கையுரை, ஹெல்மேட் அணிந்து திருட்டு ! போலீசாரிடம் சிக்கி கம்பி எண்ணும் பலே திருட்டு கும்பல் !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புதுஅப்பனேரி சக்கரபாணி நகரைச் சேர்ந்தவர் நல்லசிவன்(67). இவர் தனது குடும்பத்தினருடன் மே 31-ம் தேதி சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மறுநாள் ஜூன் 1-ம் தேதி இரவு ஊருக்குத் திரும்பினார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, ஒரு பீரோ உடைக்கப்பட்ட நிலையிலும், மற்றொரு பீரோ திறந்த நிலையிலும் இருந்தது.
மேலும் அதிலிருந்த சுமார் 20 பவுன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருள்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பார்ட் ஜான் உத்தரவின் பெயரில் கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெகநாதன் மேற்பார்வையில் மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன் கொண்ட தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

திருட்டு நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா இல்லை என்பதால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்த போது ஹெல்மேட் கையுறை அணிந்த 4 பேர் செல்வது தெரியவந்தது. முகத்தினை மறைத்து இருந்தால் அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் ஒரு காட்சியில் ஒருவர் ஹெல்மேட்டினை கழற்றிய போது அவரது முகம் அடையாளம் தெரிந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அதில் அடையாளம் தெரிந்த நபர் காஞ்சிபுரம் அகரம்தேன் எம்.ஜி.ஆர். நகர் நேசமணி தெருவைச் சேர்ந்த மோகன் என்ற சகாயராஜ்(48) என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் அவர் தனது கூட்டாளியுடன் சென்னையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தும் போலீசார் சென்னை விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மோகன் என்ற சகாயராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீண்டும் கொள்ளையடிக்க கோவில்பட்டி பகுதிக்கு சென்றுள்ளது தெரியவந்தது.இதையெடுத்து தனிப்படை போலீசார் கோவில்பட்டி விரைந்தனர்.
மேலும் நேற்று கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கிடமான முறையில் அப்பகுதியில் நின்று கொண்டு இருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் காஞ்சிபுரம் அகரம்தேன் எம்.ஜி.ஆர். நகர் நேசமணி தெருவைச் சேர்ந்த மோகன் என்ற சகாயராஜ்(48), திருத்தணி பாலாஜி நகரைச் சேர்ந்த சதீஷ்(37),சாத்தூர் காமராஜர் நகர் கணேஷ் தெருவைச் சேர்ந்த முத்துராஜா(43), சென்னை அம்பத்தூர் பானு நகரைச் சேர்ந்த பொன்முருகன்(53) என்பதும், நல்லசிவன் வீட்டில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையெடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 16.5 பவுன் தங்கக்கட்டி மற்றும் அரை கிலோ வெள்ளிக்கட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை, திருட்டு, கஞ்சா கடத்தல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த முத்துராஜா வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த போது சென்னையில் போலீசாரிடம் சிக்கி புழல் சிறையில் இருந்துள்ளார்.
அப்போது அங்கு ஏற்கனவே திருட்டு வழக்கில் சிக்கி இருந்த மோகன், சதீஷ், பொன்முருகன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளியே வந்ததும் 4 பேரும் சேர்ந்த கூட்டாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட முடிவு எடுத்துள்ளனர். அதன்படி வெளியே வந்ததும் முத்துராஜா திருடுவதற்கு வீடுகளை தேடியுள்ளார். அப்படி தேர்ந்தெடுத்த வீடு தான் திருட்டு சம்பவம் நடந்த நல்லசிவன் வீடு, கையுரை, ஹெல்மேட் அணிந்து யார் என்று முகம் தெரியாத அளவிற்கு மூடிக்கொண்டு தான் இந்த கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா குறைவாக உள்ள இடங்கள், திருட்டு அரங்கேறியதும், விரைந்து செல்லக்கூடிய சாலை பகுதி என வீடுகளை தேர்ந்தெடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் திருடிய தங்கம் மற்றும் வெள்ளி பொருள்களை உருக்கி கட்டியாக மாற்றிவிடுவதையும் இந்த கும்பல் வாடிக்கையாக வைத்திருந்தும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டியுள்ளார்.
வீட்டை உடைத்து தங்கம் வெள்ளி பொருள்களை திருடி விட்டு தலைமறைவாக இருந்த கும்பல் மீண்டும் திருட்டு சம்பவத்தினை அரங்கேற்ற வந்த போது போலீசாரிடம் திருட்டு கும்பல் சிக்கிய சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
— மணிபாரதி