’என்னடா இது ’எல்.ஐ.கே.’வுக்கு வந்த சோதனை?
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ப்ளான் பண்ணிய படம். அதாவது பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்த ‘லவ் டுடே’ ஆரம்பிக்கும் முன்பே, அவரிடம் கதை சொல்லி, ஓகே வாங்கி, ‘எல்.ஐ.சி.’ என முதலில் டைட்டில் வைத்தார் டைரக்டர் விக்னேஷ் சிவன். இந்த டைட்டிலுக்கு அரசுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யிடமிருந்தே எதிர்ப்பு கிளம்பியதால் ‘எல்.ஐ.கே.’ என மாற்றப்பட்டது. தயாரிப்பாளராக முதலில் படத்தை ஆரம்பித்தவர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித்குமார். ஷூட்டிங் ஆரம்பித்து முதல் ஷெட்யூல் முடிவதற்குள்ளாகவே லலித்குமாருக்கு மூச்சு முட்டியது. காரணம் விக்னேஷ் சிவனின் சொதப்பல் தான். இதனால் கடுப்பான லலித், “இனிமே நம்மால முடியாது” எனச் சொல்லி கழண்டு கொண்டார்.
அதன் பின் வேறு வழியே இல்லாமல் சிவனின் மனைவி நயன் தாராவின் முதலீடு ‘எல்.ஐ.கே.’வுக்குள் வந்தது. எதிர்கால லவ்வைச் சொல்லும் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்பதால் பல கோடிகளை இறக்கிப் பார்த்தும் படம் முடிவதற்குள் முழி பிதுங்கிவிட்டது நயனுக்கு. இருந்தாலும் தனது பாசக்கார துணைவனுக்கு உதவும் மனதிடத்துடன் தொடர்ந்து பணத்தை இறக்கினார்.
ஒரு வழியாக படம் முடிவதற்குள் ‘டிராகன்’, ‘டியூட்’ என இரண்டு படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்து முடித்து, அந்தப் படங்களும் ரிலீசாகி ஹிட்டடித்தன. இதனால் ‘எல்.ஐ.கே.’வுக்கு முதலில் பேசிய சம்பளத்தைவிட சில கோடிகள் உயர்த்தி நயனுக்கு ஷாக் கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன்.
எல்லா வேலைகளும் முடிந்து கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாதம் தோறும் ஒவ்வ்வொரு வாரமும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, கேன்சலானது. இந்த 2026 ஏப்ரல் 03-ஆம் தேதி ரிலீசாகும் எனச் சொன்னார்கள். திடீரென ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
“ஸ்ஸ்ஸ்….ஸ்ப்பாடா” என நிம்மதிப் பெருமூச்சுவிட்ட நயனும் சிவனும் ‘எல்.ஐ.கே.’வின் புரமோஷனை ஏப்ரல் 05-ஆம் தேதி ஹைதரபாத்தில் தொடங்கினார்கள். ஏப்ரல் 06-ஆம் தேதி இரவு சென்னை ஆவடியில் உள்ள வேல்டெக் காலேஜில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளும் மிக பிரம்மாண்டமாக நடந்தன. ஆனால் சென்னையிலும் புறநகரிலும் அன்றைய தினம் கனமழை கொட்டி, மைதானம் முழுவதும் சேறும் சகதியும் ஆனதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
ஆனாலும் மனம் தளராத சிவனும் நயனும் மறுநாள் அதே இடத்தில் அதே நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தினார்கள். சிறப்பு விந்தினர்களாக டைரக்டர்கள் ராம், மிஷ்கின், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் வந்திருந்தனர்.

பேசிய அனைவருமே இந்தப் படத்திற்காக விக்னேஷ் சிவன் பட்ட கஷ்டங்களையும் படத்தின் குவாலிட்டிக்காக கடுமையாக உழைத்ததையும் நினைவு கூர்ந்து பேசினார்கள்.
தனது கணவரின் கடின உழைப்பு, நான்கு வருடங்களாக அவரின் அசராத முயற்சி இவற்றை பெருமைப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி முடியும் நேரம் விழாவுக்கு வந்து மேடையேறி, விக்கியை ஆரத்தழுவி தனது அன்பையும் ஆறுதலையும் வழங்கினார் நயன். இதனால் மனம் நெகிழ்ந்தார் சிவன்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.