திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நெருக்கடி! கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? விலகுமா?
மதிமுக நிலை 2026 தேர்தல் களம் ? பேரா.தி.நெடுஞ்செழியன் With JTR
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதிமுகவிலிருந்து விலகிய திருப்பூர் துரைசாமி, பொடா அழகு சுந்தரம் உள்ளிட்ட 6 மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் இணைய முடிவெடுத்து திமுக தலைமையை அணுகியபோது, “மதிமுக எங்களோடு கூட்டணியில் உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் திமுகவில் இணைவது என்பது சரியாக இருக்காது என்று கண்டிப்புடன் கூறியது. அவர்களும் இதுவரை எந்தக் கட்சியிலும் இணையக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தனிக்கதை.
இந்நிலையில் 24.06.2025ஆம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினைச் சந்தித்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் 2021இல் மதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முத்துரத்தினம் தன்னை தாய் கழகத்தில் இணைத்துக்கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக கரைபோட்ட துண்டு அணிவித்து வருக… மகிழ்ச்சி…. என்று வரவேற்றுள்ளார்.

முத்துரத்தினம் திமுகவில் சேர்க்கப்பட்டது மதிமுகவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சமூக ஊடகத்தில் பேசிய மதிமுக பொருளாளர் செந்திலதிபன்,“எல்லா நிகழ்வுகளையும் தலைவர் வைகோ கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். திமுகவின் இந்த செயல் எங்களுக்கு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வரும் 29ஆம் நாள் தாயத்தில் நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அக் கூட்டத்தில் தலைவர் தலைமையில் நல்லதொரு முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.
இதற்கிடையில் கடந்த 22.06.2026ஆம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூணன் பேசும்போது திமுகவைக் கடுமையாக கண்டித்தும் குற்றச்சாட்டுகளும் கூறி பேசினார். இவர் பேச்சை இடைமறித்து மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் “பேசியதுபோதும்… நிறுத்துங்கள்” என்றும், அப்போது மேடையில் இருந்த வைகோ எந்த எதிர்வினையாற்றாமல் அமைதியாகவே இருந்துள்ளார். வைகோ பேசும்போது, “அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுணன் பேசியது மதிமுகவின் கருத்து அல்ல, அவரின் சொந்தக் கருத்து” என்று கூறியது நிலைமை கடுமையாக இருந்தது என்பதை உணரமுடிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதிமுக பொதுக்குழு தொடங்குவதற்கு முன் தமிழகத்திலிருந்து வரும் ஒரு நாளோடு. “மதிமுக பாஜகவுடன் கூட்டணி பேசத் தொடங்கியது என்றும் கூட்டணியில் மதிமுக 10 இடங்கள் + 1 மாநிலங்களைவை உறுப்பினர்” என்று செய்தி வெளியிட்டிருந்தது. பின்னர்,“வைகோ மாநிலங்களவை உறுப்பினராகிறார். துரைவைகோ மத்திய மந்திரி ஆகிறார்” என்றும் செய்தியை வெளியிட்டிருந்தது. நெருப்பில் இல்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு ஏற்ப வைகோ, துரைவைகோ உடனே இதற்குப் பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்தனர். பொதுக்குழு தொடங்குவதற்கு முதல்நாள் வைகோ பத்திரிக்கையாளரிடம் பேசும்போது,“மதிமுக யாரோடும் இரகசிய பேச்சு வார்த்தை நடத்தவில்லை. தேவையும் இல்லை. திமுக கூட்டணியில் தொடர்வோம்” என்று உறுதிபடக் கூறினார்.

அதே நாளில் மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது,“எங்கள் இயக்கத் தலைவர் வைகோ யாருடனுடம் கூட்டணி பேசவில்லை என்றும் பேசவேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்த நிலையில் அதுவே என் கருத்து. நடைபெறும் பொதுக்குழுவில் மதிமுக இழந்த மாநிலக் கட்சியின் அங்கீகாரத்தை மீண்டும் பெறும்வகையில் அதிக தொகுதிகளில் போட்டியிட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றும்” என்று கூறினார். பொதுக்குழுவில் துரைவைகோ கூறியபடி,“திமுக கூட்டணியில் மதிமுக 12 தொகுதிகளில் போட்டியிட தொகுதிகளைக் கேட்டு பெறவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனே சமூக ஊடகத்தில் மதிமுக போட்டியிடும் 12 தொகுதிகளின் பெயர்களும் போட்டியிடுவோர் பெயர்களும் வெளியிடப்பட்டன. மதிமுகவின் இந்த வேகம் திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.
