ஸ்டாலினின் 200 இலக்கு ! அச்சுறுத்தும் பஞ்ச பூதங்கள்!
திமுகவின் இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல மாநாடுகள், பாக முகவர்களின் மண்டல பயிற்சிப்பாசறை மாநாடுகள், மகளிரணியின் மண்டல மாநாடுகள், வீடுவீடாகச் சென்று இந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்கள் முன்னேற்றத் திட்டங்கள் குறித்து மகளிரணியினர் விளக்கிச் சொல்லும் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், வருகிற மார்ச்.08 – ஆம் தேதி திருச்சியில் மாநில மாநாடு என கட்சியினரை முழு உத்வேகத்துடன் தேர்தல் களத்தில் இறக்கியுள்ளார் திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
சில நாட்களுக்கு முன் சென்னை அருகே திருவிடந்தையில் நடந்த பாகமுகவர்கள் மாநாட்டில் கூட 200 தொகுதிகளுக்கும் அதிகமாக வெல்வோம் என நம்பிக்கையுடன் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
கட்சி ரீதியான களப்பணிகள், கடந்த வாரம் வழங்கிய 5,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, பொங்கலுக்கு வழங்கிய 3,000+ மகளிர் உரிமைத் தொகை 1,000 என இந்த ஒரு மாத இடைவெளியில் 9,000 ரூபாய் வழங்கியது, திமுக ஆட்சி மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் பெண்களிடையே ஏகோபித்த நம்பிக்கையை விதைத்துள்ளது. அதே போல் அடுத்து வரும் திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை 2,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை.
இப்படி கட்சி ரீதியாகவும் ஆட்சியின் திட்டங்கள் ரீதியாகவும் திமுகவின் வாக்குகளை உறுதிப்படுத்தி வந்தாலும் முதல்வர் ஸ்டாலினின் 200 தொகுதிகள் இலக்கிற்கு சின்னச் சின்ன சிக்கல்கள் நீறுபூத்த நெருப்பாக இருக்கத்தான் செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இதில் முதல் நெருப்பு :
அரசு உதவி பெறும் கல்லூரிப் பேராசிரியர்களின் தொடர் போராட்டம் இப்போது வரை ஓயவில்லை. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கான பணிமேம்பாடு மற்றும் ஊதிய நிலுவைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பது. 2021-ல் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆணையின்படி அரசுக்கல்லூரி பேராசிரியர்களுக்கு மட்டும் பணிமேம்பாடு, நிலுவைத் தொகை முழுவதுமாக வழங்கப்பட்டுவிட்டது.
ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு கோவை, தஞ்சை மண்டலங்களுக்கு மட்டும் வழங்கிவிட்டது அரசு. சென்னை, மதுரை உள்ளிட்ட மீதமுள்ள ஆறு மண்டலங்களின் பேராசிரியர்களுக்கு பணிமேம்பாடு ஆணையை மட்டும் வெளியிட்டுவிட்டு ஊதிய நிலுவைத் தொகையை வழங்காமல் இன்னமும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது அரசு. இதனால் அந்த மண்டலத்திற்குட்பட்ட நூற்றுக்கணக்கான அரசு உதவி பெறும் கல்லூரிப் பேராசிரியர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவற்றை நடத்தி….நடத்தி…..நொந்து வெந்து போய் கிடக்கிறார்கள்.
இரண்டாவது நெருப்பு :
சம வேலை, சம ஊதியம் கேட்டுப் போராடிப் போராடி சலித்துப் போனாலும் மனசுக்குள் சங்கல்பம் எடுத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள்.
மூன்றாவது நெருப்பு :
ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி அரசாணை வெளியிட்டதற்காக இந்த மாதம் 08-ஆம்தேதி ஜாக்டோ-ஜியோ சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராடு விழாக் கூட்டம் நடத்தினாலும் அங்கேயும் பலத்த அதிருப்தியுடன் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், உள்ளுக்குள் குமுறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நாலாவது நெருப்பு :
வெளி மாவாட்டங்களில் சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களின் தொடர் போராட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
ஐந்தாவது நெருப்பு :
கண் துடைப்புக்காக சில நூறு தற்காலிக செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டது. ஆனால் அதே கோரிக்கைக்காக பல நூறு செவிலியர்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பஞ்சபூதங்களும் சேர்த்து ஆட்சியை ரொம்பவே பயமுறுத்தி வருகின்றன. மேற்படி ஐந்து வகையான போராட்டக்காரர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால் சில லட்சங்கள். இதெல்லாம் திமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்கதிகள்.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னர் இந்த சங்கட சங்கதிகளையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் கவனித்தால் ‘வெல்வோம் 200 சாத்தியம்.
— கரிகாலன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.