குளித்தலை அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரூ.10 கோடியில் ரோப் கார் ரெடி..
குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரூ.10 கோடியில் நடைபெற்று முடிந்த ரோப் கார். காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். விழா முழுவீச்சில் நடைபெறுகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை 1017 படிக்கட்டுகளை கொண்டது. சுமார் 1125 அடி உயரத்தில் அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அருள்மிகு சுரும்பார்குழலி உடனமர் அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மற்றும் கார்த்திகை மாத சோமவார விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
பக்தர்கள் 1017 படிக்கட்டுகளை ஏறி தரிசிக்க முடியாத பக்தர்கள் குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் பழனி தண்டாயுதபாணி கோயிலை போல ரோப்கார் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலின் போது, அப்போதைய திமுக வேட்பாளர் மாணிக்கத்திடம் கோரிக்கை வைத்தனர்.

வெற்றி பெற்றதற்கு பிறகு குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், ரோப்கார் குறித்து பக்தர்கள் கோரிக்கையை, சட்டமன்றத்தில் பேசினார். இப்போதைய முதல்வர் கருணாநிதி, கோரிக்கையை ஏற்று ரூபாய் 6 கோடியில் அமைக்க அனுமதி வழங்கினார்.
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அப்போதைய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அதற்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டு பின்னர் பணிகள் துவங்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக
ரோப்கார் பணிகள் முழுமை பெறாமலேயே துவக்க விழா நடைபெற்றது.
இது பக்தர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதற்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி வந்ததற்கு பிறகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அய்யர்மலை கோவிலுக்கு நேரடியாக வந்து பணிகளை ஆய்வு செய்தார்.
அதன் பிறகு ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. ரூபாய் 10 கோடி செலவில் நடைபெற்று வந்த பல்வேறு ரோப் கார் பணிகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் குமரதுரை அடிக்கடி அதிகாரிகளுடன் அய்யர்மலை வந்து ஆய்வு செய்து வந்தார்.
கடந்த மாதம் பணிகள் நிறைவடைந்தது.

இதை அடுத்து திறப்பு விழாவிற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் குமர துரை தலைமையில் பொறியாளர் குழுவினர் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள், அர்ச்சகர்கள் அடங்கிய குழுவினர் சென்னையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரை நேரடியாக சென்னையில் சந்தித்தனர்.
இந்நிலையில் நாளை மறுநாள் புதன்கிழமை காலை 10 மணி அளவில் அய்யர்மலை ரோப் காரை (கம்பி வட ஊர்தி) காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
-நௌஷாத்,