ஆம்னிகளும் அளந்து விடப்பட்ட கதைகளும் !
தவெக அரசு அமைந்ததும், லஞ்சம் ஒழிந்தே போச்சு என்று ஏகத்துக்கும் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள், ரூட் தனியார் பேருந்து மற்றும் ஆம்னி உரிமையாளர்கள்..
மனதில் நினைக்கும் போதே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆபீஸுக்கே ஓடிவந்து ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் எல்லாவற்றையும் செய்து தந்தனர் என்று சொல்லாதது மட்டும்தான் பாக்கி..
ஆம்னி உரிமையாளர்களும் அவர்கள் பங்கிற்கு, அரசு கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயார் என்று என்று சொல்லி அகில உலகத்தையே அலற வைத்தனர்.
உண்மையிலேயே மாற்றம் என்று மிகவும் சந்தோஷமாக இருந்தது.
நீண்ட காலம் இல்லை, சில வாரங்கள்தான் கழிந்தன.
அரசிடம் அனுமதியே பெறாமல் தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகளில் 20% முதல் 35% வரை கட்டணத்தை அழகாக ஏற்றிக்கொண்டனர். சண்டை பிடித்த பயணிகளிடம் டீசல் விலை உயர்வால் வேறு வழியே இல்லை என்று விளக்கம் அளித்தனர்.
தமிழக வரலாற்றில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டண உயர்வுக்கு அனுமதி பெறாமலேயே கட்டணத்தை ஏற்றி புதிய வரலாறு படைக்கப்பட்டது தவெக ஆட்சியில் தான்..
இதைவிட பெரிய மோசடி தனியார் பேருந்து கட்டண உயர்வு பற்றி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக இப்போது அவர்கள் அறிவித்திருப்பது தான்.
எந்த மீடியாவுமே இவ்வளவு பெரிய விஷயத்தை பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை.
வில்லத்தனத்தில் தனியார் ரூட் பஸ் ஆட்கள் பிரகாஷ் ராஜ் என்றால் ஆம்னி கோஷ்டியோ ரகுவரன் டைப் டாப் லெவல்.
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறைக்கு, ஆம்னி பேருந்து கோஷ்டிகள் பயணிகளுக்கு கொழுக்கட்டை சுண்டலுடன் முன்கூட்டியே படையல் போட்டு விட்டன.
சென்னையிலிருந்து மதுரைக்கு சுமார் 5,000 ரூபாய்.. திருச்சிக்கு 4000.. கன்னியாகுமரிக்கு போக வேண்டும் என்றால் சொத்தை முழுதாக எழுதி வைக்க வேண்டும்.
நேற்று முதலே சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு பயணம் செல்ல வேண்டியவர்கள் பேருந்து கட்டணத்தில் கதறிக் கொண்டிருக்கிறார்கள்..
இது போன்ற காலங்களில் வழக்கமாக இரண்டு சடங்குகள் நடக்கும்..
முன்பெல்லாம் கோயம்பேடு என்றால் இப்போது கிளாம்பாக்கம்..
போக்குவரத்து துறை அமைச்சர் வந்து, இவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கி கூட்ட நெரிசலை சமாளிக்கிறோம் என்பார். ஆனால் அங்குள்ள பயணிகளோ 5 மணி நேரம் காத்திருக்கிறோம் ஆறு மணி நேரம் காத்திருக்கிறோம் என வெறுப்பின் உச்சத்தில் டிவி மைக்குகளுக்கு முன்பு கொந்தளிப்பார்கள் .

அப்புறம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் கர்ஜிப்பார்.
அவர் அங்கிருந்து நகர்வதற்குள், அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி(4-5) பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகும்.
அதோடு மொத்த சடங்கும் முடிந்துவிடும்.
அப்புறம் முக்கியமான விஷயம், தவெக அரசை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ஒன்று இருக்கிறது..
அதாவது ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறைகளுக்காக ஏராளமானோர் ஆம்னி பேருந்துகளில் நார்மல் கட்டணத்தில் புக் செய்து வைத்திருந்தனர்..
இப்போது அவற்றை எல்லாம் கேன்சல் செய்து விட்டிருக்கின்றன ஆம்னி பேருந்து நிறுவனங்கள்.
கேட்டால் அன்றைய தினம் பேருந்து ரிப்பேராம். பத்து நாள் கழித்து ரிப்பேர் ஆகும் தேதிகள் இவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்றால் எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசிகள்!
பேயிங் மெத்தடு, மொத்தமா ஸ்பெஷல் பேக்கேஜ் போல..
— ஏழுமலை வெங்கடேசன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.