இனியும் இப்படி ஒரு நிகழ்வு நடக்காமல் இருக்க இன்றே விழிப்புணர்வு – கரூர் பெரும் துயரம் !
கரூரில் நிகழ்ந்தது சொல்லொணாத் துயரம்.
கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 30+ பேர் இறந்திருப்பதும் இன்னும் பலர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதையும் அறிந்து மனம் வேதனை கொள்கிறது.
காணொளி ஒன்றில் நினைவு குன்றி ஸ்ட்ரெட்சரில் கிடத்தப்பட்டுள்ள மனைவிக்கு கணவர் சிபிஆர் செய்கிறார். பதட்டத்துடன் ஆம்புலன்ஸ் ஒன்றில் மனைவி தூக்கி வைக்கப்படுகிறார். அவரிடம் இந்தப் பெண் யாரென்று ஒருவர் கேட்க “என் வொய்ஃப்ங்க… என்று பதறியபடி போகாதீங்கன்னு சொன்னேன். வேடிக்கை பார்க்க போறேன்னு போனா” என்று அழுது அரற்றிக் கொண்டே கூறுகிறார்.
நம்மிடையே “கூட்ட நெரிசல்” குறித்த அடிப்படை அறிவு சுத்தமாக இல்லை என்பதே இந்த நிகழ்வு நமக்குக் கூறும் படிப்பினை.

அரசியல் கட்சிக் கூட்டங்கள் தொடங்கி பெரிய திருமண வைபவங்கள், இசைக் கச்சேரிகள், சினிமாக்களின் முதல் நாள் ரசிகர் ஷோக்கள், கிரிக்கெட் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள், விமான சாகச ஷோக்கள் என்று மக்கள் கூட்டமாக கூடுவது என்பது வாடிக்கையாகி விட்டது.
தனக்குப் பிரியமான நடிகரை ஒருமுறை நேரில் பார்க்க ஆசைப்பட்டு சேர்ந்த கூட்டம் தான் இன்றைய கூட்டம்.
இதே போல தனக்குப் பிரியமான கிரிக்கெட் விளையாட்டு வீரரைப் பார்க்க ஆர்சிபி கோப்பையை வென்றதற்கு பெங்களூரில் வைத்த விழாவிற்கு சென்று பலரும் கூட்ட நெரிசலில் சிக்கி மரணித்தனர்.
விமான சாகச நிகழ்வைக் காண சென்னை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பீச்சில் கூடியதில், நீரிழப்பு மற்றும் நெரிசல் தாங்காமல் இறந்தோர் பலர்.
இப்படியாக கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் மரணமடைவது என்பது தொடர்ந்து நாம் கேள்விப்படும் செய்தியாக மாறி இருந்தாலும் கூட நமக்கு நிஜமான படிப்பினை கிடைப்பதில்லை.
காரணம் அந்தக் கூட்டத்தில் நாம் இருந்து அந்த பாதிப்பை நேரடியாக உணரவில்லை என்பதால் நிச்சயம் கூட்ட நெரிசலின் அபாயம் குறித்து நம்மால் கற்பனை செய்திட இயலாது.

மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரு நகரங்களில் திடீரென , பெரிய வசதிகள் ஏற்படுத்தாமல், கூட்ட ஒழுங்கு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாமல்
இவ்வாறு நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பது தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருவதை அறிகிறோம்.
நமது நாட்டைப் பொருத்தவரை நமது பலம் மற்றும் பலகீனம் இரண்டுமே நமது மக்கள் தொகை என்பேன்.
கூடவே மந்தை மனநிலையும் நம்மை ஆட்கொள்ளும் போது, எப்படியாவது கொண்டாட்டம் நடக்கும் இடத்துக்கு நாம் சென்றே ஆக வேண்டும்.. எப்படியாவது நடிகரை கண் காண வேண்டும்… எப்படியாவது சினிமா முதல் ஷோ பார்த்து விட வேண்டும்…என்ற எண்ணமே மேலோங்கி அங்கு கூட்ட நெரிசல் உள்ளிட்ட அவசர நிலைகள் ஏற்பட்டால் என்ன செய்வது?
நம்முடன் நமது குழந்தைகளையும் அழைத்துச் செல்கிறோமே அவர்கள் பாதுகாப்புக்கு என்ன செய்வது? என்பது பற்றியெல்லாம் யோசிக்காத மந்த நிலையை ஏற்படுத்தி விடுகிறது இந்த மந்தை புத்தி.
நம்மைப் பொருத்தவரை எப்போதும் நமது மற்றும் நம்மைச் சார்ந்தோரின் உயிர் பாதுகாப்பு அதிமுக்கியம் எனும் போது முதியோர் குழந்தைகளை இது போன்ற நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லவே கூடாது.
இந்தியாவின் எந்த நகரங்களிலும் நடக்கும் மக்கள் பெருந்திரளாகக் கூடும் நிகழ்வுகள் அனைத்துக்கும் இது பொருந்தும்.
இங்கு கூட்ட நெரிசல் என்பது தவிர்க்க இயலாதது. இன்னும் கூட்டம் கட்டுப்பாட்டை மீறும் போது இது போன்ற துன்ப நிகழ்வுகள் நடக்க அனைத்து வாய்ப்புகளும் எல்லா இடங்களுக்கும் பொதுவாகவே உள்ளது.
சரி இப்படி ஒரு கூட்ட நெரிசலில் நாம் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்? முதலில் நாம் அங்கம் வகிக்கும் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகிறது என்பதை அறிய வேண்டும்.
நீங்கள் நிற்கும் இடத்தைச் சுற்றி நிற்பவர்கள் உங்களைத் தொடாமல் நிற்கிறார்கள் என்றால் ஒரு சதுர மீட்டருக்கு மூன்று பேர் என்ற நிலையில் இருக்கிறீர்கள். அது ஆரோக்கியமான கூட்டம்.
