கலைஞருக்காக கப்பலை நிறுத்தினோம்! ஒரு ருசீகர சம்பவம் !
அப்போது 2018 ஆம் ஆண்டு , என்னுடைய நண்பர் மரியாதைக்குறிய உதய் ஐயாவும் , நானும் கப்பலில் முதல் இரு முதன்மைப் பொறுப்புகளில் (கேப்டன் மற்றும் சீப் இன்ஜினியர்) இருந்தோம். ஐயா அவர்களுக்கு வயது 55+ இருக்கும் , எனக்கோ 33. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் எப்போதும் நட்புடன் சகோதர பாசத்துடனும் இருந்தோம், இப்போதும் இருக்கிறோம்.
ஐயா அவர்கள் முரட்டு திமுக காரர், நானோ அப்போதைக்கு நடுநிலைவாதி,. கலைஞர் அவர்களின் உடல்நிலை வயதுமூப்பு காரணமாக பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த தருணம். எப்போதும் கலைஞர் குறித்தும் அவரது சாதனைகள் குறித்தும் உதய் ஐயா பேசிக்கொண்டே இருப்பார், கலைஞரின் உடல்நிலை குறித்த செய்திகளை பார்த்துக்கொண்டே இருப்பார். அன்று ஆகஸ்ட் 8 ம்தேதி , கப்பல் அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருக்கிறது, காலை 5 மணிக்கு என்னுடைய அறையின் தொலைபேசி சத்தம், கப்பலுக்கு ஏதோ பிரச்சினைதான் போல என தூக்கத்தில் இருந்து எழுந்து போனை எடுத்தேன்.
கலைஞர் இறந்துட்டாருங்க தர்மராஜ் என ஒரு அழுகுரல். கட்டுப்படுத்த முடியாத அழுகை. உடனே போனை வைத்துவிட்டு உதய் ஐயாவின் அறைக்கு விரைந்தேன்,. சிறு குழந்தை போல தேம்பி தேம்பி அழுதார், அப்போதுதான் எனக்கு புரிந்தது ஐயா அவர்களின் கலைஞர் மீதுள்ள முழு பாசம், மரியாதை, நன்றிக்கடன், எல்லாம்.
உதய் ஐயா வின் முழுப்பெயர் உதயசூரியன் . பரம்பரை திமுக ,. கலைஞரின் மீது தனிப்பாசம். அன்று காலை மெல்ல விடியத்தொடங்கியது. வாங்க சார் வெளியே ஒரு நடை போடலாம் என்றேன். இருவரும் மெஸ் ரூம் சென்று காபி குடித்தபின் கப்பலின் மெயின் டெக் என சொல்லக்கூடிய மேல்பகுதியில் நடக்க சென்றோம்,.என்னால் முடிந்த அளவு ஆறுதல் கூறினேன், இதை மறக்க மற்ற கதைகளை எல்லாம் பேசினோம், பிறகு ஓரளவு சமாதானமாகி இதிலிருந்து கொஞ்சம் மீண்டு வந்தவர் மீண்டும் கலைஞரைப்பற்றி பேசி வருத்தப்பட்டார்.
ஊரில் இருந்தால் உடனே சென்னை வந்திருப்போம் ஆனால் நாங்கள் இருந்ததோ அட்லாண்டிக் பெருங்கடல் , பிறகு எனக்கொரு ஐடியா வந்தது,. விடுங்க சார் 94 வயதில் எல்லாத்தையும் ஆண்டு அனுபவித்து தான் கலைஞர் அவர்கள் மறைந்துள்ளார், ஆகையால் கலைஞருக்காக நாம் ஒரு மௌன அஞ்சலி செலுத்துவோம் என்றேன். சிறிது சந்தோஷமானார் உதய் சார்,. 2ம் பொறியாளர், 3ம் பொறியாளர், செகன் மேட் ம் தமிழர்கள் அக்கப்பலில். அவர்களையும் அழைத்தேன்,. வாங்கபா கலைஞருக்கு மௌன அஞ்சலி செலுத்துவோம் என( திட்டிக்கிட்டே வந்திருப்பாங்க 😉😉😁)
அனைவரும் கப்பலின் யூனிபார்ம் போட்டு வர திட்டமிட்டோம். கலைஞரின் புகைப்படம் கலர் பிரின்ட் எடுக்க சொன்னேன். காலை 10 மணிக்கு கப்பலின் கட்டுப்பாட்டுத்தளமாகிய பிரிட்ஜ் க்கு வந்தடைந்தோம். பிறகு உதய் சார் கொஞ்சம் தேறியது போல தோன்றியது. அவர் ஒரு வயதான குழந்தை, அதிலும் கள்ளம் கபடமற்ற ஒரு மனிதர். ஈகோ என்பதே கிடையாதவர். மௌன அஞ்சலி செலுத்த கலைஞரின் புகைப்படத்துடன் ஐவரும் தயாரானோம்.
