அங்குசம் பார்வையில் ‘நரிவேட்டை’
அங்குசம் பார்வையில் ‘நரிவேட்டை’ 60/100
தயாரிப்பு : ‘இந்தியன் சினிமா கம்பெனி’ & ’ஃபியூச்சர் ரன் –அப் ஃபிலிம்ஸ்’ திப்பு ஷான், ஷியாஸ் ஹாசன். இயக்கம் : அனுராஜ் மனோகர். கதை : அபின் ஜோசப். நடிகர்-நடிகைகள் : டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு, டைரக்டர் சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், அப்புன்னி ஜோசப், ரினி உதயகுமார், தொம்மன், வினோத் போஸ். ஒளிப்பதிவு : விஜய், இசை : ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங் : ஷமீர் முகமத், ஆர்ட் டைரக்டர்:எம்.பவா, ஸ்டண்ட் : ஃபீனிக்ஸ் பிரபு, அஷ்ரஃப் குருக்கல், காஸ்ட்யூம் : அருண்மனோகர். தமிழ்நாடு ரிலீஸ்: ஏஜிஎஸ் எண்டெர்டெய்ண்மெண்ட். பி.ஆர்.ஓ : ரியாஸ் கே.அஹமத் & பாரஸ் ரியாஸ்.
கணவன் இறந்த பிறகு தையல் வேலையையும் விவசாயத்தையும் கவனித்துக் கொண்டு குடும்பத்தை நடத்துகிறார் வர்கீஸின் [டொவினோ தாமஸ்] அம்மா. இதனால் வேலைவெட்டி எதுவும் இல்லாமல் ஊர் சுற்றும் டொவினோவுக்கு அவ்வப்போது பண உதவி செய்கிறார் லவ்வர் பிரியம்வதா கிருஷ்ணன். வேலைவெட்டி இல்லாதவனுக்கு என் பொண்ணைக் கட்டிக்கொடுக்க முடியாது என மறுக்கிறார் பிரியம்வதாவின் அப்பா. இந்த நேரத்தில் தான் போலீஸ் வேலைக்கு செலக்ஷனாகிறார் டொவினோ. போலீஸ் வேலைன்னா, அதிலும் கான்ஸ்டபிள் வேலைன்னா, நேரத்துக்கு சாப்பிட முடியாது, தூங்க முடியாது என சலித்துக் கொண்டாலும் அம்மாவின் கோபப்பார்வைக்குப் பயந்து போலீஸ் வேலையில் சேர்கிறார் டொவினோ தாமஸ்.
கோட்டயம் ஆர்ம்டு போலீஸ் கேம்பில் தான் ட்ரெய்னிங். அங்கே பஷீர் [சுராஜ் வெஞ்சரமூடு] என்ற ஹெட்கான்ஸ்டபிள் தான் வர்கீஸுக்கு ஆதரவாக அனுசரனையாக இருந்து போலீஸ் வேலையின் கஷ்டநஷ்டங்களைச் சொல்லிப் புரியவைக்கிறார். தங்களின் நில உரிமைக்காவும் குடியிருக்க நல்ல வீட்டிற்காகவும் வயநாட்டில் ஆதிவாசிகள் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்.
கோட்டயம் ஆர்ம்டு போலீஸ் கேம்பில் இருக்கும் 35 பேருக்கு வயநாட்டில் டூட்டி போடப்படுகிறது. அந்த 35 பேரில் டொவினோவும் சுராஜ் வெஞ்சரமூடும் உள்ளனர். போலீஸ் வேனில் போகும் போதே வயநாட்டின் அழகையும் அருமை பெருமைகளையும் சொல்லி, “அதையெல்லாம் நீ பார்த்தேன்னா உன் மனசு ரிலாக்ஸாகிரும்” என டொவினோவை கூல் பண்ணுகிறார் சுராஜ் வெஞ்சரமூடு.

