திருச்சி படைப்பாளர்கள் சார்பில் மீண்டும் ஒரு புத்தக திருவிழா ! – கவிஞர் நந்தலாலா
திருச்சி சிரா இலக்கியக் கழகம் சார்பில் புத்தகத் திறனாய்வு மற்றும் திருச்சி ஆளுமைகளுக்குப் பாராட்டு விழா, தமிழ்ச்சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்க மாநிலப் பொறுப்பாளர் கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு உரையாற்றினார்.
“அண்மையில் திருச்சியில் நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவின் நிகழ்வுகள் தமிழகத்தில் உள்ள எல்லாராலும் பாராட்டப்படுகின்றது. எழுத்தாளர் பவா.செல்லதுரை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்குத் தொலைபேசியில், ‘திருச்சி புத்தகத் திருவிழாவில் நிகழ்த்தப்பட்ட கலை, இலக்கியப் பண்பாட்டு நிகழ்வுகளான, மாணவர் உரை, நாடகம், நாட்டியம், நாட்டார் வழக்கற்றியல், ஓவியம், தனி நடிப்பு என்று பல்வகையில் அமைந்து சிறப்பினைப் பெற்றுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் எல்லா மாவட்டங்களிலும் நடைபெறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கலைகளின் வளர்ச்சியில்தான் பண்பாட்டு வளர்ச்சியுள்ளது என்பதை உணர்ந்து நிகழ்ச்சிகளை அமைத்திருந்தோம். அதற்குக் கிடைத்த பாராட்டுகளுக்குத் திருச்சி மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் தங்கமுத்து ஒரு புத்தகவிழாவில் பேசும்போது, புத்தகப் பொருளாதாரம் குறித்து உரையாற்றினார். அது பொருளாதாரம் பற்றியது அல்ல. ஒரு புத்தகம் உருவாக ஆகும் பொருளாதாரம் குறித்து மிகவிரிவாக, தெளிவாக உரையாற்றினார். மேலும் அவர் குறிப்பிட்டது, புத்தகங்கங்கள் விலை மலிவாகக் கொடுக்கப்படவேண்டும் என்றார். வாசிப்பு இயக்கம் ஒரு மனிதனுக்குள் வளர பேராசிரியர் தங்கமுத்துவின் அந்தச் சிந்தனையை நாம் ஏற்கவேண்டும். புத்தகங்களைக் குறைந்த விலைக்குக் கொடுக்க நாம் முன்வரவேண்டும். அப்போது வாசிப்பு இயக்கம் மக்களிடம் வேகம் கொள்ளும்.
ஆளுமைகள் நிறைந்த இந்த அவையில் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்துகின்றார்கள். அவ்விழா சிறக்க நாம் உறுதுணையாக இருப்போம். திருச்சி படைப்பாளர்கள் சார்பில் ஆண்டுக்கொருமுறை புத்தகத் திருவிழாவை நடத்தப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான திட்டமிடலை நாம் விரைவில் மேற்கொள்ளவோம்” என்றார்.
கவிஞர் நந்தலாலா உரையாற்றி முடித்தப் பின்னர் திருச்சி தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் உதயகுமார் எழுந்து,“திருச்சி படைப்பாளர்கள் சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவைத் தமிழ்ச்சங்கத்தின் மேல் தளத்தில் நடத்திக் கொள்ளலாம்” என்று அறிவித்தார். தமிழ்ச் சங்கத்தின் மேல் தளத்தில் 700 பேர் அமரக்கூடிய அளவில் பெரிய அரங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
திருச்சியில் வாசிப்பு இயக்கம் மக்களிடம் மென்மேலும் வளர திருச்சி படைப்பாளர்கள் சார்பில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா சிறக்க அங்குசத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.
-ஆதவன்