தேமுதிக எம்.பி. எல்.கே.சுதீஷை நெகிழ வைத்த திருச்சி விஜய் ஆனந்த் !
”சார் சேலத்தில் 2014 இல் போட்டியிட்ட போது நீங்கள் எம்.பி.யாக வெற்றி பெற்றால், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டை அடிப்பதாக வேண்டுதல். 12 ஆண்டுகள் கழித்து அதை இன்று மகிழ்ச்சியுடன் நிறைவேற்றினேன். MP ஆக அடுத்த 6 வருடம் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.” என்று ஒரு குறுந்தகவலையும், சொன்னதுபோலவே சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றிய புகைப்படத்தையும் தேமுதிகவின் ராஜ்யசபா எம்.பி. எல்.கே.சுதீஷூக்கு அனுப்பி வைத்திருக்கிறார், திருச்சியை சேர்ந்த விஜய் ஆனந்த்.

தேமுதிகவின் இளைஞரணி பொறுப்பில் இருந்துவரும் விஜய் ஆனந்த், ஊடகத்திலும் பணியாற்றி வருகிறார். விஜய் ஆனந்தின் அன்பில் பூரித்துபோன, எல்.கே.சுதீஷ், “திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அன்பு சகோதரர் விஜய் ஆனந்த் அவர்கள், 2014 ஆம் ஆண்டு சேலம் பாராளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டை அடிப்பதாக எடுத்திருந்த நேர்த்திக்கடனை, 12 ஆண்டுகள் கழித்து இன்று மனமகிழ்ச்சியுடன் நிறைவேற்றியுள்ளார்.
அவரின் இந்த அன்பும், நம்பிக்கையும், உறுதியும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்கிறது. இத்தகைய உண்மையான தொண்டர்களின் ஆதரவே தேமுதிக மிகப்பெரிய பலம். அன்பு சகோதரர் விஜய் ஆனந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும். நமது வெற்றி தொடரட்டும்!” என்பதாக எக்ஸ் தளத்தில் நெகிழ்ந்திருக்கிறார், எம்.பி. எல்.கே. சுதீஷ்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.