அதுவே சுற்றி நிற்பவர்கள் அவ்வப்போது உங்களை மோதுகிறார்கள் என்றால் ஒரு சதுர மீட்டருக்கு ஐந்து நபர்கள் வரை நிற்கிறீர்கள் என்று அர்த்தம். இது ஆபத்தான கூட்டமாக மாற வாய்ப்பு உள்ளது. எனவே உடனே கூட்ட நெரிசல் குறைவாக இடம் நோக்கி நகர்ந்து விட வேண்டும்.
உங்களால் ஒரு கூட்டத்தில் குனிந்து கால்களைத் தொட முடியவில்லை என்றால் அந்த கூட்டம் – நெருக்கடி நிலையை எட்ட உள்ளது என்று பொருள் இப்படி ஒரு கூட்டத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டால் எப்படி வெளியேறுவது?
உங்களுக்கு மிக அருகில் கூட்டம் செல்லும் திசை அன்றி பக்கவாட்டில் ஏதேனும் மேடான பகுதி / கார் / மரம் உள்ளிட்ட இடங்கள் இருப்பின் அதை நோக்கி மூலைவிட்டமாக (Diagonal direction) நகர்ந்து செல்லவேண்டும்.
இவ்வாறு செல்லும் போது கைகளை பாக்சிங் செய்வது போல நெஞ்சுக்கு முன்னால் பாதுகாப்பு தருவது போல வைத்துக் கொண்டு நகர வேண்டும்.
கூட்ட நெரிசல் ஏற்படும் போது அதுவும் நீரின் ஓட்டம் போல அலை அலையாகச் செயல்படும். எனவே நீரின் ஓட்டத்தோடு செல்லக் கூடாது. நீரை எதிர்த்தும் செல்லக் கூடாது. அதே சமயம், இந்த மக்கள் கூட்டம் எனும் நீர் ஓட்டத்துக்கு மூலை விட்டமாகச் செல்ல வேண்டும். இதன் மூலம் எளிதில் கூட்டத்தை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு கூட்டத்தில் பங்கெடுக்கும் போதே அங்குள்ள பல வெளியேறும் பாதைகள் , இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி, கதவுகள் மற்றும் திடீரென நெருக்கடி ஏற்பட்டால் எதன் மீது ஏறி தப்பிக்க வேண்டும். முதலில் எந்தப் பாதை நோக்கி ஓட வேண்டும் என்றெல்லாம் மனக்கணக்கு முன்னாடியே போட்டுக் கொள்ள வேண்டும்.
பெரிய கூட்டமே மந்தை மனப்பான்மையில் ஒரு குறிப்பிட்ட பாதையில் முண்டி அடித்துக்கொண்டிருக்கும். ஆனால் பல மாற்றுப் பாதைகள் ஆள் இல்லாமல் அல்லது குறைவாக இருக்கும். எனவே நமது முன்கூட்டிய மனக்கணக்குகள் நம்மைக் காக்கக் கூடும்.
எப்பவும் நாம் நகரும் திசையில் நம்மைத் தடுக்கும் சுவர் , தூண்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை விட்டு விலகி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அசையாத அசையமுடியாத இடத்தில் சிக்கிக் கொண்டால்
நமது நெஞ்சுப் பகுதி சுற்றி இருக்கும் கூட்டத்தால் நெரிக்கப்பட்டு மூச்சு விட இயலாமல் இறக்கும் வாய்ப்பு அதிகம். எப்போதும் நமது கால்கள் தரையில் இருக்குமாறு ஊர்ந்து செல்ல வேண்டும். முடிந்த வரை கீழே விழாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். மீறி கீழே விழுந்தால் அடுக்கி வைத்த”டோமினோ”க்கள் ஒன்று மேல் ஒன்று விழுவது போல மக்கள் நம் மேல் விழும் வாய்ப்பு உண்டு
அவ்வாறு கீழே விழுந்து விட்டால் கருவுக்குள் சிசு எப்படி சுருண்டு படுத்துக் கொள்ளுமோ அது போல தலையை உள்நோக்கி வைத்து மடங்கி சுருண்டு படுத்துக் கொள்ள வேண்டும். இது நமது தலை மற்றும் நெஞ்சுப்பகுதியைக் காக்கும்.
கூட்டம் சற்று விலகியவுடன் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும். இது போன்ற கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் பத்து நொடிகளுக்கு மேல் மூச்சு விடாமலோ நாடித் துடிப்பு இல்லாமல் இருந்தால் உடனே சிபிஆர் ( இதயத்துடிப்பு மற்றும் மூச்சை மீட்டல்) முதலுதவியை ஆரம்பிக்க வேண்டும்.
இத்தகைய கூட்ட நெரிசல் மரணங்களில் தலையாய காரணமாக இருப்பது “மூச்சுத் திணறல்” (SUFFOCATION)
எனவே மூச்சு நாடி நின்று நான்கு நிமிடங்களுக்குள் சிபிஆர் ஆரம்பிக்கப்பட வேண்டும். இயன்ற அளவு கூட்ட நெரிசல் ஏற்படும் என்று சந்தேகிக்கப்படும் கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது நல்லது.
குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் கண்டிப்பாக கூட்ட நெரிசல் ஜன நெருக்கடி அதிகம் உள்ள கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
இன்று கரூரில் இன்னுயிரை விட்ட
அனைவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
இனியும் இப்படி ஒரு நிகழ்வு நடக்காமல் இருக்க இன்றே விழிப்புணர்வு பெறுவோம்.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
Comments are closed, but trackbacks and pingbacks are open.