தொழிலாளியாய் வாழ்ந்த முதலாளி !
‘சிகரம் தொட்ட பக்கங்கள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது, அந்த ஆவணப்படம். தனிநபர் ஒருவரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு என்பதாக கடந்து போக முடியாத அளவுக்கு, நம் வாழ்வியலோடும் பிணைந்து போகிறது அந்த ஒரு மணிநேர கால பொக்கிஷம்.
”அந்தக் குடும்பத்துக்கு பேரே சுள்ளெறும்பு குடும்பம். வீட்ல நாலு, அஞ்சி மாடு இருக்கும். இடுப்புல துண்ட கட்டிக்கிட்டு அந்த மாட்டு சாணிய தலைச்சுமையா சுமந்து போவாரு. பெய்யிற மழையில அந்த சாணி முகத்துல வழியும். அதோடதான் போவாரு..”னு கமலம் பாட்டி சுட்டும் அந்த பொடியன்தான் ஆவணப்படத்தின் நாயகன்.

“எனக்கு அப்பா மாதிரி”, “அரசர்கள் சொல்வதைப்போல, எம் மக்கள் என்பார்”, “எங்களை வேலைக்காரன் என்று ஒரு நாளும் சொன்னதேயில்லை”, “சோறு யாரு வேனா போடலாம். ஆனா, உணவை உணர்வோடு போட்டவர்” என்றெல்லாம் தொழிலாளர்கள் சொல்லும் அளவுக்கு, ஊழியர்களையும் தம் பிள்ளைகளாகவே பாவித்தவர்.
“சேல்ஸ் செக்ஷன்ல பார்த்திருக்கேன். பில் போட்டு பார்த்திருக்கேன். கஸ்டமருக்கு துணியை விரித்துக் காட்டிக் கொண்டிருப்பதை பார்த்திருப்பேன். அவரை முதலாளி என்று சொல்ல முடியாது. சக தொழிலாளியாகத்தான் இருப்பார்.” என்பதாக, அதுவே அவரது வெற்றியின் ரகசியமாகவும் குறிப்பிடுகிறார்கள் அவரது காலத்தில் அவருடனே பயணித்த சக தொழிலதிபர்கள்.
ஆசியாவின் மிகப்பெரிய ஜவுளி மாளிகை என்ற புகழோடும், மலைக்கோட்டைக்கு அடுத்து, திருச்சியின் அடையாளமாகவும் மாறி நிற்கும் சாரதாஸ் என்ற ஜவுளி சாம்ராஜ்யத்தை கட்டியமைத்த மணவாளனைத்தான் எல்லோரும் இப்படி சிலாகிக்கிறார்கள்.
திருச்சி மாவட்டத்தின் ஓமாந்தூர் கிராமத்தில் பிறந்தவர் மணவாளன். ஐந்தாம் வகுப்பைக்கூட படிக்காதவர். ஆனாலும், ஐந்து மொழிகளில் பேசக்கூடிய ஆற்றலை கொண்டவர். பிழைப்புக்காக 13 வயதில் இலங்கைக்கு போனவர், ஜவுளிக்கடையில் கடைநிலை ஊழியனாய் வாழ்வை தொடங்கியவர். 1955 இல் இலங்கை நாவலப்பட்டியில் முதன் முதலாய் சாரதாஸ் என்ற பெயரில் துணிக்கடையை திறந்தவர். மிகக்குறுகிய காலத்திலேயே, 1957 இல் கொழும்பில் அதன் மற்றொரு கிளையை நிறுவியவர். 1963 இல் இந்தியாவுக்கு திரும்பியவர், கனிமவள சுரங்கத் தொழில், நூற்பாலை, கோழிப்பண்ணை, பணியன் உற்பத்தி என பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் கொண்டவர்.

திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில், மலைக்கோட்டை வீதியில் ஒரு சின்னக்கடை கிடைக்காதா? என்று ஏங்கியவர். அப்போது அம்பீஸ் கபே என்ற பெயரில் இயங்கிவந்த கடை காலியாவதை அறிந்து, அந்த இடத்தை விலைக்கு வாங்கி சிறு கடையாக சாரதாஸ் என்ற துணிக்கடையை 1969 இல் தொடங்கியவர். அந்த காலத்திலேயே, கடன் கிடையாது பேரம் பேசாதீர் NO CREDIT, NO BARGAIN என்று கொட்டை எழுத்தில் எழுதிப்போட்டு வியாபாரத்தை தொடங்கியவர். படிப்படியான வளர்ச்சிக்கேற்ப, பக்கத்து இடங்களை வளைத்துப் பிடுங்காமல் அவர்கள் மனம் வருத்தம் கொள்ளாமல் அவர்கள் திருப்தியடையும் அளவுக்கு விலை கொடுத்து தனது கடையை விரிவுபடுத்தியவர்.
