”கருத்தியலைத் தான் உயர்த்திப் பிடிக்க வேண்டும்” — ’திருக்குறள்’ சினிமா விழாவில் திருமா பேச்சு!
’ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ சார்பில் இயக்குனர் அ.ஜா.பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கி, இந்த ஜூன்.27-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் படம் ‘திருக்குறள்’—வள்ளுவரோடு திரைப்பயணம்’. பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’—தி கிங் மேக்கர்’ என்ற பெயரிலும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘வெல்கம்பேக் காந்தி’ என்ற பெயரிலும் தயாரித்து-இயக்கி வெளியிட்ட பாலகிருஷ்ணனின் மூன்றாவது படைப்பு இந்த ‘திருக்குறள்”. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா, சென்னையில் ஜூன்.06—ஆம் தேதி இரவு நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், இயக்குனர் வீ.சேகர், ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தில் நடித்திருக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் பேசிய இருவரின் பேச்சு..

இயக்குனர் அ.ஜா.பாலகிருஷ்ணன் “ஒரு மோசமான திரைக்கதையை வைத்து நல்ல சினிமா எடுக்க முடியாது என ஜப்பானின் புகழ்பெற்ற இயக்குனர் அகிராகுரோசவா சொல்வார். அதை மனதில் வைத்துத் தான் இந்த திருக்குறளின் கதை-திரைக்கதையை செம்பூர் கே.ஜெயராஜ் எழுதினார். காமராஜ் படத்திற்கும் இவர் தான் திரைக்கதை. தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையைச் சேர்ந்த ஜெயராஜ், திராவிட இயக்கத்தின் போராளி. இப்படிப்பட்டவரின் திரைக்கதை தான் இப்படத்திற்கு பெரும்பலமாக இருந்தது.
இப்படம் உருவாக இன்னொரு முக்கியக் காரணம் கலைஞரின் குறளோவியம் தான். எங்களின் இந்த சினிமாவின் காட்சிப்படுத்தலுக்கு பெரிதும் உதவியது கலைஞரின் குறளோவியம். அதே போல் படத்தின் தயாரிப்பிற்கும் மிகப்பெரிய பக்கபலமாக இருந்தவர்கள் வேலூர் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விஸ்வநாதனும் மதுரை டி.பி.ராஜேந்திரனும் தான். எல்லாம் கைகூடியதும் இசைஞானி இளையராஜாவிடம் போனோம். அவருக்கும் கதை பிடித்து அற்புதமான இசையைத் தந்துள்ளார்.
நான் பேச வேண்டிய பல விசயங்களை வள்ளுவனாக நடித்துள்ள கலைச்சோழன் பேசிவிட்டார். அதனால் எனக்கு வேலை குறைந்தது. வாசுகியாக நடித்திருக்கும் தனலட்சுமிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. கேமராமேன் எட்வின்சகாய் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. தமிழர்கள் இப்படத்திற்கு துணை நின்று வெற்றிபெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் பாலகிருஷ்ணன்.
கடைசியாக பேசினார் தொல்.திருமா.
“பாலகிருஷ்ணன் இதற்கு முன்பு இயக்கிய காமராஜ், காந்தி படங்களுக்கு தலைவர்களின் பெயரை தலைப்பாக வைத்தார். ஆனால் இப்படத்திற்கு திருவள்ளுவர் என வைக்காமல் திருக்குறள் என்ற தலைப்பை வைத்துள்ளார். இதற்குக் காரணம் வள்ளுவரின் கருத்தியலுக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற பார்வை அவரிடத்தில் மேலோங்கி இருப்பது தான். வள்ளுவர் முன்வைத்த வாழ்வியல் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தனிநபரை முன்னிலைப்படுத்துவதைவிட அவர்களின் கருத்தியலைத் தான் முன்னிலைப்படுத்த வேண்டும், உயர்த்திப் பிடிக்க வேண்டும், வெகுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அது தான் இப்போதைய தேவையும் அவசியமும் கூட.
ஏன்னா இப்போது ஒரு கூட்டம் வள்ளுவருக்கு சாதிச் சாயம் பூசுகிறது, மதச்சாயம் பூசுகிறது. ஆனால் மதச்சார்பின்மையில் உறுதியாக இருந்தவர் வள்ளுவர் என்பதை இயக்குனர் வீ.சேகர் மிகத் தெளிவாகச் சொன்னார். வெள்ளையர்கள் வந்த பின்பு தான் ஓலைச்சுவடியில் இருந்த குறள் அச்சுக்கு வந்தது. அதற்கு அச்சாரமாக இருந்தவர் அயோத்திதாசப் பண்டிதர். 1800 களிலேயே ஹென்றி எல்லீஸும் ஹென்றி ஹெய்ஸும் தமிழிலிந்து பிறந்தது தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம் துளு ஆகிய மொழிகள் என்பதை ஆதாரப்பூர்வாக எழுதியுள்ளார்கள். ஆனால் இதை கன்னடர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இப்போது கமல்ஹாசனுக்கு எதிராக கொந்தளிக்கிறார்கள்.
தமிழின் மாண்பை, தமிழர்களின் மாண்பை பறைசாற்றுகிற நூல்கள் எத்தனையோ இருந்தாலும் திருக்குறள் தான் உலகளவில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் வெளிவந்துள்ள நூல். இது மனிதகுலத்துக்கே பொதுவான நூல், அதனால் தான் இது உலகப் பொதுமறை. இதை உயர்த்திப் பிடிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை” என உணர்வுப்பூர்வமாகப் பேசினார் திருமா.
‘திருக்குறளில்’ வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், புலவர் நக்கீரனாக இயக்குனர் சுப்பிரமணியசிவா, புலவர் பெருந்தலைச் சாத்தனாக நடிகர் கொட்டாச்சி, மற்ற கதாபத்திரங்களில் நடிகை பாடினி, நடிகர் குணா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு—எட்வின்சகாய், ஆர்ட் டைரக்டர் –சுரேஷ் கலேரி, தயாரிப்பு நிர்வாகம்—எஸ்.ஜெய்சங்கர், பி.ஆர்.ஓ.-புவன் செல்வராஜ்.
— மதுரை மாறன்.