ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு போதை ஊசி மரணங்கள் !
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போனதற்கும், கற்பணைக்கு எட்டாத வகையில் வரைமுறையற்ற பாலியல் வன்கொடுமைகள் அடுத்தடுத்து அரங்கேற்றப்படுவதற்கும், முந்தைய திமுக ஆட்சியில் மலிந்துபோயிருந்த போதைப்பொருள் கலாச்சாரம்தான் காரணம் என பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தார் முதல்வர் ஜோசப் விஜய். போதைக்கு எதிராக பாரபட்சமில்லாமல், எந்த தலையீடும் இல்லாமல் உறுதியாக போலீசின் நடவடிக்கை தொடரும் என்றும் அறிவித்திருந்தார். போதைக்கு எதிரான மாரத்தானில் பங்கேற்று மூன்று கிலோ மீட்டர் தூரம் ஓடியதும்கூட வரலாற்று சாதனை போல பேசப்பட்டது.
இந்த பின்புலத்தில்தான், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போதை மாத்திரையை போல, ஒரு சர்ச்சைக்குரிய பொருளை பொடியாக்குவது போல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடல்நிலை சரியில்லாத குழந்தையோடு, கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றிருந்த சமயத்தில் குழந்தைக்கு கொடுப்பதற்காக பொடியாக்கியது என அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டார் அமைச்சர் சரத்குமார். அந்த வீடியோவில் அல்லது அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தில்கூட குழந்தை இல்லாமல் போனது எப்படி? அப்படியே இருந்தாலும் குழந்தைக்கு திரவ வடிவிலான மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். கண்டிப்பாக மாத்திரையை பரிந்துரைத்திருக்க வாய்ப்பே இல்லை. என்றெல்லாம், அமைச்சரின் பித்தலாட்டத்தை போதுமான அளவுக்கு அம்பலமாகியிருக்கிறது.
ஆனாலும், அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை. இந்த பின்புலத்தில்தான், சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம்பெண் ஒருவர் மரணமடைந்தநிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் மரணம் என ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு போதை ஊசி மரணங்கள் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதுவும் முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்ற திருச்சி மாவட்டத்திலேயே இப்படி ஒரு சம்பவம்.
டாஸ்மாக் சாராயமும், கஞ்சாவும்தான் பிரச்சினை. போதை பவுடர், போதை ஊசி போட்டுக்கொள்வதெல்லாம் பிரச்சினை இல்லை என்பதாக அரசு கொள்கை முடிவு ஏதும் எடுத்துவிட்டதோ என்றே அஞ்சத் தோன்றுகிறது!
– அங்குசம் செய்திப்பிரிவு







Comments are closed, but trackbacks and pingbacks are open.