பிறகு எனக்கொரு சின்ன யோசனை,. ஏன் கப்பலை நிறுத்தி மௌன அஞ்சலி செலுத்தக்கூடாது என. ஐவரும் ஏற்றனர்,. இந்த உலகிலேயே கப்பலை நிறுத்தி கலைஞருக்கு மௌன அஞ்சலி செலுத்தியவர்கள் நாமாகத்தான் இருக்கனும் என்றேன். உதய் ஐயா செம ஹாப்பி,. பண்ணமுடியுமா என்றார்,. நாம் நினைத்தால் எதுவும் பண்ணலாம் என்றோம்,.
உடனே 2ம் பொறியாளர் , 3 ம் பொறியாளர் இயந்திர அறைக்குச் சென்று வேலையை துவங்கினர், 30 நிமிடத்தில் கப்பல் நிறுத்துவதற்கு தயார் செய்யப்பட்டு எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது,. நானும் உதய் சாரும் பிரிட்ஜ் ல் இருந்து கப்பலின் வேகத்தை 14 நாட்ஸ் ல் இருந்து படிப்படியாக குறைத்து 15 நிமிடங்களுக்கு பிறகு கப்பலின் வேகம் 4 நாட்ஸ் ஆனபிறகு கப்பலின் என்ஜினை நிறுத்தினோம்.
அனைவருக்கும் அதிர்ச்சி, ஏன் கப்பல் நிறுத்தப்படுகிறது, ஏதேனும் பிரச்சினையா , சிக்கலா, இயந்திர கோளாறா என பேசிக்கொண்டிருந்திருப்பார்கள் ஏனையவர்கள் குறிப்பாக வட இந்தியர்கள்,. எதைப்பற்றியும் கவலைப்படாமல் கப்பலின் மேல் தளத்தில் தமிழர்கள் ஐவரும் ஒன்றாக தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினோம்,.
கப்பல் காரனாக , சக கடலோடியாக எங்களுக்கு தெரிந்த முறையில் மரியாதை செலுத்தினோம். உதய் சார் மட்டுமல்ல நாங்கள் ஐவரும் மன நிறைவடைந்தோம். சில நிமிடங்களுக்கு பிறகு கப்பலை இயக்கினோம்,. 30 நிமிடங்களில் கப்பல் அதன் உச்ச வேகத்தை எட்டியது. நாங்களும் கலைந்து சென்று அன்றைய பணிகளில் கவனம் செலுத்தினோம்,. 24 மணிநேர கப்பலின் ஆவரேஜ் வேகம் ( average speed) சற்று குறைய அதை என்ஜினின் வேகம் உயர்த்தி சரிசெய்தோம். கப்பலின் ETA எனப்படும் இலக்கு நேரம் பாதிப்பு ஏற்பாடாமல் பார்த்துக்கொண்டோம்.
முரட்டு திமுக காரர்கள் கூட செய்யமுடியாததை, எத்தனை கோடி பணமிருந்தாலும் செய்ய முடியாததை செய்ததாக திருப்தி,. கலைஞர் மறைவிற்காக அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலை நிறுத்தி அஞ்சலி செலுத்தியது இன்றளவும் பசுமரத்தாணி போல என் நெஞ்சில்,.
( அன்று எடுத்த புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)
— இ.தர்மராஜ்