போராடும் ஆதிவாசி மக்களிடம் அன்பாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் பேசுகிறார் டி.ஐ.ஜி.ரகுராம் கேசவதாஸ் [ நம்ம டைரக்டர் சேரன் தான் ]. இதற்கிடையே ஆதிவாசிகளில் முதன்மையானவராக இருக்கும் தொம்மனுக்கும் டொவினோவுக்குமிடையே மோதல் ஆரம்பிக்கிறது. அது அந்த மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. முப்பது நாட்களுக்கு மேலாகியும் போராட்டத்தின் வீரியம் குறையவில்லை. ஆதிவாசி மக்கள் சோர்வடையவில்லை. இந்த எழுச்சியையும் வீரியத்தையும் பார்த்து அதிர்ச்சியாகிறது ஆளும் வர்க்கமும் போலீஸ்வர்க்கமும். போராட்டக்காரர்களுக்குள் மாவோயிஸ்டுகள் ஊடுருவிவிட்டதாக கிடைத்த தகவலையடுத்து டெல்லியிலிருந்து அதிரடிப்படையை இறக்குகிறது மாநில போலீஸ் நிர்வாகம்.
மாவோயிஸ்டுகளைத் தேடி அதிரடிப்படை வீரர்களும் ஆர்ம்டு போலீஸ் படையும் மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்துகிறது. அப்போது நடக்கும் மோதலில் ஹெட்கான்ஸ்டபிள் சுராஜ் வெஞ்சரமூடு கொல்லப்படுகிறார். இது மாவோயிஸ்டுகளின் வேலை தான் என்ற வெறியுடன் ஆதிவாசிகளின் வீடுகளைக் கொளுத்துகிறது, துப்பாக்கிச்சூடு நடத்தி ஐந்து வயது பிஞ்சு பெண் குழந்தை உட்பட பலரை ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொல்கிறது ’கவர்மெண்ட் லைசென்ஸ்டு’ குண்டர் படையான காவல்துறை.
இந்த அக்கிரமத்தையும் உரிமைக்காக போராடியவர்களின் உயிரை வாங்கிய கொடுங்கோலர்களையும் நினைத்து மனம் வெடித்து களம் இறங்குகிறார் வர்கீஸ்[எ] டொவினோ தாமஸ். மாவோயிஸ்ட்டுகள் என்ற கதையைக் கட்டவிழ்த்துவிட்ட நரிகளை வேட்டையாடுவது தான் இந்த ‘நரிவேட்டை’.
2003—ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை கதையாக எழுதிய அபின் ஜோசப்பையும் அந்தக் கதையை ரத்தமும் சதையுமாக அதிகாரவர்க்கத்தால் நசுக்கப்படும் மக்களின் உரிமைக் குரலாக திரையில் பதிவு செய்த இயக்குனர் அனுராஜ் மனோகரையும் கைகுலுக்கி, உச்சிமுகர்ந்து, வாரியணைத்துப் பாராட்டியே ஆகவேண்டும். பாராட்டுவது நமது தார்மீகக் கடமையும் கூட. கேரளத்தில் நடந்த கொடூர சம்பவம் என்றாலும் இங்கே நம்ம தமிழ்நாட்டில் மிக கேவலமான அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரங்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, போலீஸே வீடுகளை, ஆட்டோக்களை தீவைத்த கொடுமைகளும் நம் கண் முன்னே வந்து நிற்பதைத் தவிர்க்க முடியவில்லை.
