குளித்தலையில் வாகன விபத்தில் மரணம் அடைந்த முன்னால் ராணுவ வீரரின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர் !
குளித்தலையில் வாகன விபத்தில் மரணம் அடைந்த முன்னால் ராணுவ வீரரின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணா நகரை சேர்ந்தவர் டோமினிக் பிரபாகர் வயது 44. இவர் ராணுவத்தில் ஏ எஸ் சி பட்டாலியனில் பணியாற்றி கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
இவருக்கு சங்கீதா வயது 40. என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். டோமினிக் பிரபாகருக்கு சொந்தமான நிலம் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி தனது பைக்கில் குளித்தலை அண்ணா நகரில் உள்ள வீட்டிலிருந்து துவாக்குடிக்கு சென்று விவசாய வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலையில் துவாக்குடி சென்று விவசாய பணிகளை முடித்துவிட்டு
இரவு ஊர் திரும்பி கொண்டு இருந்துள்ளார். திருச்சி BHEL அருகே வரும் பொழுது வேகத்தடையில் வாகனத்திலிருந்து தவறி டோமினிக் பிரபாகரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குளித்தலை அருகே குப்பாச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் சங்கீதா மற்றும் அவரது இரண்டு மகன்களும் சேர்ந்து மூளை சாவு அடைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் உடல் உறுப்புகளை தானம் செய்வது என முடிவு செய்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்புதல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெற்ற பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது உடல் குளித்தலையில் நாளை 18.08.2023 காலை 7 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
நாட்டுக்காக பணியாற்றிய ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் தானம் செய்த முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு குளித்தலை நகர பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அவரது குடும்பத்தாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
– நௌஸாத்