ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் ! பின்னணியில் இருந்த காக்கி கருப்பு ஆடு !
ஏடிஜிபி எச்சரிக்கை ! அதிரடியாக மாற்றம் கண்ட 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் !
அங்குசம் ஆடுகளம் !
தமிழக காவல்துறையில் சமீபத்தில் நடந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான டிரான்ஸ்பர் என்பது காவல் துறை வட்டாரங்களில் பேசும் பொருளாகியுள்ளது. இந்த 18 பேர் டிரான்ஸ்பருக்கு பின்னணியில் காவல்துறையில் உள்ள ஒரேயொரு கருப்பு ஆட்டின் அதிகார துஷ்பிரயோகம் தான் காரணம் என்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை சமீபத்தில் இடமாற்றம் செய்தும் உத்தரவிட்டிருந்தார் அரசு கூடுதல் தலைமை செயலாளர் தீராஜ் குமார். இதில், 6 டிஐஜி, 5 எஸ்பி, 4 டிசி ஆகியோருக்கு பணியிடமாறுதல் இருந்தது. அதில், மேலும் 3 ஏஎஸ்பி அளவிலான அதிகாரிகளுக்கு எஸ்.பி. அந்தஸ்தில் பதவி உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை உள்வட்டம் அறிந்தவர்களிடம் பேசியபோது, “காவல்துறையில் அதிகாரிகள் டிரான்ஸ்பர் என்பது ஆச்சர்யபடுவதற்கோ, அதிர்ச்சியாவதற்கோ ஒன்றும் இல்லை. இது இயல்பாக சுழற்சி முறையில் நடைபெற்று கொண்டுதான் இருக்கும். ஆனால், தற்போது வெளியான 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றத்தில் தனிச்சிறப்பான சங்கதி இருக்கிறது.

சமீபத்தில் சேலத்திற்கு முதல்வர் வருகையையொட்டி தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் முதல் நாளே சேலத்திற்கு விசிட் அடித்தார். அப்போது, மாவட்ட காவல்துறையினரிடம் முதல்வர் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்ததுடன், தொடர் குற்றச்சம்பவங்கள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசியபோது, “தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன. இதனை இன்னும் குறைக்க ஊரக உட்கோட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளோம்.
அதே சமயத்தில் அவர் மற்றொரு விஷயத்தையும் ஆழமாக பதிவு செய்திருந்தார். அதில், சட்டவிரோத செயல்களுக்கு ’துணை போகும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். அதன்பிறகு தான் அன்றைய தினமே 18 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான டிரான்ஸ்பர் லிஸ்ட் வெளியானது. அதில், 3 அதிகாரிகள் சேலத்தை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். பொதுவாக முதல்வர் ஒரு மாவட்ட நிகழ்ச்சிக்கு வந்து சென்ற பிறகு தான் டிரான்ஸ்பர் இருக்கும் என்பது வழக்கம். ஆனால், இந்த முறை முதல்வர் வருகைக்கு முன்பே டிரான்ஸ்பர் வெளியானது” என்றனர்.

மேலும் இதுகுறித்து வடக்கு மண்டல காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசியபோது, “ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சமீபத்தில் நடந்த மாற்றம் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான். சேலத்திற்கு முதல்வர் விசிட்டுக்கும் டிரான்ஸ்பருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால், திடீரென நடந்த அதிகாரிகள் மாற்றத்திற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கின்றது. வெளியான டிரான்ஸ்பர் லிஸ்டில் 3-வதாக இடம்பெற்றுள்ள சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த சிபி சக்கரவர்த்தியை, தகுதியிறக்கம் செய்து டிஎன்பிஎல் விஜிலென்ஸ் பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.” என்றனர்.
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “சென்னை அளவிலான ஒரு மேலதிகாரியின் அதிகார துஷ்பிரயோகத்தால் தான் இந்த திடீர் ட்ரான்ஸ்பர். சென்னை நுங்கம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூண்டில் எனும் பாருடன் கூடிய பீச் ஹவுஸ் ரெஸ்டாரண்டில் சமீபத்தில் போதையில் இரு தரப்பினரிடையே பிரச்னை நிலவி அது காவல் துறையில் வழக்கு பதிவாகும் அளவுக்கு சென்றது. இதில், அ.தி.மு.க. பிரமுகர்கள் இருவர், ஓய்வு பெற்ற எஸ்.பி மகன், நடிகர் கருணாஸ் கட்சியின் பிரமுகர்கள் என கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் திமுக பிரமுகரும், ஹோட்டலின் உரிமையாளரான தூண்டில் ராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த ஹோட்டலின் செயல்பாடுகள் சமீபகாலமாக காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காரணம், தென் மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக இந்த ஹோட்டல் இருந்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் போலீசாருக்கு தெரிந்தும் அதில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருந்ததற்கு காரணம் காவல் துறையில் முக்கிய பொறுப்பில் உள்ள சிபிசக்கரவர்த்தி தான். இவர் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் ராஜாவை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னணியில் இருந்துதான் அவர் தகுதியிறக்கம் (டவுன்கிரேடிங்) செய்யப்பட்டிருக்கிறார். மேலும், தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் இப்படி டிரான்ஸ்பர் போட்டால் பேசும் பொருளாகிவிடும் என்பதால் தான், ஏற்கனவே எடுத்து வைத்திருந்த டிரான்ஸ்பர் லிஸ்டுடன் சம்பந்தப்பட்ட அதிகாரியையும் சேர்த்து டிரான்ஸ்பர் வெளியிடப்பட்டது” என்றனர்.
— ஜெ. ஜான் கென்னடி