ஆன்மீகத்தில் மனித நேயத்தை வலியுறுத்திய அடிகளார் காஞ்சிமடத்தின் எதிர்ப்பைப் பெற்றார் திருக்குறள் முருகானந்தம் சிறப்புரை
அங்குசம் சமூக நல அறக்கட்டளை சார்பில்பில் யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடையின் 19ஆம் நிகழ்வு கடந்த 12.04.2025 ஆம் நாள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா நிகழ்வாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு வரலாற்று ஆய்வறிஞர் திருக்குறள் முருகானந்தம் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் மற்றும் பேராசிரியர் கி.சதீஷ் குமாரன் ஒருங்கிணைத்தனர். நிகழ்வின் புரலவர் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து, சிறப்புரையாளர் திருக்குறள் முருகானந்தத்திற்குப் பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் நூல்கள் வழங்கி சிறப்பித்தார்.
“மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத் தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசம்பிள்ளை சொர்ணத்தாச்சி இணையருக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலையில் 1944 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 5 இல் ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16 ஆம் தேதி முதல் குன்றக்குடி ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார்” என்பதாக, நூற்றாண்டு கண்டுள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் குறித்து அறிமுக உரையாற்றினார், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்.

சிறப்புரையாற்றிய திருக்குறள் முருகானந்தம், “அடிகளார் ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் மிகவும் சோதனையான காலம். காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11 ஆம் நாள் சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றைநடத்தினார். அதன் விளைவாகத் தோன்றியதே “அருள் நெறித் திருக்கூட்டம்” தமிழகம் மட்டுமல்லாது, இலங்கையிலும் கிளைத்தன. அதன் செயலாக்கப் பிரிவாக “அருள்நெறித் திருப்பணி மன்றம்” எனும் அமைப்பும் 1955 ஜூன் 10 ஆம்நாள் கிளைத்தது. அப்போதைய தமிழக அரசின் துணையோடு “தெய்வீகப் பேரவை” எனும் அமைப்பு, 1966 இல் ஆரம்பிக்கப்பட்டது.
“தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பது, சமஸ்கிருத வேத மந்திரங்களுக்கு பதில் தமிழில் வழிபாடு செய்வது, கோயில்களில் அர்ச்சகர்கள் பின்பற்றியஜாதியகட்டுப்பாடுகளை நீக்கி அனைத்து சமூகத்தவரையும் அர்ச்சகராக்கமுயன்றது உள்ளிட்ட செயல்களுக்காக குன்றக்குடி அடிகளார் இன்றும் நினைவு கூரப்படுகிறார்.”
தமிழில் அர்ச்சனை செய்வதை தொடங்கி வைத்தவர் குன்றக்குடி அடிகளார். 1961ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தவச்சலம் முன்னிலையில் திருமறை தமிழ் அர்ச்சனையை தொடங்கிவைத்தார்.
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அடிகளார் மீதான வழக்கை அண்ணா அவர்கள் முதலமைச்சரான நிலையில் விலக்கிக்கொண்டார். திருநீறு அணிந்தபடியே பெரியாரின் பகுத்தறிவு கூட்டங்களிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத்தினர் நடத்திய நிகழ்வுகளிலும்கலந்துகொண்டகுன்றக்குடி அடிகளார் 1969ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கலைஞர் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு சட்டமன்றத் தின் மேலவை உறுப்பினர் ஆனார். அனைத்துக் ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வழிவகை செய்யும் மசோதாவை கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்தபோது காஞ்சி காமகோடி பீடம் தரப்பில் இருந்து அந்த மசோதாவை எதிர்க்க கோரிக்கை வந்த போதிலும் அதற்கு இசைவு தெரிவிக்காமல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். அடிகளாரை எல்லாரும் காவி உடையில் கருப்பு சட்டை அணிந்தவர் என்று போற்றி புகழ்ந்தனர்.
1982ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் நடந்த மதக் கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதி திரும்பும்நடவடிக்கைகளில்அடிகளார் ஈடுபட்டார். தான் ஒரு சைவ மடத்தின் தலைவர் என்பதை மறந்து, மண்டைக்காட்டில் கடலில் பிடித்த மீன்களைக்கையில்வைத்துக்கொண்டு ஏலம் விட்டு, கலவரத்தால் நொடிந்து போயிருந்த மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அடிகளார் குன்றக்குடி ஊராட்சி மன்றத்தின் தலைவர் பொறுப்பிலும் இருந்தார். அவர் பொறுப்பில் இருந்த காலங்களில் குன்றக்குடி ஊராட்சியில் எந்தப் பகுதியிலும் கள்ளுக்கடை, சாராயக்கடைகள் இல்லை. அந்த ஊரில் தமிழ்நாடு அரசால் ஏலம் விடப்படவில்லை. 1990இல் இந்தியாவின் முதல் முன்மாதிரி கிராமம் என்ற பெயரை அப்போதைய ஒன்றிய அரசு அறிவித்து, அதன் தலைவர் பொறுப்பிலிருந்த அடிகளாருக்கு விருது வழங்கப்பட்டது. அடிகளாரின் நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டத்தில் கொண்டாட உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி சட்டமன்றத்தில் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆன்மீகத்தில்மனிதநேயம்போற்றப்பட வேண்டும் என்ற உயரியகொள்கையை எடுத்துரைத்து மக்களிடம் ஆன்மீகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அவருடைய உரைகளை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று அங்குசம் சமூக நல அறக்கட்டளை நடத்தும் அடிகளார் நூற்றாண்டு விழா மூலம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று உரையை நிறைவு செய்தார்.
சிறப்புரையாற்றிய திருக்குறள் முருகானந்தத்திற்கு அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. அடிகளார் குறித்து பேராசிரியர் சதீஷ் உள்ளிட்ட பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில்கள் வழங்கப்பட்டு உரையாடல் சிறப்பாக அமைந்தது. நிகழ்வின் இறுதியில் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து நன்றி கூறினார்.
அடிகளார் வெளியிட்ட இதழ்கள்
மணிமொழி, தமிழகம், அருளோசை, மக்கள் சிந்தனை, அறிக அறிவியல்.
விருதுகள்
1) 1986ல் தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது.
2) 1989ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் (D.Litt).
3) 1991ல் இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, தேசிய விருது.
எழுதிய நூல்கள்
சமய இலக்கியங்கள், அப்பர் விருந்து, அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர், திருவாசகத்தேன், தமிழமுது, சமய இலக்கியங்கள், நாயன்மார் அடிச்சுவட்டில் ஆலய சமுதாய மையங்கள் (தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது), நமது நிலையில் சமயம் சமுதாயம், திருவருட்சிந்தனை, தினசரி தியான நூல், குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16 தொகுதிகள், இலக்கியங்கள், திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர் காட்டும் அரசு குறட்செல்வம், வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை, திருக்குறள் பேசுகிறது, குறள்நூறு, சிலம்பு நெறி, கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம், பாரதி யுக சந்தி, பாரதிதாசனின் உலகம், கவியரங்கில் அடிகளார் (கவிதைகள்), மண்ணும் மனிதர்களும் (தன்வரலாறு
— ஆதவன்.