டாஸ்மாக் பாரில் துள்ளத்துடிக்க நடந்த கொலை ! ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு !
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
சாத்தூர் செல்லியாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காந்திராஜ். கடந்த 10 அக்டோபர் 2023 அன்று மதியம் அரசு மதுபானக் கடை முன்பு நின்றபோது, முன்பகை காரணமாக இரண்டு நபர்கள் காந்திராஜை தலையில் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

இந்த வழக்கில், சிசிடிவி காட்சிகளை வைத்து முக்கிய குற்றவாளிகளாக கிருஷ்ண பிரபு, மகாலிங்க சுந்தரமூர்த்தி, இவர்களுக்கு உடந்தையாக இருந்த காளிமுத்து, சுப்பையாபாண்டி, தனசேகரன், மாரிசெல்வம், மணிகண்டன் ஆகிய 7 பேர் மீது சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் (செப்-12) இறுதி விசாரணையில், காந்திராஜை நேரடியாக தாக்கியது கிருஷ்ண பிரபு மற்றும் மகாலிங்க சுந்தரமூர்த்தி என்பதும், அவர்களின் தாக்குதலால் மரணம் ஏற்பட்டது என்பதும் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி சுதாகர், இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மற்ற குற்றவாளிகள் காளிமுத்து, சுப்பையாபாண்டி, தனசேகரன், மாரிசெல்வம், மணிகண்டன் ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
கொலை நடந்த சில ஆண்டுகளிலேயே காவல்துறை துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி, தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன் விளைவாக, குற்றவாளிகளுக்கு குறுகிய காலத்திலேயே தண்டனை வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.