பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 44பவுன் தங்க நகைகள் திருட்டு !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் கல்கி தெரு பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவரது மனைவி அமிர்தலீலா வெயிலுக்கு கந்தபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இறந்து விட மகன் ஆனந்த ராஜ், மருமகள் இந்து ஆகியோருடன் வசித்து வருகிறார்.
ஆனந்த ராஜ் இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வேளாண்மை துறை பிரிவில் பணியாற்றி வருகிறார். இன்று அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் ஆனந்த ராஜ் மட்டும் வீட்டில் வந்து வழக்கம் போல சாப்பிட்டு விட்டு சென்றுள்ளார்.
பின்னர் மாலையில் பள்ளி முடிந்து அமிர்தலீலா வீட்டிற்கு வந்து பார்த்து வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகை மற்றும் 85 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு அவர் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் இனாம் மணியாச்சி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி பார்வதி. பரமசிவம் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். பார்வதி வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கடலைமிட்டாய் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இன்று இருவரும் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டனர். பார்வதி மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த சூட்கேஸ்சினை உடைத்து அதிலிருந்த ஒன்பது பவுன் தங்க நகை மற்றும் 18,000 ரொக்க பணம் திருடு போனதுகண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
திருட்டு சம்பவம் நடைபெற்ற இரண்டு வீடுகளையும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த இரண்டு திருட்டு சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு வீடுகளிலும் முன் கேட் பூட்டு உடைக்கப்படாமல் உள்ளே குதித்து வீட்டின் முகப்பு கதவு பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதால் இரண்டு திருட்டு சம்பவத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டதா ? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப் பகலில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் கூலி தொழிலாளி வீடுகளில் பூட்டை உடைத்து 44பவுன் தங்க நகை மற்றும் 1லட்சத்து 3000 ரொக்க பணம் திருடு போன சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
— மணிபாரதி