அங்குசம் பார்வையில் ‘பேரன்பும் பெருங்கோபமும்’
தயாரிப்பு : இ-5 எண்டெர்டெய்ன்மெண்ட் காமாட்சி ஜெயகிருஷ்ணன். டைரக்ஷன் : சிவபிரகாஷ். ஆர்ட்டிஸ்ட் : விஜித் பச்சான்,ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், சுபத்ரா ராபர்ட், ஹரிதா, பவா செல்லதுரை, தீபா சங்கர், தீபா பாஸ்கர். இசை : இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு : ஜெ.பி.தினேஷ்குமார், எடிட்டிங் : ராமர், ஆர்ட் டைரக்டர் : சரவணன், பி.ஆர்.ஓ. : ஜான்சன்.
தேனி மாவட்டம் பெரியகுளம் ஏரியாவில் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து, சுகாதாரத்துறை அமைச்சராக உயர்கிறார் சாதிவெறி பிடித்த மைம்கோபி. இவரது அடியாள் அருள்தாஸ். இவரது ஊரில் கீழ்சாதிப் பையன்-மேல்சாதிப் பெண் ஆகியோரின் காதலுக்கு சப்போர்ட்டாக இருந்து, அவர்கள் ஊரைவிட்டு ஓடவும் உதவுகிறார் விஜித்பச்சான். ஆனாலும் அந்த ஜோடி மைம்கோபி ஆட்களிடம் அகப்பட்டுக் கொண்டதும் , ஊருக்குள் தூக்கிவந்து அந்தப் பையனை எரித்துக் கொன்று, அப்பெண்ணை காதில் விஷம் ஊற்றிக் கொல்கிறார்கள் மைம்கோபியும் அருள்தாசும்.
அதுக்குப் பிறகு…? அதுக்குப்பிறகென்ன.. பேரன்பும் பெருங்கருணையும் கொண்ட விஜித்பச்சான், சாதி வெறியர்களை அரிவாளால் தண்டிக்காமல், நீதியால் தண்டிப்பது தான் இந்தப் படம்.
இயக்குனர் பாலு மகேந்திராவிடம் பயின்றவராம் இப்படத்தின் இயக்குனர் சிவப்பிரகாஷ். அந்தப் பயிற்சிக்கான எந்த அறிகுறியும் இப்படத்தில் இல்லை, இல்லவே இல்லை. காட்சிகள் அம்புட்டும் படு அபத்தம், மேடைநாடக பாணியில் வசனம்.
கதையின் நாயகன் விஜித்பச்சான் படம் முழுக்க ரொம்பவே திணறியிருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் கோர்ட் சீனில் பாடிலாங்குவேஜ் மகா செயற்கைத்தனம். இன்னும் நல்லா கத்துக்கிட்டு வாங்க விஜித் ப்ரோ. ஆனால் ஹீரோயின் ஷாலி நிவேகாஸ், பாஸ்மார்க் வாங்கிவிட்டார். அதே போல் விஜித்தின் அம்மாவாக வரும் சுபத்ரா ராபர்ட்டும், ஷாலியின் தோழியாக வரும் ஹரிதாவும் ஓகே மார்க் வாங்கிவிட்டார்கள்.
தனது சினிமாக்களையெல்லாம் வடமாவட்டத்தின் முந்திரிக்காடு ஏரியாக்களில் எடுத்த தங்கர்பச்சான், தனது மகன் விஜித்பச்சான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை மட்டும் தென்மாவட்ட கருவைக்காட்டில் படம் எடுத்திருப்பது ஏன்னு நமக்கு நல்லாவே புரியுது. [கேட்டா டைரக்டர் சிவப்பிரகாஷ் அந்த ஏரியாக்காரர் என வியாக்கியானம் பேசுவார் தங்கர் ].
அதே போல் சில நாட்களுக்கு முன்பு இப்படத்தை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவுக்குப் போட்டுக்காட்டி, அவரது கருத்துக்களை சோஷியல் மீடியாக்களில் பரவவிட்டார் தங்கர். ஆனால் இப்படத்தைப் பார்க்க, திருமாவைவிட மிகப் பொருத்தமானவர்கள்னா… தங்கரின் தலைவர்களான டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் தானே. இதெல்லாம் தங்கருக்குத் தெரியாமலா இருக்கும்? எல்லாமே திருகுஜாலம் தான், எப்போதுமே தில்லாலங்கடி தான்.
— மதுரை மாறன்.