சார்பதிவாளர் செந்தூர்பாண்டியனுக்கு எதிராக அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டு ! பழிவாங்கும் நடவடிக்கையா?
தற்போது திருப்பத்தூர் மாவட்ட பதிவாளராக பணியாற்றிவரும் செந்தூர் பாண்டியன், இதற்கு முன்னர் செங்கல்பட்டு மாவட்டத்தில் பதிவாளராக பணியாற்றியபோது, முத்திரை கட்டணத்தை குறைவாக காட்டி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த பிப்-14 ஆம் தேதி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் செந்தூர் பாண்டியின் வீட்டில் அதிரடி சோதனையை நடத்தியிருந்தனர்.
தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக பதவி வகித்துவரும் செந்தூர் பாண்டியனுக்கு எதிராக, அவரை பழிவாங்கும் விதமாக இலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடந்துகொள்வதாக, குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

குறிப்பாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசு டிஎஸ்பி கலைச்செல்வன் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வருவதாகவும்; அவர் பணியாற்றும் சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த பதிவாளர்களுக்கு சில பத்திரங்களை பதிவு செய்து கொடுக்குமாறு நிர்ப்பந்தம் செய்வதாகவும்; அவ்வாறு செய்யாத நபர்களை பழிவாங்கும் விதமாக இலஞ்ச புகார் பதிவு செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள், தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெளியான கூட்டறிக்கையில், ”செங்கல்பட்டு 2 எண் இணை சார்பதிவக எல்லைக்குட்பட்ட நின்னகரை கிராம சொத்தும் படப்பை சார்பதிவக எல்லைக்குட்பட்ட இரண்டு சொத்துக்களையும் சேர்த்து கிரைய உடன்படிக்கை ஆவணம் எழுதப்பட்டு திரு.சம்மந்த முதலியார் மகன் திரு.தனசேகர் அவர்களால் செங்கல்பட்டு 2 எண் இணை சார்பதிவகத்தில் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு, அப்போது சார்பதிவாளர் பொறுப்பில் உள்ள திரு.ராமமூர்த்தி, உதவியாளர் அவர்களால் இவ்வாவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நடைமுறை தவறு ஏதும் நடந்ததாக தெரியவில்லை.
இந்த ஆவணமானது 2020-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு ‘Covid’ காலம் என்பதால் கொரான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த சமயம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பணியாளர்களை பதிவு பணியில் ஈடுபடுத்த அரசு உத்தரவு பிறப்பித்து, அதனடிப்படையில் அன்றைய காலத்தில் உதவியாளர்களும் சார்பதிவாளர் பொறுப்பில் பணியாற்றுவது வழக்கமாக இருந்தது.
மேலும் செங்கல்பட்டு 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் வருடத்திற்கு நிறைய ஆவணங்கள் பதிவு செய்யப்படும் நிலையில், அவ்வாவணங்கள் தொடர்பாக களப்பணி மற்றும் இடப்பார்வை மேற்கொள்ள அலுலவகத்திலிருந்து வெளியில் சென்று பார்வையிடும் நிலையில், சார்பதிவாளருக்கு அடுத்த கீழ்நிலையில் உள்ள உதவியாளர்களுக்கு மாவட்டப்பதிவாளரின் ஒப்புதலுடன் சார்பதிவாளர் பொறுப்பு வழங்குவது நடைமுறை ஆகும். அதன்படி மேற்கண்ட உதவியாளருக்கு சார்பதிவாளர் பொறுப்பு வழங்கப்பட்டு, அவரால் மேற்கண்ட ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவுசட்டம் பிரிவி 28-ன்கீழ் இவ்வாவணம் பதிவுச்செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட கிரைய உடன்படிக்கை ஆவணத்தை பொறுத்தவரை அரசுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் அரசுக்கு இழப்பு என DVAC கணக்கிட்டுள்ளது என்று தெரியவில்லை.
பதிவுத்துறையில் இதுபோன்ற அரசுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லாத நிலையில் இச்சங்கத்தின் மாநில தலைவர் என்ற நிலையில் திரு.ஆ.செந்தூர்பாண்டியன் அவர்கள் மீது பொய்யான புகாரை சித்தரித்துள்ளது.
ஒரு சார்பதிவாளர் களப்பணி மற்றும் இடப்பார்வைக்காக வெளியில் செல்ல மாவட்டப்பதிவாளரிடம் அனுமதி பெற்றும், சார்பதிவாளருக்கு அடுத்த நிலையில் உள்ள உதவியாளரிடம் பொறுப்பு ஒப்படைத்து செல்லும் போது, பொறுப்பு சார்பதிவாளரால் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு அவரவர்களே பொறுப்பு என்ற நிலையில், மேற்கண்ட கிரைய உடன்படிக்கை ஆவணம் பொறுப்பு சார்பதிவாளரால் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அன்றைய சார்பதிவாளராக உள்ள தற்போதைய மாநில தலைவர் திரு.ஆ.செந்தூர்பாண்டியன் அவர்கள் மீது எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் பொய்யான புகாரை சுமத்தி ஜோடித்துள்ளது. இதற்கு எதன் அடிப்படையில் பதிவுத்துறை அனுமதி அளித்தது என்பது வியப்பாக உள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், இதேபோன்று 2015-ம் ஆண்டு இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் அன்றயை குன்றத்தூர் சார்பதிவாளராக பணியாற்றியபொழுது பதிவு செய்த ஆவணங்களில், மதனந்தபுரம் கிராமத்திற்குட்பட்ட 2 ஆவணங்கள் அவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாவணங்களில் எழுதி கொடுத்த நபர் மற்றும் எழுதி வாங்கிய நபர் ஆகியோர்களின் அடையாளத்தை அரசினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் மூலம் சரிபாக்கப்பட்டு, எழுதி கொடுத்தவருக்கு அச்சொத்து சொந்தமானது என்பதற்கு அவரால் சமர்ப்பிக்கப்பட்ட முன் ஆவணமானது அலுவலத்தில் பராமரிக்கப்படும் நகலுடன் சரிபார்க்கப்பட்டு இரண்டு சரியாகவும் ஒத்துபோன நிலையிலும் அந்த ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது. இதில் நடைமுறை தவறு ஏதும் இல்லை.

