்ளார். இதில், 6வது லாட்டரி டிக்கெட்டிலே ஒரு மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1.24 கோடி) பரிசு வெற்றி பெற்றுள்ளார்.
பின்ன்ர் இது குறித்து பேசிய அந்த பெண், “எப்போதாவது லாட்டரி ஸ்கிராட்ச் கார்டுகள் வாங்குவேன். அதேபோல் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது மழை பெய்ய துவங்கியது, அப்போது இந்த லாட்டரியை வாங்கினேன். இதனை நான் வெல்வேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. நான் பலமுறை சிலர் 5 அல்லது 10 மில்லியன் லொட்டரி வெல்வதை பார்த்திருக்கேன். அதனை ஒப்பிடும் போது இது பெரிய விஷயம் இல்லை. இருப்பினும் இதனை நான் சமூகவலைத்தளங்களில் பகிர விரும்பவில்லை. இதன் காரணமாக நான் சோம்பேறியாக வீட்டில் படுக்க விரும்பவில்லை. நான் வழக்கம் போல் பணிக்கு திரும்பிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பெண் கடைக்காரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் லாட்டரி பரிசு தொகையில் குறிப்பிட்ட அளவு பணத்தை, பட்டு துணியால் ஆன கவரில் வைத்து கடையின் உரிமையாளருக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்