மக்களுடன் மக்களாக … 21 ஆம் நூற்றாண்டின் சாட்சி தோழர் நல்லகண்ணு !
தங்கள் போராட்டத்தின் நியாயங்களை உணர்ந்து, தங்களுக்கு ஆதரவாக நிற்க தொழிலாளர் வர்க்க உணர்வு கொண்ட இயக்கம் இருக்கிறது, தொழிலாளர் வர்க்க பாசத்துடன் அதன் தலைமை தம்மை அரவணைக்கிறது என்ற நம்பிக்கையே, வாழும் ஒவ்வொரு நாளும் போராடித்தான் வாழ வேண்டும் என்ற சூழலில் உள்ள மக்களுக்கு பெரும் ஆறுதல்.
தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்த காலகட்டத்தில், உலக செம்மொழிப் பட்டியலில் தமிழ் மொழி இடம் பெறச் செய்ய வேண்டும், தமிழ் வழியில் கல்வி வேண்டும் உள்ளிட்ட மொழிச் சார்ந்த கோரிக்கைகள் முன்வைத்து தீவிர போராட்டங்களை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தமிழ் அமைப்புகள் முன்னெடுத்தனர்.
அக்கால கட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களை சந்திக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று வந்த ஒவ்வொரு தமிழ் அறிஞரும் பெரும் உற்சாகமும், ஊக்கமும் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பிய காட்சி இன்றும் பசுமையாக கண் முன் நிற்கிறது.
தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தனது அலுவலகத்திற்கு வந்துள்ள செய்தியை அறிந்தவுடன் தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்கள் வெளியே வந்து அவர்களை பெரும் மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று மிகுந்த பொறுப்புணர்வுடன் அவர்கள் கூறியதை கேட்டார் என்பதை, தமிழ் அமைப்புகள் கூடி, அடுத்துக் கட்ட முயற்சிகளை விவாதிக்கும் போது, விவரிக்கத் தவறியதில்லை.
வயதில் மூத்த தமிழ் அறிஞர்கள் முதல் வயதில் மிகவும் இளைய தமிழ் ஆர்வலர் வரை அனைவரும் தத்தம் அனுபவங்களைப் பகிர்கின்ற போது தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களின் பரிவும் பாசமும் கலந்த தொழிலாளர் வர்க்க குணாம்சத்தை விவரிப்பது அன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
கோரிக்கை வென்றதா, எந்தளவு முன்னேற்றம் என்பதைக் கடந்து, மக்கள் நலன் சார்ந்து நேர்மையாக போராடும் நபர்களை, இயக்கங்களை அங்கீகரித்து, கோரிக்கைகளுக்கு ஆதரவாக தொழிலாளர் வர்க்க அரசியலை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சியின் தலைமை நிற்கிறது என்பதே போராட்டக் களத்தில் நிற்பவர்களுக்கு பெரும் பலமாக அமைக்கிறது.

“எளிமை” என்ற வார்த்தை தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களை முழுமையாக நாம் புரிந்து கொள்ள உதவாது. அவர் இயல்பான தொழிலாளர் வர்க்க குணாதிசயங்களுடன் வாழ்ந்தார் என்பதே உண்மை.
மக்களுடன் மக்களாக, மக்களின் ஒருவராக மட்டுமே ஒரு கம்யூனிஸ்ட் வாழ முடியும் என்பதன் 21ம் நூற்றாண்டின் சாட்சிதான் தோழர் ஆர். நல்லக்கண்ணு.
கட்சி வேறுபாடின்றி அனைவரின் அன்பிற்கும் பாத்திரமான ஒர் அர்த்தமுள்ள வாழ்க்கை நூறு ஆண்டுகள் வாழ்ந்து நிறைவுடன் விடைப் பெற்றுள்ளார் தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்கள்.
தொழிலாளர் வர்க்கமாக மக்களை அணிதிரட்ட வேண்டிய கடமை நம் முன் உள்ளது. தொழிலாளர் வர்க்கமாக மக்களை அணிதிரட்ட, ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தொழிலாளர் வர்க்க குணாம்சங்களுடன் வாழ்வது மட்டுமே மக்களுக்கு நம்பிக்கையைத் தந்து, தொழிலாளர் வர்க்க உணர்வுடன் போராடும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள உதவும்.
தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களின் வாழ்க்கைமுறை அடுத்தடுத்த தலைமுறை கம்யூனிஸ்டுகளுக்கு மிகச் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.
பாவேந்தர் பாரதிதாசனார் மறைந்த உடன் கவிஞர் தமிழ்ஒளி எழுதிய கவிதை வரிகளுடன் தோழர் ஆர் நல்லக்கண்ணு அவர்களுக்கு செவ் வணக்கம் செலுத்தி விடை தருவோம்!
“உயிரில் உணர்வில் கலந்த கவிஞன்என்
உயிரில் உயிர்கொண் டுலவுகின்றான்! – வெறுந்
துயரில் நான்மூழ்கிக் கிடக்கவில்லை, அவன்
தொண்டு சிறந்திடத் தொண்டுசெய்வேன்!”
தோழர் ஆர் நல்லக்கண்ணு அவர்களுக்கு செவ் வணக்கம்.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை








Comments are closed, but trackbacks and pingbacks are open.