திருச்சியில் ஹெல்மெட் போடாமல் பயணிப்பவரா நீங்கள் ? அப்ப உங்களுக்கு தான் இந்த செய்தி ! ..
ஹெல்மெட் போடாமல் பயணிப்பவரா நீங்கள் ? போலீஸார் விட்டாலும் பொல்லாத காமிரா விடாது உஷார் !
தலைக்கவசம் (Helmet) மற்றும் சீட்பெல்ட் (Seatbelt) அணியாதவர்களை கண்டறிந்து தானாக வழக்கு பதிவு செய்யும் வகையில் திருச்சி மாநகர் முழுவதும் 29 அதிநவீன கேமராக்களின் பயன்பாட்டை, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, ஐ.பி.எஸ்., தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகரில் உள்ள 9 சோதனை சாவடிகளில் (Check post) மாநகருக்குள் உள்வரும் மற்றும் மாநகரை விட்டு வெளியேறும் வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோர் மற்றும் 3 நபர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணிப்பர்கள் மீது தானாக படம் பிடித்து தானியங்கி வாகன எண் அடையாளம் காணும் தொழில்நுட்ப கேமரா மூலம் (ANPR) வழக்கு பதிவு செய்யும் விதமாக சுமார் 21 (Automatic Helmet Violation ANPR) அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், கார்களில் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்களை கண்காணித்து, அவர்களின் வாகனங்களின் எண்களை படம் பிடித்து (ANPR) வழக்கு பதிவு செய்யும் விதமாக CP.1 கருமண்டம், CP.2 பஞ்சப்பூர் ஜங்சன், CP.4 அரியமங்கலம், CP.7 கோட்டை உட்பட 6 இடங்களில் (Automatic Seat Belt Violation ANPR) அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி மாநகரில் மேலபுலிவார் ரோடு மற்றும் ராமகிருஷ்ணா பாலம் ஆகிய 2 இடங்களில் ஒருவழி பாதையில் விதிகளை மீறி செல்வோர்கள் மீது தானாக வழக்கு பதிவு செய்யும் விதமாக (Automatic No Entry Violation Verifocal camera-க்கள்) என பொருத்துப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் புதியதாக பொருத்துப்பட்டுள்ள 29 அதிநவீன உயரக கேமராக்கள் மற்றும் 10 உடலில் அணிந்த கேமராக்கள் (Body Worn Camera) இன்று 11.06.2025-ந்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி., இ.கா.ப., மாநகர நவீன காவல்கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடங்கி வைத்தார்.
மேலும், புதிய கேமராக்கள் அனைத்தும் சிறப்பு மென்பொருள் (Software) மூலம் இணைக்கப்பட்டு திருச்சி மாநகர நவீன காவல்கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிகழ்வுகளை நேரடியாக கண்காணிப்படும் எனவும், மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருச்சி மாநகர போலீசார் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
திருச்சி மாநகர எல்லைக்குள் பயணிக்கும் வாகன ஓட்டிகளே, உஷார். பாவம் புண்ணியம் பார்த்து போலீசார் பெருந்தன்மையோடு விட்டாலும், பொல்லாத காமிராக்கள் பாரபட்சம் பார்க்காது. தயவுதாட்சன்யமும் தெரியாது. அதன் கண்களில் சிக்கினால் அபராதம் நிச்சயம் ! உஷார் !
– அங்குசம் செய்திப்பிரிவு.