சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள நீதிமன்றம் அனுமதி ! உ.பி.யாக மாறுகிறதா, தமிழகம் ?
சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள நீதிமன்றம் அனுமதி ! உ.பி.யாக மாறுகிறதா, தமிழகம் ? எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் சடங்கை நடத்தக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டே தடைசெய்து ஆணை பிறப்பித்திருந்த நிலையில், மீண்டும் அந்த சடங்கை தொடர்ந்து நடத்திக் கொள்ள அனுமதித்து அதே மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருப்பது சர்ச்சையே ஏற்படுத்தியிருக்கிறது.
![சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி](https://angusam.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-22-at-4.28.37-PM.jpeg)
கரூர் மாவட்டம் நெரூர் கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி அமைந்துள்ளது. சதாசிவர் நினைவு நாளில் அனுசரிக்கப்படும் தரிசன முறைகளுள் ஒன்றாக இந்த எச்சில் இலையில் உருளும் சம்பிரதாயமும் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. அக்ரகாரத்தில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு போட்ட இலையில், பிற சாதியினரை உருள வைப்பதே இச்சடங்கு. இறைவனுக்கும் ஆன்மீகத்துக்கும், மனிதத் தன்மைக்கும், சுகாதாரத்துக்கும் எதிரான இச்சடங்கை கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றம் தடை செய்தது.
![வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன்](https://angusam.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-22-at-4.31.37-PM.jpeg)
தற்போது அதே சடங்கை மீண்டும் நடத்திக் கொள்ள மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டதையடுத்து, கடந்த மே 18ஆம் தேதி எச்சிலை சடங்கு நடந்து முடிந்திருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு, சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் சர்ச்சைக்குரிய சடங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில்தான், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அங்குசம் சார்பில், வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரனிடம் பேசினோம், “பன்றிகளைப் போல எச்சில் இலையில் தமிழ் பக்தர்கள் உருளுவதை கண்டு சகிக்க முடியாத நான் 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிப்பேராணை மனுஎண் 7068/2015 தலித் பாண்டியன் என்பவரை மனுதாரராக வைத்து தாக்கல் செய்து அத்தகைய தன்மானத்துக்கு எதிரான நடவடிக்கையை தடை செய்து உத்தரவு பெற்றேன்.
![சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி](https://angusam.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-22-at-4.28.36-PM-1.jpeg)
ஆனால், இந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பி.நவீன்குமார் என்பவர் அதே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து மேற்படி அதே நீதிமன்றத்தின் தடை உத்தரவு நிலுவையில் இருக்கும் போதே பக்தன் ஆனவன் அவன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் அதை யாரும் தடுக்க கூடாது அரசு அதிகாரிகளும் தடுக்கக்கூடாது என்று ஒரு புதுமையான உத்தரவை பெற்றுள்ளார்.
அதுவும் இந்த வழக்கு 30.04. 2024 அன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு, திடீர் என 17.05.2024 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் 18/05/2024 எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் நிகழும் தடையின்றி நடத்தப்படுவதற்கு ஏதுவாக இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மேலே குறிப்பிட்ட எச்சிலையில் பக்தர்கள் உருளும் நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னதாக மேற்படி தீர்ப்பு வெளிவந்துள்ளது. அதனால் மேற்படி தீர்ப்புக்கு உடனடியாக மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இழக்கப்பட்டது .
இதையெல்லாம்விட கவனிக்கத்தக்க விசயம் என்னவென்றால், எச்சில் இலையில் உருளுவது எங்கள் உரிமை என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு ஆதரவான தீர்ப்பை பெற்ற அந்த பாஜக பிரமுகர் பி.நவீன்குமார் எச்சில் இலையில் உருளவில்லை.” என்பதாக இந்த விவகாரத்தின் முரணை எடுத்துரைக்கிறார் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன்.
