இயர்போன் பயன்படுத்தினால் இவ்வளவு ஆபத்தா ?
தற்போது உள்ள நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயர்லெஸ் இயர்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். நம் பயணத்தின் போதும், ஓய்வு நேரங்களிலும் அல்லது சத்தம் வெளியே வரக்கூடாது என்பதற்காகவும் இயர்போன்களை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இயர்போன் பயன்படுத்துவதால் காது கேளாமை வரை பாதிப்பு ஏற்படும் என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில் தான் ஒப்பனை கலைஞர் ஆருசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்தியதால் கிட்டத்தட்ட 45% காது கேட்கும் திறனை இழந்ததாக கூறியிருக்கிறார். இவர் வெளியிட்ட பதிவின்படி, ஒரு முறை டெல்லிக்கு பயணிக்கும் போது இவர் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் தனது இயர்போன்களை பயன்படுத்தினேன். பின்னர் மறுநாள் காலையில் தனது இடது காது, கேட்கும் திறனை இழந்ததாக குறிப்பிட்டார், ஆரம்பத்தில் அதை பெரிதாக கண்டுகொள்ளாதவர் இரண்டு நாள்களுக்குப் பிறகு மருத்துவரை அணுகி பரிசோதித்திருக்கிறார்.
இயர்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தியதால் அவரது இடது காதில் 45% காது கேளாமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். திடீரென ஏற்பட்ட காதுகேளாமையை சரி செய்ய மருத்துவரிடம் அணுகியபோது அவருக்கு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. காதில் ஸ்டெராய்டுகள் செலுத்தியதாகவும், ஊசி போன்ற சிகிச்சைகள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். முன்னெச்சரிக்கையாக ஸ்பீக்கர்களையோ அதிகமான சத்தங்கள் இருக்கும் இடங்களையோ தவிர்க்க மருத்துவர் பரிந்துரைத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இடையில் ஏற்பட்ட காதுகேளாமையை, சிகிச்சை பெற்று சரி செய்யலாம் என்று நம்பிக்கையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சைக்கு பிறகு அவருக்கு மீண்டும் செவித்திறன் கிடைத்துள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் காது கேளாமையில் இருந்து மீள முடியாது என்று குறிப்பிட்டார் அந்த பெண். இதனை ஒரு விழிப்புணர்வு பதிவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் எச்சரித்து பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு பலரின் கவனத்தை பெற்று வருகிறது.
— மு. குபேரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.