காவல்துறையினருக்கு பேரிடர் கால மீட்பு மற்றும் முதலுதவி பயிற்சி வகுப்பு !
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், இ.கா.ப அறிவுறுத்தலின் பேரில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டம், ஒழுங்கு மற்றும் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு First Heart Foundation என்ற பேரிடர் கால மீட்பு மற்றும் முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் (28.06.2025) காலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சாலை விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் முதலுதவி சிகிச்சை அளித்தல் மற்றும் அச்சூழலை காவல்துறையினர் கையாளும் முறைகள் பற்றி செயல்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த சுமார் 300 காவல்துறையினர் பங்கேற்றனர்.
மேலும் பயிற்சி வகுப்பின் முடிவில் சிறப்புரையாற்றிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவலர்களுக்கு முதலுதவி சிகிச்சையின் முக்கியத்துவம் பற்றியும், அதில் காவல்துறையின் இன்றியமையாத பங்களிப்பு பற்றி விவரித்து கூறியதுடன், இப்பயிற்சி வகுப்பில் கற்றுக்கொண்ட வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியதுடன், பயிற்சியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கியும் ஊக்குவித்தார்.