2026 தேர்தல் யாருக்கு சீட்டு ? சிவகாசி தொகுதி கள நிலவரம் !
2026 தேர்தல் யாருக்கு சீட்டு ? சிவகாசி தொகுதி கள நிலவரம் !
விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி தொகுதி 2,60,000 வாக்காளர்களை கொண்டது. இந்த தொகுதியில் அதிமுக 4 முறையும், காங்கிரஸ் மூன்று முறையும், திமுக 2 முறையும், தாமாக 2 முறையும் மதிமுக, சுதந்திராகட்சி, ஜனதா கட்சி தலா ஒரு முறையும் இதுவரை வென்றிருக்கின்றன. பெரும்பாலும் சிவகாசி தொகுதி கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்திருக்கிறது.

தற்போதைய எம்.எல்.ஏ.வாக காங்கிரசு கட்சியை சேர்ந்த அசோகன் இருக்கிறார். மீண்டும் அவரே போட்டியிட விரும்புகிறார். அதிமுக தரப்பில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் இந்த தொகுதியை இலக்கு வைத்திருக்கிறார். திமுக தரப்பில், தற்போதைய சிவகாசி மேயர் சங்கீதா குறி வைக்கிறார்.

சிவகாசி தொகுதியை பொறுத்தமட்டில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் பிரதான தொழில்களாக இருந்து வருகின்றன. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் சட்டமன்ற தொகுதியாகவும் இருக்கிறது. பட்டாசு தொழில் எதிர் கொண்டு வரும் சிக்கல்கள்தான் இத்தொகுதியின் முக்கிய பிரச்சினையாக நீடித்து வருகிறது.

மாசுக்கட்டுப்பாட்டு விதி 12-(பி) நீக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளால் பாதிக்கப்படுவர்களின் நலன் காக்க நவீன தீக்காய சிகிச்சை பிரிவை சிவகாசியிலேயே தொடங்க வேண்டுமென்ற கோரிக்கை நிலவுகிறது. தற்போதைய நிலையில், விருதுநகர் மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. தண்ணீர் பிரச்சினையும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
குட்டி ஜப்பான் என்ற பெயரை பெற்றிருக்கும் சிவகாசி தொகுதி, 1930 களிலேயே தீப்பெட்டி தொழில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பாரம்பரியத்தை கொண்டது. பெரும்பாலும் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலை சார்ந்திருக்கும் கூலித் தொழிலாளர்கள்தான். இவர்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்தும் வகையிலான திட்டங்களை வகுக்கும் கட்சிகள்தான் மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்ற சூழலில் தேர்தல் களம் காணப்போகிறது, சிவகாசி தொகுதி.
— அங்குசம் அரசியல் செய்திப்பிரிவு
Comments are closed, but trackbacks and pingbacks are open.