இதை பதிவுத்துறை தலைவர் தனது அறிக்கையில் தெவிக்கப்பட்ட நிலையில், பதிவுத்துறை தலைமையானது பொய் புகாருக்கு அனுமதி அளித்தது ஆச்சரியம் அளிக்கிறது. மேலும் DVAC-யின் இந்த பொய்புகாரினை எதிர்த்து மாநிலத்தலைவரால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் W.P.No.18072/2024 மூலம் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆகையால், மாநிலத்தலைவர் திரு.ஆ.செந்தூர்பாண்டியன் அவர்கள் மீது புனையப்பட்ட 2 FIR (முதல் தகவல் அறக்கை)-களையும் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறையானது அவரை பழிவாங்க மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வருகிறது.
மேலும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் பணியாற்றிவரும் திரு.கலைச்செல்வன், அவர்கள் காவல் ஆய்வாளர் நிலையில் சுமார் 15 வருடங்களும் DSP ஆக சுமார் 6 வருடங்களும் ஒரே மாவட்டத்தில் அதாவது காஞ்சிபுரத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்களை தொடர்புகொண்டு முறைகேடான ஆவணங்களை பதிவு செய்ய தொடர்ந்து மிரட்டி வருவது தெரிய வந்துள்ளது. இவர் தொடர்ந்து அரசு பணியாளர்களை மிரட்டுவதை தொழிலாக செய்து வருகிறார்.

மாநிலத்தலைவரின் மாமானார் வீட்டில் 14.02.2025 அன்று நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஒரு ஆவணமோ, நகையோ, பணமோ கைப்பற்றப்படாத நிலையில், திரு.கலைச்செல்வன், DSP, அவர்கள் DVAC-யில் பணிபுரியாத வெளிநபர்களை சோதனைக்கு அழைத்து சென்று அவர்கள் மூலமாக தவறான தகவலை Media-க்கு கசியவிட்டு மாநிலத்தலைவரை பொதுவெளியில் அசிங்கப்படுத்த முயற்சி செய்துள்ளார். மேலும் என்னை கைது செய்துவிட்டதாகவும் பொய்யான தகவலை பரப்பியுள்ளார். இது சம்மந்தமாக அவர்மீது நீதிமன்றத்தில் மானநஷ்டஈடு வழக்கு தொடரப்படும்.
எங்கள் மாநிலத்தலைவர் ஆ.செந்தூர்பாண்டியன் அவர்களின் மதிப்பினை கெடுப்பதாக DVAC-யின் செயல்பாடு உள்ளது. இது தொடர்பாக அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாநிலத்தலைவர் என்ற நிலையில் அவருக்கு பணிபாதுகாப்பும் உயிர்பாதுகாப்பும் வேண்டும் என இந்த அறிக்கையின் மூலம் வேண்டுகிறோம்.” என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.