அதிகாரத்திற்கு என்னதான் வேண்டும் …?
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்களை மிகத் தரக் குறைவாகப் பேசும் காணொலியைப் பார்க்க முடிந்தது. தேர்ச்சி சதவீதம் குறைந்த காரணத்தை முன்வைத்து ஆசிரியரைத் திட்டும் காட்சி அது.
மாவட்ட நிர்வாகப் பணியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இவருக்கு ஆசிரியரைத் திட்டுவது எளிதாகிறது.
அவரது பணி குறித்து கூகுள் செய்தால் கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்த மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியேற்றுள்ளார். சரியாக மூன்று மாதங்களில் அவரது நிர்வாகத்துக்கு உட்பட்ட அனைத்துத் துறைகளைப் பற்றியும் எந்த அளவுக்கு ஆய்வு செய்திருப்பார் என்பதெல்லாம் அவருக்கே தெரியும்.

ஆனால் பள்ளி ஆசிரியர் ஒரு வருட காலமாக மாணவர்களுடன் கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டிருப்பார் அல்லவா?
எடுத்த எடுப்பிலேயே தேர்ச்சி பெறாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் நீங்கள் எல்லாம் ஆசிரியர் பணிக்கே தகுதியற்றவர்கள் என்று பேசுவது அதிகாரத்தை நிலைநாட்டுவதாகவே இருக்கிறது.
காணொலியில் அவர் பேசும் போது அவரின் முன் நிற்கும் ஆசிரியர் கூனிக் குறுகி நிற்பதைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாகவும் இந்த அதிகார வர்க்கத்தின் மீது கடுங்கோபமும் வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிக்கு , உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முகாமுக்காக கடந்த 28 ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது அங்கு அமைந்துள்ள திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றிருக்கிறார். 10,11,12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடித் தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொண்டு இருந்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் ஆகியோர் இருந்திருக்கின்றனர்.
பத்தாம் வகுப்பில் 84% தேர்ச்சியும் பன்னிரண்டாம் வகுப்பில் 75% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் 60க்கும் குறைவாக தேர்ச்சி விழுக்காடு பெற்றிருக்க, வாயில் வந்தபடி மிகவும் மரியாதை குறைவாக சத்தமிட்டிருக்கிறார். நீ, வா, போ என ஒருமையில் பேசியதெல்லாம் அதிகாரத்தின் உச்ச கட்டம் என்றே கூறலாம். தலைமை ஆசிரியரோ அல்லது ஆசிரியரோ பதில் பேச வாய்ப்பே தராமல் கத்தியிருக்கிறார் என்றே கூறலாம்.

கடந்த ஆண்டு 50சதவீதத்திற்கும் குறைவாகவே பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் இருக்க இந்த ஆண்டு உயர்த்திதான் வாங்கியிருக்கிறது அப்பள்ளி. எந்த ஆய்வும் இல்லாமல் அதைப் பேசக்கூட வாய்ப்பு தராமல் நீயெல்லாம் ஆசிரியர் பணிக்கு லாயக்கில்லை என்று பேசுவது தான் ஒரு மாவட்ட ஆட்சியாளருக்கான அழகா என்று தெரியவில்லை.
இது போன்று ஆசிரியர்கள் மீதான தாக்குதல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இது எதைக் காட்டுகிறது?
சரியில்லாத ஆசிரியர்கள் என்றால் மே மாத விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்க வருவார்களா?
இன்றைய கல்விச் சூழலில் மாணவர்கள் பல காரணங்களால் பள்ளிக்கு வர மறுக்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் போதைப் பொருட்கள் மது பயன்பாடு மாணவர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. பெற்றோர்கள் கூட கண்டுகொள்ளாத சூழலில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வருவதில் எத்தனை சிரமம் இருக்கிறது என்பது களத்தில் நிற்கும் எங்களைப் போன்றவர்களுக்குத் தெரியும்.
கல்வி முறையில் இருக்கும் பல ஓட்டைகள், சமூகத்தின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், அதீத இணையப் பயன்பாடு, எல்லாவற்றிலிருந்தும் மாணவர்களைப் பாதுகாக்கும் இடமாகவே இன்று பள்ளிகள் செயல்படுகின்றன. அதைத் தாண்டி மாணவர்கள் பெறும் மன அழுத்தத்தை சமாளித்து அவர்களைப் படிக்க வைக்க ஆசிரியர்கள் போராடி வருவது அத்தனை பேருக்கும் தெரியும்.
எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அதீத அதிகாரம் என்ற ஒரு தகுதியை வைத்துக் கொண்டு தங்கள் அதிகாரத்தை, படிநிலையில் மட்டுமே கீழேயுள்ள ஆனால் சமூகத்தின் முக்கியமான பொறுப்பில் பணியாற்றும் ஆசிரியர்களை மட்டம் தட்டி பேசுவது அதிகாரத்தை அள்ளி வீசுவது இதெல்லாம் கண்டிக்கத்தக்கது.
கல்வித் துறையில் பல அடுக்குகளில் மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளைக் கண்காணிக்க மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர், இயக்குநர் உள்ளிட்ட பல அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு கள நிலவரம் தெரியும். தொடர்ந்து இணையவழிக்கூட்டங்கள் போட்டு தலைமை ஆசிரியர்களிடம் தேர்ச்சி குறித்து உரையாடுகினறனர். தமிழ்நாடு இன்று இந்த இடத்தில் கல்வியில் முன்னிலை வகிக்கிறது என மார் தட்டிக் கொள்கிறார்கள் என்றால் அதில் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பணி இருக்கிறது. மாவட்ட ஆட்சியரின் கீழ் இயங்கும் மற்ற துறைகளில் ஆயிரம் பிரச்சனைகளை அன்றாடம் பார்க்கிறோம். லஞ்சம் ஊழல் கொலை கொள்ளை போதை மருந்துகள் கடத்தல் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றை விட்டு விட்டு நல்ல சமூகத்துக்கான மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களைக் குறி வைப்பது முரண்பாடான நடவடிக்கை.
உங்கள் ஆளுகைக்குக் கீழே இயங்கும் எத்தனை அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் இருக்கின்றனர்? வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கும் பள்ளிகள் எத்தனை? நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் நியமனம் செய்துள்ளீர்களா ? தொடக்கப் பள்ளிகள் முதல் எல்லாப் பள்ளிகளுக்கும் விளையாட்டு ஆசிரியர்கள் இருக்கிறார்களா? விளையாட்டு மைதானம் இருக்கிறதா? இப்படி களத்தில் இருக்கும் உண்மையான பிரச்சனைகளில் உங்கள் அதிகாரத்தின் நிலை என்ன?
இவை அனைத்தும் சேர்ந்தது தான் பள்ளிக்கல்வி. அதன் தொடர்ச்சி தான் மாணவர்களது தேர்ச்சி. இவற்றைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. ஆசிரியரே இல்லாத வகுப்பறைகளை சமாளித்துதான் ஆசிரியர்கள் தேர்ச்சி விழுக்காட்டைத் தருகிறார்கள். ஆசிரியர்கள் கற்பித்தல் பணி செய்ய விடாமல் தரவுகளை சேகரித்து நிரப்பும் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் தான் இந்த தேர்ச்சி விழுக்காடு .
ஒரு செடி பூப்பது போல மாணவர்கள் நடத்தை மாற்றங்களும் கல்வி முன்னேற்றமும் அவற்றுக்கே உரிய காலம் எடுக்கும். அந்தச் செடி வளர வளமான மண்ணும் நல்ல சூரிய ஒளியும் காற்றோட்டமும் அவசியம். மாணவர்களுக்கும் பள்ளி குடும்பம் ஆசிரியர்கள் பெற்றோர்கள் இந்த சமூகம் என அனைத்தும் துணை நிற்க வேண்டும். அதை விடுத்து இந்தக் காரணிகளில் ஒன்று இல்லாமல் போனாலும் குழந்தையின் முழுமையான வளர்ச்சி தடைபடும். எல்லாவற்றிற்கும் ஆசிரியர்களையே குறை சொல்லிப் பயனில்லை.
ஆகவே ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க இயலவில்லை என்றாலும் அவமரியாதை செய்வதைத் தவிர்க்க வேண்டும் இந்த சமூகம்.
சு. உமா மகேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர்
TNHHSSGTA, மகளிர் அணிச் செயலாளர்