50,000 தேனீக்களுடன் நட்பு கொண்ட வினோத மனிதன்!
பொதுவாக தேனீக்கள் என்றாலே, நம்மில் பலருக்கும் ஒருவித அச்சம் உண்டு. அதன் கொடுக்குகள் ஏற்படுத்தும் வலியும், வீக்கமும் இதற்குக் காரணம். தேனீயைப் பார்த்தாலே தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நண்பர்களாக உள்ளன.

உத்தரப் பிரதேசம் புலந்தஷாஹர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பவர்தான் அந்த “தேனீக்களின் நண்பன்”. சமீபத்தில் இவரது உடல் முழுவதும் ஆயிரக்கணக்கான தேனீக்கள் சூழ்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. 40,000 முதல் 50,000 தேனீக்கள் அவரது உடல் முழுவதும் ஒட்டிக்கொண்டிருக்க, அவர் பதற்றமின்றி, அமைதியாக நிற்கிறார். ஆச்சரியம் என்னவென்றால், ஒரு தேனீ கூட அவரைக் கொட்டவில்லை.
பொதுவாக மழைக் காலங்களில், தேனீக்களுக்கு உணவு கிடைப்பது மிகவும் கடினம். இந்தச் சூழ்நிலையில், அந்தப் பகுதி தேனீக்களுக்கு ஒரு மீட்பராகவே மாறியுள்ளார் ராஜேந்திரா. தினமும், அந்தத் தேனீக்களுக்குத் தேவையான உணவை ஏற்பாடு செய்து அவற்றுக்கு உணவளித்து அவற்றின் பசியைப் போக்கி வருகிறார். இவரது இந்தச் சேவையால் அப்பகுதி மக்கள் அவரை “தேனீ பிரியர்” (bee lover) என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
— மு. குபேரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.