கண்கவரும் கலைப்படைப்பான கழிவுப்பொருட்கள் !
ரயில்வே தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. தூய்மைப் பணியில் கழிவுப் பொருள் மேலாண்மையும் ரயில்வே வளாகங்களை அழகுபடுத்துதல் போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கிறன. இதற்காக ரயில்வே ஊழியர்கள் உபரியாக பயன்பாடு இல்லாமல், கிடக்கும் கழிவுப் பொருட்களை கலைப் பொருட்களாக மாற்றி தங்கள் அலுவலகங்களை அழகுபடுத்துகிறார்கள்.
அந்த வகையில், மதுரை ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை ஊழியர்கள் இரும்புத் தகடுகள், நீண்ட குழாய்கள், போல்ட், நட்டுகள், ஆங்கில சி எழுத்து வடிவ இரும்பு பொருட்கள் ரயில் பெட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடும் அச்சாணி, உடைந்த இரும்பு சுருள், ரயிலை நிறுத்த உதவும் வாயு அடைப்பான்கள், திறப்பான்கள், வளையங்கள், தண்டவாள துண்டுகள், தண்டவாளத்தை ரயில் பாதையுடன் இணைக்கும் கிளிப்புகள், ரயில் பாதை சந்திப்புகளை இணைக்க பயன்படும் வாஷர், வளையங்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி கோவில் கோபுரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த கோபுரத்தை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் குண்டேவார் பாதல் வழிகாட்டுதலோடு மதுரை ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை ஊழியர்கள் 10 நாட்களில் உருவாக்கியுள்ளார்கள். இந்த கலை பொருள் ரயில்வே ஊழியர்களின் புதுமையான கண்டுபிடிப்பு, திறமை, கூட்டுமுயற்சி, அர்ப்பணிப்பு, நிறுவனத்தில் உள்ள வளத்தை பலமாக்கும் பண்பு ஆகியவற்றிற்கு உதாரணமாக திகழ்கிறது. இந்தக் கலைப்பொருள் தற்போது மதுரை கோட்ட ரயில்வே அலுவலக கட்டிடத்தின் முன் வாசல் அருகே நிறுவப்பட்டு பார்ப்போரை பரவசப்படுத்துகிறது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.