இவரை ரீடெய்ல்ஸ் வியாபாரத்தின் தந்தை என்கிறார்கள். வாடிக்கையாளர்கள் விசாலமாக துணிகளை பார்வையிட்டு தேர்வு செய்வதற்கேற்ப, இளைப்பாறுவதற்கேற்ப வியாபார தளத்தை வடிவமைத்தவர். முதன்முறையாக, ஏ.சி. வசதியையும், கம்ப்யூட்டர் பில்லிங் வசதியையும் கொண்டு வந்தவர்.
“40 வருசத்துக்கு முந்தி சின்ன கடையா இருந்திச்சி. இப்போ பிரம்மாண்டமா மாறியிருக்கு. அப்போதிருந்து இப்போது வரைக்கும் இங்குதான் வர்றோம்.”, “பாட்டி காலத்துல இருந்து இங்கதான். எங்க அம்மா கல்யாணத்துக்கு இங்கதான் புடவை எடுத்தாங்க. இப்போ, என் கல்யாணத்துக்கு முகூர்த்தப்பட்டு எடுக்க வந்திருக்கேன்.”, “நான் 35 வருஷமா இந்த கடைக்கு வரேன். இதோ இப்போ என் மகன கூட்டி வந்திருக்கேன்.” என்று ஒருமுறை நுழைந்துவிட்டால், அவன் தலைமுறைக்கும் அடுத்த கடையை தேடி போக முடியாத அளவுக்கு அந்த வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதில் தன்னிகர் மணவாளன் மட்டுமே.
திருச்சியிலிருந்து மட்டுமல்ல; திருச்சியை சுற்றி கரூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை என அண்டை மாவட்டங்களிலிருந்தும் பலர் இங்குதான் வந்து செல்கிறார்கள். சோழப்பேரரசு காலத்தில், ரோமானியர்களும் கிரேக்கர்களும் மஸ்லின் ரக துணிகளுக்காக கடல்கடந்து வந்து திருச்சிக்கு வந்து சென்ற 2000 ஆண்டுகால வரலாற்றை மறுவாசிப்பு செய்ய வைத்தவர் மணவாளன். விஷேச காலங்களில் திருவிழாக் கோலமாகத்தான் காட்சியளிக்கும் என்கிறார்கள். “என் பையனோட அளவு எனக்கே தெரியாது. இளங்கோ அண்ணன் சரியா எடுத்து கொடுத்திருவாருனு” வாடிக்கையாளர் ஒருவர் சொல்லும் அளவுக்கு விற்பணையாளர்களின் பெயர்களை உரிமையோடு சொல்லி அழைக்கும் அளவுக்கு பிணைத்திருக்கிறது, வியாபாரத்தை கடந்த பந்தம்.
தீபாவளி, பொங்கல் போன்ற சீசன் சமயங்களில் கட்டுங்கடங்காத கூட்டம் கடை அலைமோதும். அந்த பெருங்கூட்டத்தை எப்படியாவது பணமாக்கிவிடத்தான் எல்லோரும் பேராசைப்படுவார்கள். மணவாளன் வித்தியாசமானவர். அதுபோன்ற வேளைகளில், குறிப்பிட்ட நேரம் கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிடுவார். நெரிசல் இல்லாமல் மக்கள் தங்கள் விருப்பத்திற்கு துணிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது முதற்காரணம். அடுத்து, தனது பணியாளர்கள் சாப்பிடுவதற்கான இடைவேளை இருக்க வேண்டும் என்பது. மூன்றாவது காரணம்தான் முக்கியமானது. இதே என்.எஸ்.பி. ரோட்டில் கடை வைத்திருக்கும் மற்ற வியாபாரிகளுக்கும் வியாபாரம் நடக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டதினாலேயே சக தொழிலதிபர்களாலும் போற்றுதலுக்குரிய மனிதராக உயர்ந்து நிற்கிறார், மணவாளன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
”நான் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்பதற்கு பெரிய சப்போர்ட் அவர்தான்” என்கிறார், ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன். ”என்னை தமிழகத்துக்கு கொண்டு வந்தவர் இவர்தான்” என்கிறார், எம்.சி.ஆர். ரிக்சன். ”இன்று 2000, 3000 பேரை வைத்து தொழில் நடத்துகிறோம் என்றால், அதற்கு காரணம் அவர்தான்.” என்கிறார்கள் பலரும். வடமாநில தொழிலதிபர்களும் “பில்லர் ஆஃப் சப்போர்ட்” என்கிறார்கள்.