![4 bismi svs](https://angusam.com/wp-content/uploads/2024/06/விளம்பரம்.gif)
![நெரூர் எச்சிலை சடங்கு](https://angusam.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-22-at-4.28.35-PM.jpeg)
இந்தவிவகாரம் தொடர்பாக, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் மாநில தலைவர், வா.ரங்கநாதனிடம் பேசினோம்.
“ கர்நாடக அரசும் எச்சில் இலை சடங்கை தடை செய்திருக்கிறது. மூடநம்பிக்கைகளை வைத்துத்தான் பார்ப்பனர்கள் பன்னெடுங்காலமாக தங்கள் ஆன்மீக, சமூக மேலாண்மையை நிலைநாட்டிக் கொள்கின்றனர். பார்ப்பனர்கள் மேன்மையானவர்கள் புனிதர்கள், அவர்கள் சாப்பிட்ட எச்சில் நிலையில் உருண்டால் ஆன்ம பலம் கிடைக்கும் என்று நம்ப வைக்கும் தந்திரமே நெரூர் சடங்கு.
சமத்துவத்தை வலியுறுத்தும் தமிழ் ஆன்மீக மரபுக்கு எதிராக, தொடர்ந்து செயல்படும் பார்ப்பன வைதீக ஆரிய ஆன்மீக மரபு, கோடிக்கணக்கான தமிழ் மக்களை தொடர்ந்து அடிமைத்தனத்தில் நிறுத்தி வைக்க முயலும் நரித்தனமே நெருர் சடங்கு. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கடவுளையே கேள்வி எழுப்பிய சுயமரியாதை மரபு கொண்ட தமிழக பக்தர்கள் நெரூர் எச்சிலை சடங்கை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
![எச்சிலை சடங்கு](https://angusam.com/wp-content/uploads/2024/05/எச்சிலை-சடங்கு.jpeg)
பக்தி இலக்கிய காலத்தில், அடிமைத்தனமாக வாழ்வதே லட்சியம் என்பதான கருத்து திட்டமிட்டு பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது. அதற்கு சூத்திர பஞ்சமர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அந்த வரலாறு தான் மீண்டும் நிகழ்கிறது.
உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் தடை செய்த நிகழ்வை, ஒரு நீதிபதி மீண்டும் நடத்தச் சொல்லி உத்தரவிட முடியுமா? இரு நீதிபதியின் உத்தரவு பொதுநல வழக்கில் போடப்பட்டது. பொதுநல வழக்கின் உத்தரவு எல்லோரையும் கட்டுப்படுத்தும் தானே? நீதித்துறை மீதான தமிழக ஆன்மீகவாதிகளின் நன் மதிப்பை சீர்குலைக்கிறது இத்தீர்ப்பு.
சதி எனும் உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை, பாலிய திருமணம், அனைத்து இந்துக்களும் அர்ச்சகராக மறுப்பு போன்ற வைதீகத்தின் பெயரிலான சமூக கொடுமைகளை தமிழ் ஆன்மீக உலகம் ஒருபோதும் ஏற்றதில்லை. வள்ளுவர், வைகுண்டர் முதல் வள்ளலார் வரை வலியுறுத்திய சமத்துவ ஆன்மீகத்தையே தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளும்.
![வா.ரெங்கநாதன்.](https://angusam.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-22-at-4.31.38-PM.jpeg)
அரசியல் சட்ட விரோத, ஆன்மீக விரோத, மனித குலத்துக்கு எதிரான மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை தமிழ் ஆன்மீக உலகின் சார்பில் நிராகரிக்கிறோம்.ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியுள்ள பார்ப்பனர்கள் தான், மனித மாண்புக்கு எதிரான இத்தீர்ப்பையும் ஆதரிக்கிறார்கள். எச்சிலை சடங்கையும் அதை ஆதரிக்கும் தீர்ப்பையும் தடுக்காவிட்டால் தமிழகம், உத்தரப்பிரதேசமாக மாறும். ” என்பதாக தமது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார், வா.ரெங்கநாதன்.
– மித்ரன்.