தஞ்சை பெரிய கோயிலின் தொன்மையை சிதைக்கும் தொல்லியல் துறை !
தஞ்சாவூர் பெரிய கோவிலின் கிரிவலப் பாதையை சீர் செய்வது அகழி மற்றும் சுற்றுச்சுவரை தொன்மை மாறாமல் புதுப்பிப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக தஞ்சாவூர் மாநகராட்சியின் சார்பில் 4.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அந்த நிதியை பயன்படுத்தி இன்று வரையில் அப்பணிகளை செய்யாமல் கிடப்பில் போட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது, தொல்லியல்துறை.
கட்டிடக்கலையில் சிறந்து விளங்கும் யுனெஸ்கோ பதிவு பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலின் தொன்மையை தொல்லியல்துறை அழிவுப்பாதையில் கொண்டு செல்வதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதயவிழா நடைபெறும் நிலையில், பாழ்பட்டு கிடந்த கிரிவலப்பாதையை சீர்செய்தும் மின்விளக்குகள் அமைத்தும் கொடுத்திருந்தார் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்ராமநாதன்.
தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் எந்த ஒரு மராமத்து பணிகளையும் தொல்லியல்துறையின் வாயிலாகவே மேற்கொள்ள முடியும். எனவே, கோயிலின் சுற்றுச்சுவரை புணரமைக்கவும், புதர் மண்டிக் கிடக்கும் அகழியை சீர் செய்யவும் மாநகராட்சியின் சார்பில் 4.5 கோடியை தொல்லியல்துறைக்கு ஒதுக்கீடும் செய்து கொடுத்திருந்தார். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்தும் தகுதியான ஒப்பந்ததாரர் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக்கூறி, தஞ்சை கோயில் புணரமைப்புப் பணியை புறக்கணித்திருக்கிறது, தொல்லியல் துறை. தொல்லியல் துறையின் இத்தகைய அலட்சியத்தை கண்டித்து, தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் தமிழக மற்றும் புதுச்சேரி தலைவர் புலவர் தமிழ்ச்செம்மல் ஆதிநெடுஞ்செழியன் தலைமையில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியும் எந்த பலனுமில்லை.
இதுஒருபுறமிருக்க, தஞ்சையில் சோழர்கள் அருங்காட்சியம் அமைப்பதற்கான பணிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கின்றன. சோழப்பேரரசின் அடையாளமாக ராஜராஜசோழன் திகழ்கிறார். குடவோல முறை, நில அளவை முறை, வரி வசூல் முறை இன்றளவும் முன்னுதாரணமான நடைமுறைகளாக தொடர்கின்றன. 11-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த ராஜராஜசோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் இந்தியாவில் கங்கை வரையிலும்; கடல் கடந்து மலேசியா, இந்தோனிஷா, தாய்லாந்து வரையிலும் சோழ பேரரசை விரிவுபடுத்திய பெருமை கொண்டிருந்தார்கள். சோழர்கள் காலத்தில் கரிகாற்சோழன் கட்டிய கல்லணை இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மாமன்னன் ராஜராஜசோழன் எழுப்பிய கோவில்கள் பற்றிய வரலாறு, கல்வெட்டுகள், செப்பேடுகள், அரியவகை சிலைகள் அனைத்தையும் ஓரிடத்தில் கொண்டு வந்து தஞ்சையில் சோழர்கள் அருங்காட்சியம் அமைக்கப்படும் என்பதாக, கடந்த 2023 மார்ச்-20 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதற்காக, தஞ்சையில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அருகில் காலி இடத்தில் சோழர்கள் அருங்காட்சியம் அமைப்பது என முடிவானது. இதனை தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 2023 ஜூலை 22 அன்றும்; 2023 அக்-4 அன்று அமைச்சர் தங்கம் தென்னரசும் இடத்தை நேரில் ஆய்வு செய்து சென்றார்கள். இதற்காக 54 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும், இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட, அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், எதிர்வரும் ஜூன்-14 அன்று தஞ்சாவூர் வருகை தரும் முதல்வர் சோழர்கள் அருங்காட்சியம் அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் விழாவை நடத்த வேண்டும் என்பதாக தஞ்சை மக்களின் சார்பில் கோரிக்கை விடுத்திருக்கிறார், தஞ்சை மாநகர் மாவட்ட அமமுக செயலர் பா.ராஜேஸ்வரன்.
தமிழனின் பெருமையாக, சோழர்களின் ஆட்சியையும் அவர்களின் கட்டிடக்கலையும் மார்தட்டி பேசுவதில் உள்ள அக்கறையை குறைந்தபட்சம் அதன் தொன்மை மாறாமல் பாதுகாப்பதிலும், ஆவணப்படுத்துவதிலும் அக்கறை காட்ட வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும் !
— தஞ்சை க.நடராஜன்.