மாணவி நஸ்ரினின் திறமையை உலகறியச் செய்த தலைமையாசிரியா்!
விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 அறிவிப்பு வெளியானதும், ராணிப்பேட்டை அரசுப்பள்ளி தலைமையாசிரியை எலிசபெத், தனது மாணவி நஸ்ரின் அம்மாவிடம் ஆடிஷனுக்கு அழைத்துப் போக சொல்கிறார்.தன்னிடம் பணம் இல்லை என நஸ்ரின் அம்மா சொல்ல, இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்து, நஸ்ரினை சென்னைக்கு ஆடிஷனுக்கு அழைத்துப் போக சொல்கிறார்.
அந்த மாணவி நஸ்ரின் இன்று சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 போட்டியில் இரண்டாம் இடமும், பத்து லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் பெற்றார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள், நஸ்ரின் தன் இசைப்பள்ளியில் படிக்கலாம் என்றார். கமல் அவர்கள் நஸ்ரினுக்கு தன்னாலான உதவிகளை செய்வதாக சொன்னார். நடிகர் ராகவா லாரன்ஸ், நஸ்ரின் அம்மாவிற்கு ஒரு டெய்லரிங் கடை வைத்துக் கொடுத்துள்ளார். இவ்வளவுக்கும் காரணமான அந்த தலைமை ஆசிரியரின் கைகளை நெகிழ்வோடு பற்றினேன்.

உங்களைப் போன்ற ஒரு தலைமையாசிரியர் தான் சுமதிஸ்ரீ என்கிற பேச்சாளர் உருவாகக் காரணம் என்றேன். என் எட்டு வயதில் எனக்குள் இருந்த பேச்சுத் திறமையைக் கண்டு பிடித்து, என்னை அசெம்பிளியில் பேச வைத்து,பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்பி என்னை ஊக்குவித்த என் தலைமையாசிரியை எத்திலின் சிஸ்டரை ஒவ்வொரு நாளும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். இன்று நான் சொற்பொழிவிற்காக உலக நாடுகளை வலம் வரவும், என் வறுமை நிலை மாறவும் எத்திலின் சிஸ்டர் என் பேச்சுத்திறமையை கண்டறிந்து ஊக்குவித்தது தான் காரணம்.
பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்பாதீங்க, மார்க் குறையுது என என் பெற்றோர் சண்டை போட்ட போது,எல்லாராலயும் மேடையில் தைரியமா பேச முடியுமா…. அவ கிட்ட பேச்சுத் திறமை இருக்கு, அவளை பேச்சுப்போட்டிக்கு அனுப்ப தான் செய்வேன் என உறுதியாகச் சொன்னதும், எக்ஸாம் டைம் ல சுமதி பேச்சுப்போட்டிக்கு போகுது, போக வேணாம் னு சொல்லுங்க என என் வகுப்பு ஆசிரியர்கள் புகார் சொன்ன போது, சுமதிக்கு மட்டும் தனியா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணுங்க, அவ காலையில் பேச்சுப் போட்டிக்கு போயிட்டு வந்து எக்ஸாம் எழுதட்டும் என சொன்னதும் நான் பேச்சுத்துறையில் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கையில் தான். பேச்சுத்திறமை மட்டும் இல்லை என்றால் என் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் எனத் தெரியாது. என்னுடைய இந்த வாழ்வு என் பள்ளித் தலைமையாசிரியை எத்திலின் சிஸ்டரால் வந்தது.
தினமும் இரவில் மனைவியை அடிக்கும் அப்பா, அதைப் பார்த்து பயந்து நடுங்கும் எங்களையும் பெல்ட்- டால் அடிப்பார். அழுது கொண்டிருக்கும் அம்மா காலையில் சமைக்க மாட்டார். முதல் நாள் சீவிய சடை மேல் சீப்பு வைத்து ஒதுக்கிக் கொண்டு, அழுது வீங்கிய முகத்துடன், தாளாத பசியுடன் வகுப்புக்கு வந்தால்… முகத்தைப் பார்த்தே தன் டிபன் பாக்ஸை சாப்பிட கொடுத்த ஆசிரியர்கள் இருந்தார்கள். இப்ப சிரிக்கிறியா….இல்லையா என செல்லமாக மிரட்டி சிரிக்க வைத்து, உன்னை சிரிக்க வைக்கிறதுக்குள்ள….என தலை கோதினார்கள். கல்லூரி நாட்களில், முதல்ல போய் பரீட்சைக்கு பணம் கட்டு என பணம் கொடுத்தார்கள். வீட்டில் நிம்மதியே இல்லாத சூழலில் ஆசிரியர்கள் தான் ஆறுதலும் நம்பிக்கையும் தந்தார்கள்.நான் பென்னி னு ஒரு பையனை லவ் பண்றேன் சார், உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கணும் என நான் காதலிப்பதையும் முதலில் என் பேராசிரியரிடம் தான் சொன்னேன். எலிசபெத் அவர்களின் கைகளைப் பற்றிய போது அத்தனை ஆசிரியர்களும் நினைவிற்கு வந்தார்கள்.

எலிசபெத் அவர்கள், உங்க வீடியோஸ் நிறைய பார்த்திருக்கேன், நல்ல தமிழ் உங்களுக்கு, நல்லாருங்க என என் நெற்றியில் சிலுவை போட்டார். ஒவ்வொரு முறையும் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கிக்கொண்டு வந்ததும் God bless you my child என்று சொல்லி என் நெற்றியில் சிலுவை போட்டு விடும் எத்திலின் சிஸ்டரின் ஸ்பரிசத்தை அந்த நொடியில் உணர்ந்தேன். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா…என அவர் பாதங்களை வணங்கிய போது. எத்திலின் சிஸ்டரின் பாதங்களையும் சேர்த்தே தான் வணங்கினேன்.
நஸ்ரினின் திறமையை உலகறியச் செய்த தலைமையாசிரியை எலிசபெத் அவர்களைப் பார்க்கும் போது, சுமதிஸ்ரீ யின் பேச்சுத் திறமையை உலகறியச் செய்த தலைமையாசிரியை எத்திலின் சிஸ்டரையும் நினைத்து நெகிழ்ந்து கண் கலங்கினேன்.
தன் மாணவர்களின் திறமையை கண்டறிந்து ஊக்குவிக்கிற, தன் மாணவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரும்பாடு படுகிற, குடும்பத்தில் கிடைக்காத நிம்மதியான சூழலை தன் ஆறுதல் வார்த்தைகளில் தருகிற இது போன்ற எத்தனையோ ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
— சுமதி ஸ்ரீ – பேச்சாளர்.