மதிமுக பாஜகவோடு கூட்டணி பேசுகிறது என்ற நாளிதழ் செய்திக்கு மதிமுக உடனே எதிர்வினையாற்றாது, அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூணன் திமுகவைக் கடுமையாக தாக்கிபேசியது, 12 தொகுதிகளை கேட்டு பெறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதை திமுக இரசிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மதிமுக திமுக கூட்டணியில் இணைந்த கடந்த 11 ஆண்டு காலம் 50க்கும் மேற்பட்ட மதிமுக முன்னணியினர் திமுகவில் இணைய முயன்றபோது இணைத்துக்கொள்ளாமல் கூட்டணி தர்மத்தைக் கடைபிடித்த திமுக தலைமை, மதிமுக பொதுக்குழுவுக்குப் பின் பல்லடம் முத்துரத்தினத்தைத் திமுகவில் சேர்த்துக்கொண்டது என்பதன் மூலம் மதிமுகவுக்கு கூட்டணியில் இருக்க விரும்பினால் கொடுக்கும் தொகுதியை வாங்கிக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் கூட்டணியில் விலகிக் கொள்ளலாம் என்ற தகவலைத்தான் தெரிவித்துள்ளது என்பதே உண்மையாகும்.
இந்நிலையில் 29.06.2025ஆம் நடைபெறவுள்ள மதிமுக நிர்வாகக்குழுவில், வைகோ என்ன நடந்தாலும் திமுக கூட்டணியில் நீடிப்பது என்ற முடிவைத்தான் எடுப்பார் என்று மதிமுக உயர்மட்டத் தலைவர் அங்குசம் செய்தி இதழிடம் கூறினார். துரைவைகோ ஆதரவாளர்கள் திமுகவிடம் 12 தொகுதிகளைக் கேட்போம். கொடுக்க மறுத்தால் கூட்டணியில் விலகுவோம் என்று கருத்து தெரிவிப்பார். துரைவைகோவின் முடிவு வைகோவுக்கு எதிராகவே இருக்கும். பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்டுள்ள மோதல்போல், மதிமுகவில் தந்தை மகனுக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
மேலும், திமுகவிடம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளைப் பெற்று, 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்று, 2024 மக்களவைத் தேர்தலில், மதிமுக போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் அதிமுக+பாஜக கூட்டணியின் வாக்குகளைவிட குறைவாகவே பெற்றுள்ளன. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு எந்த செயல்பாடுகளையும் துரைவைகோ எடுக்காமல் திருச்சி மக்கனவை உறுப்பினர் பணியை மட்டும் செய்தால் கட்சி வளர்ந்துவிடுமா? கட்சியின் கட்டமைப்பு, தேர்தல்களில் பெறும் வாக்குகள்தான் மூலம்தான் திமுகவிடம் அதிக தொகுதிகளைப் பெறமுடியும் என்ற எண்ணம் இல்லாமல் திமுகவை மிரட்டி அதிகம் இடம் வாங்க முடியும் என்ற துரைவைகோவின் சிந்தனை மதிமுகவை அழிவுப்பாதைக்குத்தான் கொண்டு செல்லும். அவரைச் சுற்றி அரசியல் செய்யும் சிலர் கட்சி வளர்ச்சியைவிடம் தங்களின் வளர்ச்சியை விரும்புவதன் இந்த முடிவுக்கு அடிப்படிக் காரணம்” என்று கூறினார்.
29ஆம் நாள் நடைபெறும் மதிமுக நிர்வாகக்குழுக் கூட்டத்தில் வைகோ எடுக்கும் முடிவுக்கு துரைவைகோ ஆதரவு தெரிவிப்பாரா? தந்தை எதிர்த்து தன் முடிவை எடுப்பாரா? தந்தை – மகன் மோதல் நடக்குமா? என்பதற்குப் பதில் விரைவில் தெரிந்துவிடும். காத்திருப்போம்.
— ஆதவன்