சர்வதேச எல்லைகளை கடந்த தமிழக கணித மேதையின் வடிவியல் புதுமை !
தமிழகத்தின் பெருமைமிகு கணித மேதை இராமானுஜத்தின் பங்களிப்பை தொடர்ந்து மதுரையை சேர்ந்த தமிழரும், இந்தியாவின் புகழ்பெற்ற கணிதவியலாளரும், ஆய்வாளரும், ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரியும் CEOA கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவருமான டாக்டர் எம். ராஜா கிளைமாக்ஸ், IRS கண்டுபிடித்துள்ள 58-க்கும் மேற்பட்ட புதிய வடிவியல் தேற்றங்கள் குறித்த சர்வதேச இணையவழி பயிலரங்கம் (International Virtual Workshop) ஜூன் 24, 2026 புதன்கிழமை அன்று மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.
இந்தியா மற்றும் லிபியா நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லிபியாவின் வாடி அல்ஷட்டி பல்கலைக்கழகம் , கார்யான் பல்கலைக்கழகம் , நாலுட் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் சர்வதேச ஒத்துழைப்பு அலுவலகங்களும், இந்தியாவின் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் காரியாபட்டி CEOA கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.
நிகழ்ச்சி லிபியா நேரப்படி காலை 11.00 மணிக்குத் தொடங்கியது. காமராஜ் கல்லூரி முதல்வர் டாக்டர் பானுமதி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, வாடி அல்ஷட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் குஸ்லான் மிஸ்கீன் வரவேற்புரை வழங்கினார்.
இந்த சர்வதேச பயிலரங்கத்தின் அறிமுக உரையை சர்வதேச ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ஆர். ரவீந்திரநாத் நேரு வழங்கினார். வாழ்த்துரையை லிபியாவின் நலூட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நஜி எல்ஹாடி அபோரஸ் வழங்கினார். லிபிய நாட்டு கார்யான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு அலுவலக இயக்குநரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் அப்துல்அஜீஸ் அபோடினா அவர்கள் சிறப்பு விருந்தினரை சர்வதேச அரங்கிற்கு அறிமுகப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வடிவியலின் புதிய பரிணாமம் என்ற கருப்பொருளின் கீழ் “மையக்கோடுகளின் நீட்சிகள் மூலம் பாரம்பரிய ஒன்பது-புள்ளி வட்டத்தை விரிவுபடுத்தும் பன்னிரண்டு-புள்ளி வட்டத் தேற்றம்” என்ற தலைப்பில் டாக்டர் எம். ராஜா கிளைமேக்ஸ் அவர்கள் தனது சிறப்புரையை ஆற்றினார். அப்போது தாம் கண்டுபிடித்துள்ள 12 புள்ளிகள் வட்டத் தேற்றம் என்ற புதிய வடிவியல் தேற்றத்தினை உலக கல்வியாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
குறிப்பாக, உலக கணித சமூகத்தின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள அவரது பன்னிரண்டு-புள்ளி வட்டத் தேற்றம் குறித்த விரிவான விளக்கத்தை அவர் வழங்கினார். இது பாரம்பரிய கணிதத்தில் உள்ள ஒன்பது புள்ளிகள் வட்டத் தேற்றத்தை விரிவுபடுத்தும் மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. புதிய வடிவியல் ஆராய்ச்சிகளை ஆய்வு செய்தல், காட்சிவழி கணித ஆராய்ச்சிக்கும் முறையான நிரூபணங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தல் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு இக்கருத்துரை அமைந்திருந்தது.
சிறப்புரைக்குப்பின்னர், கலந்துகொண்டோரின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் விரிவான கலந்துரையாடல் மற்றும் கேள்வி–பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வின் நிறைவாக CEOA கல்வி நிறுவனங்களின் தலைவரின் செயலாளர் சுதா, எம்.பி.ஏ. நன்றியுரை வழங்கினார்.
“எல்லைகளைத் தாண்டும் வடிவியல் – புதுமை, ஆய்வு, ஊக்கம்” என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த சர்வதேச இணையவழி கருத்தரங்கில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கணித ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளுக்கு புதிய பரிமாணத்தை வழங்கும் இந்த நிகழ்வு, இந்திய கணித ஆராய்ச்சியின் சிறப்பை சர்வதேச அரங்கில் மிக உயரிய இடத்தில் நிலைநிறுத்தியுள்ளது என்று ஏற்பாட்டாளர்களும் கணித ஆர்வலர்களும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.