உயிருக்கு ஆபத்தான ஸ்மோக் பிஸ்கெட் ! உணவு வணிகர்களுக்கு எச்சரிக்கை !
உயிருக்கு ஆபத்தான ஸ்மோக் பிஸ்கெட் ! உணவு வணிகர்களுக்கு எச்சரிக்கை ! சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் ஒரு சுற்றுலா பொருட்காட்சி ஒன்றில் “புகை ரொட்டி” (ஸ்மோக் பிஸ்கெட்) சாப்பிட்ட சிறுவன் மூச்சுவிட முடியாமல் மயங்கி சரிந்த காட்சி நாடெங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனையடுத்து, ஸ்மோக் பிஸ்கெட்டில் பயன்படுத்தப்படும் திரவ நைட்ரஜன் குறித்த விவாதங்கள் எழத் தொடங்கின. எவை எவற்றுக்கெல்லாம் எந்த அளவுகளில் அதனை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளையெல்லாம் மீளாய்வு செய்து விழிப்புணர்வு தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ”பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006-ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதாக எச்சரிக்கை விடுத்து உணவு பாதுகாப்புத் துறை ஆணையரின் அறிக்கை வெளியாகியிருக்கிறது.
அந்த அறிக்கையில், “ உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களில் உறைதல் பணியினை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது. மேலும் திரவ நைட்ரஜன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவு பொருட்கள் தரம் மற்றும் உணவு சேர்க்கைகள்) ஒழுங்குமுறை. 2011 இன் படி Packing Gas மற்றும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த முடியும்.
எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006, பிரிவு 38(10)-ன்படி உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006-ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
– அங்குசம் செய்திப்பிரிவு.