போராடும் மக்களின் பக்கம் முழுமையாக நிற்க வேண்டும், தன் உன்மை உள்ளுணர்வில் உள்ளதை சொல்லியே ஆகவேண்டும், அதே சமயம் சென்சார் ‘மேதாவி’களின் கண்களிலும் மிளகாய்ப் பொடியைத் தூவி தப்பிவிடவேண்டும் என்ற கூர்மையான மதி நுட்பத்துடன் பல காட்சிகளையும் ’மியூட்’ கூட செய்ய முடியாத அளவுக்கு பல வசனங்களையும் சாமர்த்தியமாக வைத்து சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர் அனுராஜ் மனோகர். “சொல்லுக்கு கட்டுப்படுவதே ஜனநாயகமுறை’ என படம் முடிந்ததும் டேக்லைன் போடுகிறாரே.. அங்க தான் நிமிர்ந்து நிற்கிறார் அனுராஜ் மனோகர்.
டொவினோ தாமஸின் சினிமா கேரியரில் தற்போதைக்கு ஆகச்சிறந்த படம் என்றால் இந்த நரிவேட்டை தான். ஆதிவாசிகளை நோக்கி கொலை வெறியுடன் போலீஸ் சுடும் போது, அந்த மக்களைக் காக்க அல்லாடும் போதும், ஹெட்கான்ஸ்டபிள் பஷீர் சாவு குறித்து தனது லவ்வர் பிரியம்வதாவிடம் சர்ச் வாசலில் தேம்பித் தேம்பி அழும் போதும் , பெண் வக்கீலுடன் உயர்நீதிமன்ற நீதிபதியைச் சந்தித்து, போலீசின் அட்டூழியத்தைச் சொல்லி வெடித்து அழும் போதும் மனுஷன் நம்மள கண்கலங்க வச்சுட்டாரு. வெல்டன் டொவினோ தாமஸ்.
ஆவேசக்கூச்சல் இல்லை, சின்ன உறுமல் கூட இல்லை, ஃபாஸ்ட்பீட் நடை இல்லை. இதெல்லாம் இல்லாமல் நரித்தந்திரம் மூலம் தனது போலீஸ் கொடூர புத்தியைக் காட்டும் டி.ஐ.ஜி. ரகுராம் கேசவதாஸாக நம்ம சேரனின் நடிப்புக் கொடியும் பட்டொளி வீசிப்பறக்கிறது. வேறு எந்த நடிகரையும் அந்தக் கேரக்டரில் நம்மால் பொருத்திப் பார்க்க முடியாது.
அதே போல் சுராஜ் வெஞ்சரமூடுவின் நடிப்பைப் பத்தி சொல்ல வேண்டுமா என்ன? ”டென்ஷனாகதடா.. பொறுமையா இருடா…” என டொவினோவை ஆறுதல்படுத்தும் சீனில் அசத்திட்டார் சுராஜ். இதற்கடுத்து மனதில் நிற்கும் மூன்று கேரக்டர்கள் என்றால் போராட்டத்தை முன்னெடுக்கும் தோழராக வரும் அந்தப் பெண், ஆதிவாசியாக வரும் தொம்மன், படுபாவிகளால் சுட்டுக் கொல்லப்படும் அந்த பிஞ்சுக் குழந்தை இவர்கள் தான்.
இந்த நரிவேட்டை’யின் மிக முக்கிய பங்களிப்பார்கள் கேமராமேன் விஜய், மியூஸிக் டைரக்டர் ஜேக்ஸ் பிஜாய், ஆர்ட் டைரக்டர் பவா கூட்டணி தான்.
‘ஆதிவாசிகள் வாழ்க்கைக்கு
பிடிமண்ணும் சொந்தமில்லை” என்ற பாடல் வரிகளே படத்தின் மொத்த கதைக்கும் சாட்சி. அதே ட்யூனில் க்ளைமாக்ஸில் ஒலிக்கும் பெண் குரல் உயிரை உலுக்கிவிட்டது.
மக்களுக்கான சினிமாவை மக்கள் பக்கம் நின்று அறத்துடனும் நேர்மைத்திறத்துடனும் ‘நரிவேட்டை’யைப் படைத்த இயக்குனர் அனுராஜ் மனோகரை கொண்டாடுவோம்.
-மதுரை மாறன்