சமண ஆலயங்களில் தொன்மை வாய்ந்த திரைலோக்கிய நாதர் ஜைன ஆலயம்!- ஆன்மீக தொடா்
இந்தியா முழுக்க பரவியிருந்த ஜைன மதம் தமிழகத்தில் சமணம் ஆருக்கதம் என்ற இரு பிரிவுகளில் பரவியது. தமிழகத்தில் இருந்தும் சமண ஆலயங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது காஞ்சிபுரத்தில் இருக்கும் திரைலோக்கியநாதர் ஜைன ஆலயம். இந்த கோவில், காஞ்சிபுரம் ஜைனக் காஞ்சி என அழைக்கப்படும் திருப்பருத்தி குன்றில் இருக்கின்றது. இந்த கோவில் கிபி ஆறாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவால் கட்டப்பட்டது. அப்போதிலிருந்தே இந்த கோவில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. சமண ஆலயங்கள் தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் என பல இடங்களில் இன்றும் வழிபட்டு கொண்டிருக்கின்றன தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் சமணர்கள் வசிப்பதாக சொல்லப்படுகிறது.
சமணர்கள் 24 தீர்த்தங்கரர்களை போற்றி வணங்குகிறார்கள். மகாவீரர் 24 ஆவது தீர்த்தங்கரர். காஞ்சிபுரம் திருப்பருத்தி குன்ற ஜைன கோவில். வர்த்தமனார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மகாவீரர் புஷ்ப தந்தர், தர்ம தேவி ஆகியோர் கருவறையில் காட்சி தருகிறார்கள். மற்றும் பிரம்மதேவர், ரிஷப நாதர் ஆகியோரும் காட்சியளிக்கிறார்கள். கோயிலுக்கு பின்புறத்தில் தலவிருட்சமான குரா மரம் இருக்கிறது. அந்த காலத்தில் சமணம் கடுமையான துறவு நிலை கொள்கைகளை கொண்டதாக இருந்தது. பிற உயிர்களுக்கு எந்த துயரமும் ஏற்படக் கூடாது என்பதற்காக சமண திகம்பரர்கள் பல் துலக்காமல், நீர் ஆடாமல் தங்கள் தலைமுடிகளை தாங்களே கையால் பிடுங்கிக் கொள்வார்கள். உடலுக்கு வலி ஏற்படுத்தி கொள்வதன் மூலம் ஆன்மாவை தூய்மையாக்கி இறைவனின் அருளைப் பெறலாம் எனும் கொள்கை உடையவர்கள் சமணர்கள். இல்லற நெறியுடன் வாழ்பவர்கள் துறவறம் மேற்கொண்டால் மட்டுமே வீடு பெயர் அடைய முடியும்.

பெண்களாக பிறந்தவர்களுக்கு வீடு பேறு இல்லை எனும் கடுமையான கொள்கைகளை கொண்டது சமணம். சமண மதத்தை சார்ந்தவர்கள் நாள்தோறும் ஒரு வேலையாவது அருக வழிபாடு செய்ய வேண்டும். தீர்த்தங்கரர்களுக்கு அருகன் என்ற பெயரும் உண்டு. தினமும் அருகனின் சிலைக்கு முன்னால் விளக்கேற்றி சமணர்களின் புனித நூலான தத்துவார்த்த சூத்திரம் எனும் மோட்ச சூத்திரத்தை படித்து அருகனை வழிபடுகிறார்கள். மகா வீரரை வழிபட்டு விரதமிருப்பவர்கள் காலை ஒரு வேலை மட்டுமே உணவருந்தி பின்னர், தண்ணீர் கூட பருக மாட்டார்கள். விரதம் இருக்கையில் தத்துவார்த்த சூத்திரத்தை வாரத்துக்கு ஒரு பதிகம் என்று பாராயானம் செய்து மகாவீரர் ஜெயந்தி அன்று விரதத்தை நிறைவு செய்வார்கள்.
சமணர்களின் முதன்மை தத்துவம் அஹிம்சை அதாவது பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காமல் இருப்பது. ஆதலால், இறைவனுக்கு அர்ச்சனை செய்யும்போது கூட தாவரங்களுக்கு துன்பம் இழைக்காமல் மண்ணுக்கு மேலே விளைந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மண்ணுக்கு மேலே கிடைக்கும் நீர் சந்தனம், அரிசி, மலர், கொப்பரை தேங்காய்,தீபம், தூபம் பழம் ஆகியவற்றால் தினமும் அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யப்படும் பொருட்கள் மீண்டும் முளைக்காதவையாகவும் இருக்க வேண்டும். பிறகு, நீர், பால், சந்தனம் ஆகியவற்றால் மகாவீரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு கோவிலில் விளக்கேற்றி தீர்த்தங்கரரை வழிபடுகிறார்கள். மேலும், தமிழ் மன்னர்களிடமிருந்து சமணத் துறவிகள் பெற்ற ஆதரவு மற்றும் இப்பகுதியில் திகம்பர சமண மதம் பரவியதற்கான ஒரு சான்றாக இந்த கோவில் விளங்குகிறது. இது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படுகிறது.
– பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.