“வக்காளி இந்த டி.எஸ்.பி.ய நான் பார்த்துக்கிறேன்” …. ”வா நானும் க*ளன் தான் பார்ப்போம்” … மல்லுகட்டிய திமுக நிர்வாகி vs டி.எஸ்.பி. !
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி இருந்து வருகிறார். இவர் பட்டியலினத்தைச் சார்ந்தவர் . துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஞானமணி என்பவரும் இருந்து வருகின்றார் . இவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் தமிழன் திமுக பேரூர் செயலாளராக இருந்து வருகின்றார் . இவர்களது மகன் வழக்கறிஞர் ஸ்டீபன் திமுக தேனி வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்து வருகின்றார் .
பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகின்றது . இந்த நிலையில் இன்று ஆக. 11-ஆம் தேதி கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டிமந்தை பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் 1.18 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை துணைத் தலைவரின் உறவினரான அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் பணியை மேற்கொண்டுள்ளார் .
அப்போது அங்கு வந்த பேரூராட்சி தலைவர் மற்றும் கெங்குவார்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராஜவேல் உள்ளிட்ட பலர் அரசு ஒப்பந்ததாரரிடம் முறையாக பணிகளை மேற்கொள்ளுமாறு பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு அருகே இருந்த பேரூராட்சி துணைத் தலைவர் ஞானமணி மற்றும் அவரது கணவர் தமிழன், இவர்களது மகன் வழக்கறிஞர் ஸ்டீபன் ஆகியோர், ”இதையெல்லாம் நீ கேட்கக்கூடாது அதிகாரிகள் எங்களிடம் கேட்கட்டும் நாங்கள் அதற்கு பதில் கூறுகிறோம்” என பெண் பேரூராட்சி தலைவர் என்றும் பாராமல் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் இதனை வீடியோ எடுத்த பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராஜவேலுவை திமுக தேனி வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஸ்டீபன் தாக்கியுள்ளார் . இதனால் அங்கு இரு தரப்பினரிடையே மோதல் உருவாகியுள்ளது.
அதன் பின் கெங்குவார்பட்டி பிரிவு பகுதியில் கொடைக்கானல் செல்லும் முக்கிய சாலையில் பேரூராட்சி துணைத்தலைவரின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது சமூகத்தினர் பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வியின் ஆதரவாளர்களும் அவரது சமூகத்தினரும் காட்ரோடு பகுதியில் தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சீராளன் , மற்றும் காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த், பெரியகுளம் வட்டாட்சியர் மருது பாண்டியன் உட்பட அனைவரும் இரு தரப்பினரிடையே தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியும் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .
பேரூராட்சி துணைத் தலைவர் ஞானமணி தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்ட இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துணை கண்காணிப்பாளர் சீராளனை திமுக பேரூர் செயலாளர் தமிழன், ”வக்காளி இந்த டிஎஸ்பிஐ நான் பார்த்துக் கொள்கிறேன்” என மிரட்ட, பதிலுக்கு டி.எஸ்.பி. சீராளன் ”நானும் கள்ளன் தான் வா பார்த்துக் கொள்வோம்” என ஆக்ரோசமாக பேசிக் கொண்டதால் இந்தப் பகுதியில் வெறும் பதட்டமான சூழல் நிலவி வந்தது.
ஆளும் திமுகவைச் சேர்ந்த பேரூர் செயலாளர் தமிழன் அரசு ஊழியரான டி.எஸ்.பி.ஐ பார்த்து இவ்வாறு பேசியது அந்தப் பகுதியில் இருந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது . எது எப்படியோ ஒரு வழியாக காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து இரு வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இரு வேறு சமூகத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த பிரச்சனையில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராஜவேல், மற்றும் திமுக தேனி வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஸ்டீபன் என தனித்தனியே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு குடும்பத்தினரிடையே நிலவி வந்த முன் விரோதத்தை இரு சமூகப் பிரச்சனையாக மாற்றி பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில், இதனை தொடர்ச்சியாக, பெரும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்னதாகவே தி.மு.க.வின் இரண்டு விசுவாசிகளையும், தி.மு.க. தலைமை கழகம் அழைத்து உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
— ஜெய்ஸ்ரீராம்.