1400 ஆண்டுகள் பழைய பல்லவர் கால நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு !

0

தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன்,  சி.பழனிச்சாமி,  சிற்றிங்கூர்ராஜா, தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோர்கள் மேற்கொண்ட களஆய்வின் போது 2 பல்லவர்கள் கால நடுகல் கல்வெட்டுகள் கண்டறிப்பட்டன.

Simmavarman
Simmavarman

ஆலம்பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் ஆய்வு மேற் கொண்டதில் அக்கோயில் வழிபாட்டில் இருந்த கற்களுக்கு அருகே புதைந்த நிலையில் ஒரு பலகைக்கல் தென்பட்டது. அது நடுகல்லாக இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் தோண்டி எடுக்கப்பட்டது. அதனருகே புதைந்த நிலையில் இருந்த மற்றொரு கல்லையும் தோண்டி எடுக்கப்பட்ட போது அதுவும் நடுகல்லாக இருந்தது. இரண்டு நடு கற்களையும் வெளியே எடுத்து ஆய்வு செய்ததில் இரண்டு நடுகற்களிலும் வட்டெழுத்துக்கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நடுகல்கல்வெட்டை படித்து விளக்கமளித்த தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன்  கூறியதாவது, ஒரு நடுகல் வீரனது உருவம் கையில் இடதுகையில் கேடயமும் வலதுகையில் வாளும் அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கச்சையும் அணிந்து சண்டைக்கு ஆயத்தமாகும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இடபுறத்தில் வட்டெழுத்தில் உள்ள கல்வெட்டு, பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் நான்காவது ஆட்சியாண்டில் இது வெட்டப்பட்டதென்றும், இதில் காட்டிசாமி என்பவர் கீழ்வாளப்பாடி மாதவிண்ணனோடு ஆநிரைகளை மீட்டு பூசலில் ஈடுபட்டு புஞ்சி என்ற ஊரை ஆளும் ராமசாத்தன் என்பவர் இறந்து போனதை குறிப்பிடுகிறது என்றும் மற்றொரு நடுகல்லில் விரன் உருவத்தில் வலது கையில் குறுவாளும் இடதுகையில் வில்லும் கொண்டு போருக்கு ஆயத்தமாகும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

Marhendra varman
Marhendra varman

இந்த நடுகல்லின் இடதுபுறம் உள்ள வட்டெழுத்தில் பல்லவ மன்னன்சிங்க விஷ்ணுவின் பதினொராவது ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டதாகும். இந்த கல்வெட்டில் வேணாட்டு புஞ்சி மல்லநக்கன் என்பவர் புஞ்சியில் நடந்த பூசலில் ஆநிரைகளை மீட்டு அதன்பின் இறந்து போனதைக்குறிப்பிடுகிறது என்றும் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த நடுகற்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததெனவும் குறிப்பிட்டுள்ளார்.

தென் பெண்ணையாற்றின் கரையே அமைந்துள்ள இந்த வேடியப்பன் கோயிலில் மண்ணில்புதைந்திருந்த நடுகற்களை மீட்டு, ஆய்வு நடுவத்தினரும் ஊர் மக்களும்  இணைந்து அதே இடத்தில் அடிபீடம் அமைந்து நிலையாக நிற்க வைக்கப்பட்டது.

தென் பெண்ணையாற்றின் கரையில் ஏற்கனவே திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல நடுகல் கல்வெட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இது போல மண்ணில் புதைந்த நிலையில் இன்னும் நடுகற்கள் கிடைப்பதினால் தென்பெண்ணையாற்றின் இருகரைகளிலும் உள்ள ஊர்களில் ஆய்வுகள் மேற்கொண்டால் இன்னும் பல அரிய வரலாற்றுத்தடங்கள் வெளி வர வாய்ப்புள்ளது என்றும் இந்த நான்கு மாவட்டங்களையும் உள்ளடக்கிய இந்த பகுதியை நடுகல் மண்டலமாக அறிவித்து நடுகற்களையும் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழ்நாடு தொல்லியல் துறை முன் வர வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மு.வடிவேல்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.