வியாபாரத்தின் முதுகெலும்பு கொள்முதல்தான் என்பதை தாரக மந்திரமாக கொண்டவர். மும்பை, சூரத், பில்வாடா, பெங்களூர் என்று நாட்டின் பல இடங்களுக்கும் அவரே தேடித்தேடி சென்று கொள்முதல் செய்தவர் மணவாளன். 1978 இலேயே பணத்தோடதான் வருவாரு. பேரம் பேசி வாங்குவாரு. அவரால யாரும் நஷ்டப்பட்டாங்கனு சொல்ல முடியாது. எங்ககிட்ட பேசி குறைக்கிற பலன்களை வாடிக்கையாளர்களுக்கு கம்மி விலைக்கு கொடுக்கனும்னு நினைப்பாரு. வியாபாரத்துக்கும் மனிதருக்கும் மரியாதை கொடுக்கும் மாமனிதர் என்று நினைவுகூர்கிறார்கள், பெரும் தொழிலதிபர்கள் பலரும்.
பொருட்களை பார்த்து பார்த்து வாங்குவது போலவே, அந்த பொருளை கடைவிரிப்பதிலும் கரை கண்டவர். கடையின் விளம்பரம் பாமரனுக்கும் புரிய வேண்டும் என்தற்காக நிறைய மெனக்கெட்டவர். “விலைகளை அடித்து நொறுக்கிவிட்டோம்” என்பது அவர் செதுக்கிய முத்தாய்ப்பான வரிகளுள் ஒன்று. சுவர் விளம்பரத்தின் மீது சுவரொட்டிகள் ஒட்டி சிதைக்கப்படுவதை தடுப்பதற்காக, சாரதாஸ் என்ற எழுத்தின் மீதே ஜல்லிக்கற்களை சுவரில் பதித்து தனி உத்தியை கையாண்டவர். மங்களகரமான தரமான மஞ்சள் பையை கையில் கொடுத்து வாடிக்கையாளர்களையே விளம்பர தூதுவராக்கியவர். 90-களில் பள்ளி பிள்ளைகளின் விருப்பமான புத்தகப்பை சாரதாஸின் மஞ்சள் பை தான்.
தான் வாழ்ந்த ஓமாந்தூரில், கரைபுரண்டோடிய உப்பாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்தபோது, தன்னைப்போலவே நீரில் அடித்துவரப்பட்ட மாடு ஒன்றின் மீதேறி உயிர்பிழைத்திருக்கிறார் மணவாளன். நந்தியாக வந்து தன்னை மீட்டது தெய்வாதீன செயல் என்றுணர்ந்தவர், கோயில் திருப்பணிகளுக்காக பெரும் பங்காற்றியிருக்கிறார். பல திருக்கோயில்களின் கும்பாபிக்ஷேகங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார். மலைக்கோட்டைக்கு மதில் சுவர் எழுப்பியதும் மணவாளன்தான். 40 ரூபாய்க்கு டியூப்லைட்டை மாட்டிவிட்டு அதைவிட பெரிய எழுத்தில் தன் பெயரை பதிவிடும் நபர்களுக்கு மத்தியில், எந்தவித விளம்பரமும் இல்லாமல் இந்த சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார், அவர். ராஜராஜசோழனின் மறுபிறப்பு என்கிறார்கள், ஆலயத்தின் அர்ச்சகர்கள். ரம்ஜான் நோன்பு திறப்பை கடையில் அனுமதித்தவர். மதத்தை வளர்க்காமல், தெளிந்த மனதோடு ஆன்மீகத்தை வளர்த்தவர் மணவாளன் என்கிறார்கள்.
”ஆலமரம் மாதிரி ஆழமாகப் போவதே சிறந்தது” என்ற கோட்பாட்டை வரித்து கொண்டவர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வரும் அளவுக்கு நமது தொழில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். “அப்பா ஒரு தீர்க்கதரிசி” என்கிறார், மகன் ரோஷன். “முதலாளிதான் கடைசிதொழிலாளி என்ற பாடத்தை கற்றுத் தந்தவர் அப்பா” என்கிறார், மற்றொரு மகன் சரத். தந்தைக்காக கூடிய கூட்டத்தை பார்த்து மனம்நெகிழ நன்றி தெரிவிக்கிறார், மகள் பிரியதர்ஷினி. கடையின் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும், புன்னகை ததும்ப காட்சியளிக்கும் மணவாளன் திருவுருவப்படத்தை திறந்து வைத்திருக்கிறார், துணைவியார் கமலம்மாள். ஆம். சாரதாஸ் சாம்ராஜ்யத்தின் கடைசி தொழிலாளியாய், கடலென பரந்து கிடக்கும் ஆடைகள் ஒவ்வொன்றிலும் உணர்வாய் கலந்திருக்கிறார் மணவாளன.
அட்டகாசமான கட்டுரைகள் – அங்குசம் இதழ்
2025 – May 1 – 15 Angusam Book 🔥🔥💐💐👌👌
— அங்குசம் செய்திப்பிரிவு.