2025 – ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் … அழைப்பு விடுத்த திருச்சி கலெக்டர் !
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், இ.ஆ.ப.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித் துறையால் 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்” விருதும், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இருபத்தைந்தாயிரம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தை தமிழ்வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக்குறிப்பு, நூல்கள்/ கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடர்பான விவரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் இது தொடர்பான விவரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் 2 நிழற்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து திருச்சிராப்பள்ளி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு 26.08.2025 ஆம் நாளுக்குள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு “தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி (தொலைபேசி 0431-2401031)” என்ற முகவரிக்கு நேரில் அல்லது தொலைபேசி வாயிலாக தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.” என்பதாக அறிவித்துள்ளார்.
— அங்குசம் செய்திப்பிரிவு