அங்குசம் பார்வையில் ‘வல்லமை’
தயாரிப்பு & இயக்கம் : ‘பேட்லெர்ஸ் சினிமா’ கருப்பையா முருகன். நடிகர்-நடிகைகள் ; பிரேம்ஜி, பேபி திவ்யதர்ஷினி, தீபா சங்கர், ‘வழக்கு எண்’ முத்துராமன், சி.ஆர்.ரஞ்சித், சூப்பர்குட் சுப்பிரமணி, சுப்பிரமணியன் மாதவன், விது, சிவக்குமார். ஒளிப்பதிவு : சூரஜ் நல்லுசாமி, இசை : ஜி.கே.வி., எடிட்டிங் : சி.கணேஷ்குமார், ஆர்ட் டைரக்டர் : எஸ்.கே.அஜய், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
அரியலூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிரேம்ஜி, தனது மனைவி இறந்த பின், தனது பெண் குழந்தையுடன் [ பேபி திவ்யதர்ஷினி ] சென்னைக்கு குடிபெயர்கிறார். செவித்திறன் குறையுள்ள பிரேம்ஜியும் அவரது மகளும் ஒரு ஆட்டோ டிரைவரின் உதவியுடன் மொட்டை மாடியில் சிறிய வீட்டில் வசிக்கின்றனர். வயிற்றுப்பாட்டுக்காக போஸ்டர் ஒட்டும் வேலை செய்கிறார் பிரேம்ஜி. அவரது மகளும் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறார். இந்த நிலையில் பள்ளியிலிருந்து மகளை அழைத்து வரும் போது, யூரின் போகும் போது ரத்தம் வருவதாகச் சொல்கிறாள் மகள்.
மகள் பூப்பெய்துவிட்டாள் என நினைத்து லேடி டாக்டரிடம் [ தீபா சங்கர் ] ஆலோசனை கேட்கிறார் பிரேம்ஜி. டெஸ்ட் பண்ணிப்பார்க்கும் தீபா சங்கருக்கோ பெரும் அதிர்ச்சி. “உங்க மகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியிருக்காள்” என்ற உண்மையை பிரேம்ஜியிடம் தனியாக சொல்கிறார் தீபா சங்கர். வெளியில் அமர்ந்திருக்கும் திவ்யதர்ஷினிக்கும் இது தெரிந்துவிடுகிறது.
அதன் பின் எளியவர்களான தந்தையும் மகளும் சேர்ந்து அந்தக் கொடிய மிருகத்தை வீழ்த்துவதற்காகப் போடும் திட்டம் தான் இந்த ‘வல்லமை’யின் க்ளைமாக்ஸ்.
இந்தியாவில் இப்போது அதிகரித்து வரும் கொடிய நோய் பெண் குழந்தைகள் வன்கொடுமைக்குள்ளாவது தான் என்பதை சில மாநிலங்களின் புள்ளி விபரத்துடன் சொல்லி, சமூகத்திற்கு நல்ல வலிமையான கருத்தை இந்த ‘வல்லமை’ மூலம் பதிவு செய்திருக்கும் இயக்குனர் & தயாரிப்பாளர் கருப்பையா முருகன் கவனிக்கத்தக்க இயக்குனர் பட்டியலில் இடம் பிடிக்கிறார்.
“துன்பம் வரும் போது சிரிக்கணும்னு வள்ளுவர் சொல்லியிருக்கார்”, “அப்படின்னா திருவள்ளுவருக்கு துன்பம் வந்தப்ப சிரிச்சிருப்பாரா?” “நாம இந்த ஊரைவிட்டுப் போயிடலமா?” என தனது மகளிடம் பிரேம்ஜி கேட்கும் போது, “எல்லா ஊர்லயும் மனுஷங்க இருப்பாங்கப்பா” என திவ்யதர்ஷினி சொல்லும் சீனில் கைதட்ட வைக்கிறார் டைரக்டர் கருப்பையா முருகன்.
நைட் பார்ட்டி ஆளாகவும் காமெடி நடிகராகவும் நன்கு தெரியப்பட்ட பிரேம்ஜி, இந்த ‘வல்லமை’யில் அப்பா கேரக்டரில் நல்ல குணச்சித்திர நடிகராகவும் தெரிகிறார். எளிமையான உடை, கேஷுவலான நடை, காது கேட்கும் மிஷினை மாட்டிக் கொள்ளும் லாவகம், மகளுக்கு இப்படி ஆகிவிட்டதே என நினைத்து மனம் கலங்கி, கண்ணீர் சிந்தும் சீன் இவற்றிலெல்லாம் பிரேம்ஜி பிரைட்டாகவே தெரிகிறார். அவரது மகளாக நடித்திருக்கும் பேபி திவ்யதர்ஷினியின் நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது. என்ன ஒண்ணு, தன்னைச் சீரழித்த கொடியவன் சக்கரவர்த்தி [ சி.ஆர்.ரஞ்சித் ]யைக் கொல்ல அப்பாவுக்கு யோசனை சொல்லும் சீனெல்லாம் வயதுக்கு மீறிய முதிர்ச்சி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அது சரி, சென்னையில எம்புட்டோ வேலை டிசைன் டிசைனா இருக்கும் போது, பிரேம்ஜி ஏன் போஸ்டர் ஒட்டும் வேலையை செலக்ட் பண்றாரு? இன்ஸ்பெக்டராக வரும் வழக்கு எண் முத்துராமன் நல்லவரா? கெட்டவரா? என்பதை கான்ஸ்டபிள் சூப்பர்குட் சுப்பிரமணி மூலம் சொல்லிவிட்டார் டைரக்டர்.
இரண்டு மணி நேரத்திற்கு குறைவாகவே படம் ஓடினாலும் மெதுவாக நகரும் திரைக்கதைதான் பலவீனம். இருந்தாலும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி க்ளைமாக்சை வைத்த வகையில் பாராட்டலாம்.
— மதுரை மாறன்.